ஏசி கிடையாது!! டிக்கெட் கட்டணமும் கம்மியா இருக்கும் போல - இந்தியன் இரயில்வே எல்லாத்துக்கும் ரெடி!
வந்தே பாரத் (Vande Bharat) இரயில்களில் டிக்கெட் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதாக மக்களிடையே பேச்சுக்கள் எழுந்துவந்த நிலையில், வந்தே சாதாரண் இரயில்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இந்த நிலையில், பெங்களூரில் இருந்து வந்தே சாதாரண் இரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்கிறது என்றால், நிச்சயமாக அந்த நாட்டின் பொது போக்குவரத்துகளின் தரமும் முன்னேற்றத்தை காணும். அந்த வகையில், நம் இந்தியாவில் மெட்ரோ இரயில்கள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய மாநகரங்களுக்கும் வந்துவிட்டன. நகரத்திற்குள் இயங்குவதற்கு மெட்ரோ இரயில்கள் ஏற்றதாக இருப்பதை போல், தொலைத்தூர பயணங்களுக்கு வந்தே பாரத் இரயில்கள் கொண்டுவரப்படுகின்றன.

நீண்ட தொலைவுக்கு இயங்கக்கூடிய இரயில்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தாலும், பயண நேரத்தை குறைக்க, அதிவேகமாக இயங்கக்கூடிய வகையில் வந்தே பாரத் இரயில்கள் நமது சென்னை உள்பட நிறைய நகரங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும், மற்ற இரயில்களை காட்டிலும் வந்தே பாரத் இரயில்களில் டிக்கெட் கட்டணம் ஆனது அதிகமாக உள்ளதால், ஏழை, எளியோரால் பயன்படுத்த முடிவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய இரயில்வே நிர்வாகம் வந்தே சாதாரண் இரயில்களை பொது சேவைக்கு விரைவில் கொண்டுவருகிறது. வந்தே பாரத் இரயில்களை விட சற்று குறைவான வேகத்தில், ஏசி வசதி இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் வந்தே சாதாரண் இரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனாலேயே, இந்த இரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடியது என்றாலும், மற்ற இரயில்களை காட்டிலும் வேகமாக இருக்கும். இதனால், வந்தே சாதாரண் இரயில்களை சூப்பர்ஃபாஸ்ட் பிரிவில் இந்தியன் இரயில்வே வைத்துள்ளது. வந்தே சாதாரண் இரயிலுக்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என இன்னொரு பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரயில்களில் புஷ் & புல் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 12 படுக்கை பெட்டிகள் உடன் மொத்தம் 22 பெட்டிகளுடன் இயங்கவுள்ள இந்த இரயிலில் என்ஜின் பெட்டி ஆனது வந்தே பாரத்தில் உள்ளதை போல் இரு முனைகளிலும் இருக்கும். இத்தகைய வந்தே சாதாரண் இரயில்கள் பெங்களூரில் இருந்து இயக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மால்டா என்ற பகுதிக்கு ஏசி வசதி இல்லாத வந்தே சாதாரண் இரயில்கள் இயக்கப்பட உள்ளனவாம். அதேபோல், டெல்லியில் இருந்து தார்பாங்கா வரையிலும் வந்தே சாதாரண் இரயில் சேவையை வழங்க இரயில்வே தயாராகி வருகிறது. அதேநேரம் மறுப்பக்கம், பெங்களூர்- கோயம்புத்தூர் வழித்தடம் உள்பட மொத்தம் 6 வழித்தடங்களில் புதியதாக வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட உள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதியதாக சீரமைக்கப்பட்ட இரயில் நிலையம் மற்றும் மர்யாடா புருஷோத்தம் ஸ்ரீ ராம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த திறப்பு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிரதமரின் சொந்த நாடாளுமன்ற தொகுதி அதுதான். அந்த சமயத்தில், இந்த 6 வந்தே பாரத் இரயில் சேவைகளை பிரதமர் காணொலி காட்சி மூலம் துவங்கி வைப்பார் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் இரயில்கள் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு வந்தே சாதாரண் இரயில்களும் அவசியமாகும். ஏனெனில் நம் நாட்டில் இன்னமும் நிறைய பேர் மிடில்-கிளாஸ் வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களது விரைவான போக்குவரத்துக்கு வந்தே சாதாரண் இரயில்கள் அவசியமானவை ஆகும்.
Image Courtesy: X/@Maya_Lokam_


Click it and Unblock the Notifications








