வந்தே பாரத் இரயிலில் இன்னும் எத்தனை பிரச்சனை தாங்க ஏற்படும்!! உத்திர பிரதேசத்தில் மறுபடியும் ஒண்ணு...
மேட் இன் இந்தியா இரயிலாக சென்னை ஐசிஎஃப்-இல் உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட பெங்களூர் வழியாக சென்னை -மைசூர் இடையே வந்தே பாரத் இரயில் சேவை துவங்கப்பட்டது.
இந்த சேவையினை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் துவங்கி வைத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு நாடு முழுக்க வந்தே பாரத் இரயில் சேவையை விரிவுப்படுத்த மத்திய அரசு ஒரு பக்கம் முனைப்புடன் இருக்க, மறுப்பக்கம் வந்தே பாரத் இரயில்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. குறிப்பாக, தண்டவாளத்தை கடக்கும் மாடுகள் மீது இரயில் மோதி சேதமாகுவது பலரது கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி, இரயிலின் தரத்தின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு, வந்தே பாரத் இரயில் மிக அதிவேகமாக செல்வதால் மாடுகள் உள்பட பிராணிகளால் உடனடியாக ரியாக்ட் செய்ய முடிவதில்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், அதனால் இரயிலின் முன்பக்கம் சேதமாகுவது இரயில் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதாக சமூக ஆர்வலர்களும், பயணிகளும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இரயிலில் மாடு, ஆடுகள் சிக்கி உயிரிழப்பது இப்போது அல்ல... பல ஆண்டுகளாகவே நடைபெற்று கொண்டிருக்கும் ஒன்றுதான்.
ஆனால் அதன் காரணமாக இரயிலில் பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் வந்தே பாரத் இரயில் கடந்த சில மாதங்களிலேயே இவ்வாறான சம்பவங்களினால் பழுதுகளை சந்தித்திருப்பது அதன் தரத்தின் மீது பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. இதற்காகவே முதற்கட்டமாக சில மாநிலங்களில் தண்டவாளங்களுக்கு இருபுறமும் வேலி அமைக்க இந்திய இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, தற்போது வேறொரு பிரச்சனை வந்தே பார்த் இரயில் ஒன்றில் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு 22436 என்ற எண் கொண்ட வந்தே பாரத் விரைவு இரயில் ஒன்று கடந்த டிசம்பர் 9ஆம் தேதி காலை புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இடையில் பிரயக்ராஜ் மண்டலத்திற்கு உட்பட்ட பர்வாரி இரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது இரயிலின் சக்கரங்களில் இருந்து வழக்கத்திற்கு மாறான இரைச்சல்கள் ஏற்படுவதை லோகோ பைலட் கண்டறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இரயில் பர்வாரி இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, இரயில் முழுக்க சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏறக்குறைய 45 நிமிடங்கள் அந்த இரயில் பர்வாரி இரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் பிரச்சனை சரிப்பார்க்கப்பட்ட பின்பே பிரயக்ராஜ் இரயில் நிலையத்தை நோக்கி சென்றுள்ளது. வழக்கமாக அந்த இரயில் மதியம் 12:08 மணியளவில் பிரயக்ராஜ் நிலையத்தை சென்றடையும்.
ஆனால் இடைப்பட்ட இந்த பிரச்சனையினால் சுமார் 2 மணிநேரங்கள் தாமதமாக பிரயக்ராஜ் இரயில் நிலையத்தை சென்றடைந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்திற்கான காரணமாக நார்த் சென்ட்ரல் இரயில்வேவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) ஹிமான்ஷு ஷேகர் உபத்யாய் பின்னர் அளித்த பேட்டியில், "இந்த அதிவேக இரயிலின் லோகோ பைலட் முதல் பெட்டியின் சக்கரங்களில் இருந்து சில அசாதாரண சத்தங்களை கேட்டுள்ளார்.
அதை சரிப்பார்க்க, இரயிலை பர்வாரி இரயில் நிலையத்தில் நிறுத்தினார். அங்கு, தகுதிவாய்ந்த ஊழியர்கள் சோதனை செய்து, இரயிலின் சக்கரம் ஒன்றில் சில உலோகத் துண்டுகள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர்." என்றார். புது டெல்லியில் இருந்து வாரணாசிக்கு செல்லும் இந்த வந்தே பாரத் இரயில் இடையில் கான்பூர் மற்றும் பிரயக்ராஜ் என்ற இரு இரயில் நிலையங்களில் மட்டுமே நிற்பது வழக்கம். ஆனால் ஏற்பட்ட இந்த எதிர்பாராத பிரச்சனையினால் பர்வாரி இரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நின்று சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications








