இந்திய இரயில்களின் தரம் எந்த அளவிற்கு இருக்குதுனு பாருங்க! வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்த இரயில்வே
வந்தே பாரத் (Vande Bharat) இரயிலின் டிரைவர் கேபினுக்குள் இருந்து தண்டவாளத்தை எவ்வாறு காண்கிறார் என்பதை வீடியோ ஒன்றின் மூலமாக இந்தியன் இரயில்வேஸ் (Indian Railways) காட்டியுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், வந்தே பாரத் இரயில்களை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
வந்தே பாரத் இரயில்கள் இந்திய தயாரிப்பாக சென்னை ஐசிஎஃப்-இல் உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்நாட்டு தயாரிப்பு என்பதினாலேயே வந்தே பாரத் இரயில்களை நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் இந்தியன் இரயில்வே தீவிரமாக உள்ளது. சென்னையில் இருந்தும் பெங்களூர், கோயம்புத்தூர் என சில நகரங்களுக்கு வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதேநேரம் மறுப்பக்கம், ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்காக ஏசி வசதி இல்லாத அம்ரித் பாரத் இரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அம்ரித் பாரத் இரயிலை சமீபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிலையில், வந்தே பாரத் இரயிலின் டிரைவர் கேபினுக்குள் இருந்து தண்டவாள காட்சி எப்படி இருக்கும் என்பதை வீடியோ ஒன்றின் மூலம் இந்தியன் இரயில்வேஸ் காட்டி உள்ளது.
இந்தியன் இரயில்வேஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோ, வந்தே பாரத் இரயில் ஒன்றின் கேபினுக்குள் இருந்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வீடியோ ஆனது ஒரு டைம் லாப்ஸ் (Time Lapse) வீடியோ ஆகும். அதாவது, அதிக நேரமாக எடுக்கப்பட்ட காட்சிகளை குறைந்த நேரத்தில் ஓடக்கூடிய வகையில் காட்டுவதாகும்.
இதனால்தான் வீடியோவில், வழக்கத்தை காட்டிலும் அதிக வேகத்தில் இரயில் இயங்குவதுபோல் தெரிகிறது. இதுகுறித்த டுவிட்டர் பதிவில் இந்தியன் இரயில்வேஸ், "ஒரு சிலர் (டிரைவர்கள்) மட்டுமே பெறும் வந்தே பாரத்தின் அனுபவம் உங்கள் பார்வைக்கு! வந்தே பாரத் அதன் இலக்கை நோக்கி முன்னேறும்போது, லோகோ பைலட்டின் பார்வையில் இருந்து இணையற்ற கண்ணோட்டத்தை காணுங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 1.22 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர், இந்த வீடியோ குறைந்தது 10 மடங்கு வேகம் அதிகப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், சிலரோ, இப்போது முன்பதிவில்லா பெட்டிகள் மக்கள் பலர் கூட்ட நெரிசலில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் பயணம் செய்கின்றனர் என்பதை படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனும் தெரிவித்துள்ளனர்.

வந்தே பாரத் இரயில்கள் எந்த அளவிற்கு பிரபலமானதாக உள்ளதோ அதே அளவிற்கு ஆரம்பத்தில் இருந்து சர்ச்சைக்கு உள்ளானவைகளாகவும் உள்ளன. சமீபத்தில் கூட, பஞ்சாப் மாநிலத்தில் வந்தே பாரத் இரயில் ஒன்று மாடு மீது மோதி உள்ளது. பஞ்சாப்பில் குருக்ஷேத்ரா பகுதிக்கு அருகே மாடு தண்டவாளத்தை கடக்கும்போது இந்த மோதல் நடந்துள்ளது. இதில் இரயிலின் ஒரு பெட்டியில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் இரயிலின் முக்கிய சிறப்பம்சமே அதன் அதிவேகம் தான். பயண நேரம் குறையும் என்பதும் வந்தே பாரத் இரயில்களை இந்தியன் இரயில்வே ஊக்கப்படுத்துவதற்கு ஒரு காரணம் ஆகும். இந்திய இரயில்வே தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் எந்த அளவிற்கு விசாலமான பார்வையில் டிரைவர்கள் வந்தே பாரத் இரயிலை இயக்குகின்றனர் என்பதை அறியலாம்.



Click it and Unblock the Notifications









