இந்தியன் இரயில்வேயின் அடுத்த மேஜிக்... எல்லாரும் வாயை பிளந்து பார்க்க போகிறோம்!!
வந்தே மெட்ரோ (Vande Metro), இந்திய இரயில்வேயின் அடுத்த புதிய மைல்கல். வந்தே பாரத் இரயில் எவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாகியதோ அதேபோன்று ஹிட் அடிக்கக்கூடிய அடுத்த திட்டமாக வந்தே மெட்ரோ பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நீண்ட தொலைவு பயணங்களுக்கு வந்தே பாரத் எவ்வாறு மக்களின் பிரதான போக்குவரத்தாக மாறி வருகிறதோ அதற்கு இணையாக, குறுகிய தொலைவு பயணங்களுக்கு ஏற்றதாக வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது, முக்கியமான இரு நகரங்களுக்கு இடையே இயங்கக்கூடிய வகையில் வந்தே மெட்ரோ இரயில்கள் உருவாக்கப்படுகின்றன. மெட்ரோ இரயில்கள் உடன் வந்தே மெட்ரோ இரயில்களை குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஏனெனில், மெட்ரோ இரயில்கள் பிரத்யேகமான தண்டவாளத்தில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்படுகின்றன. ஆனால், வந்தே மெட்ரோ இரயில்கள் ஆனவை வந்தே பாரத் இரயில்களை போன்று வழக்கமான தண்டவாளத்தில் இயங்கக்கூடியவை ஆகும். வந்தே மெட்ரோ இரயில்களை இந்தியன் இரயில்வே கொண்டுவருவதன் முக்கிய நோக்கம், மெயின்லைனில் இயங்கும் EMU இரயில்களை அகற்றுவதாகும்.

மெயின்லைன் EMU இரயில்கள் சென்னையில் சற்று குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் போன்ற அருகில் உள்ள முக்கிய நகரங்களுக்கு வேகமாக செல்வதற்காக முக்கியமான லோக்கல் இரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் இரயில்களை பார்த்திருப்பீர்கள் அவைதான் மெயின்லைன் இஎம்யூ இரயில்கள் ஆகும்.
இவற்றிற்கு பதிலாக பயன்படுத்தவே வந்தே மெட்ரோ இரயில்கள் உருவாக்கப்படுகின்றன. வந்தே மெட்ரோ இரயில்களின் படங்களை ஏற்கனவே உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், கிட்டத்தட்ட கடந்த 1 வருடங்களுக்கும் மேலாக வந்தே மெட்ரோ இரயில்களை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வந்தே மெட்ரோ குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டார்.

சென்னை ஐசிஎஃப் மற்றும் பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா ஆர்சிஎஃப் ஆலைகளில் வந்தே மெட்ரோ இரயில்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் நிறைவு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஒவ்வொரு வந்தே மெட்ரோ இரயில்களாக சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும். இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிப்போர் இன்னும் சில மாதங்களில் வந்தே மெட்ரோ இரயில்களை தண்டவாளத்தில் காணலாம்.
வந்தே பாரத் இரயில்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 160kmph வேகத்தில் இயங்கக்கூடியவையாக உள்ளன. ஆனால், வந்தே மெட்ரோ இரயிலின் டாப்-ஸ்பீடை 130kmph என்கிற அளவில் தான் எதிர்பார்க்க முடியும். இருப்பினும், வந்தே மெட்ரோ இரயில்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இரயில்கள் ஏசி வசதி உடன் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

இதனால், பயணத்தின்போது கதவுகள் மூடப்படும் என்பதால் தூசி, துகள்கள் அற்ற பயணத்தை பெற முடியும். வந்தே மெட்ரோ இரயிலில் கதவுகள் தானாக திறந்து மூடும் வகையில் கொடுக்கப்படும். மேலும், வந்தே பாரத் இரயில்களை போன்று வேகமான இயக்கத்திற்காக இரயிலுக்கு உள்ளே இருக்கைகள் மற்றும் ரேக்குகள் எடை குறைவான அலுமினியத்தில் உருவாக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தகவல்களை வழங்க ஒவ்வொரு பெட்டியிலும் எல்சிடி திரைகள் இருக்கும்.
மொபைல் போன் இப்போது எல்லாரிடத்திலும் அத்தியாவசியமானதாக மாறிவிட்டதால், போன் சார்ஜிங் வசதியும் இருக்கும். விபத்தை தவிர்க்க கவாச் இரயில் மோதல் தடுப்பு அமைப்பை பெற்றுவர உள்ள வந்தே மெட்ரோ இரயில்களில் நன்கு அகலமான பனோராமிக் சீல் செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் இடம்பெற்றுள்ளன. வந்தே மெட்ரோவின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமரும் வகையிலும், 200 பேர் நின்றுக் கொண்டு பயணம் செய்யும் வகையிலும் இடவசதி கொடுக்கப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னும் சில வருடங்களில் மொத்தமாகவே வந்தே பாரத் இரயில்கள் தான் இயங்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வந்தே பாரத் இரயில்களை மிக நீண்ட தொலைவிற்கும், வந்தே மெட்ரோ இரயில்களை குறுகிய தொலைவிற்கும் வருங்காலங்களில் பயன்படுத்த போகிறோம். ஆக, இந்தியன் இரயில்வே தனது பிளானில் பக்காவாக உள்ளது. இந்த இரயில்களின் முக்கிய சிறப்பம்சம் ஏசி வசதி ஆகும். இந்தியா போன்ற வெப்பமான நாட்டிற்கு இது மிகவும் தேவையான ஒன்று.


Click it and Unblock the Notifications









