போக்குவரத்து விதி மீறிய குற்றத்திற்காக போலீஸிடம் அபராதம் பெற்ற பிரபல நடிகர் இவர்தான்..!!
காரில் சீட் பெல்டு அணியாமல் செல்ஃபி எடுத்த முன்னணி நடிகருக்கு அபராதம் போட்ட போலீசார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வருண் தவன். இவர் நடித்த பதல்பூர், ஜுத்வா 2 போன்ற படங்கள் இந்தியளவில் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தன.

சமீபத்தில் இவர் ஓடும் காரில் சீட் பெல்டு அணியாமல் இருந்ததாக கூறி, வருண் தவனுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மும்பையில் டிராஃபிக்கில் வருண் தவன் சென்ற கார் நிற்க, அதை அருகில் ஆட்டோவில் இருந்த ஒரு ரசிகை பார்த்துள்ளார்.
உடனே ரசிகையும் அவரிடம் செல்ஃபி எடுக்க முடியுமா என்று கேட்க, அதற்கு வருண் தவனும் சம்மதம் தெரிவித்தார்.

ரசிகையின் கைப்பேசியை பெற்று காரிலிருந்தபடியே தலையை வெளியே நீட்டி வருண் தவன் செல்ஃபி எடுத்தார்.
இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டு இருந்த போது, டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்கு விழுந்துவிட்டது.

இதனால் வருண் தவனுக்கு பின்னே நின்றிருந்த வாகனங்கள் எதுவும் சிக்னலை கடக்க முடியவில்லை. மேலும் வருண் தவன் ரசிகையுடன் டிராஃபிக் நிறுத்தத்தில் செல்ஃபி எடுத்தது மற்றொரு கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.

அந்த புகைப்படம் மும்பை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் அதை ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருண் தவனை டேக் செய்தனர்.

மேலும் இயக்கத்தில் இருக்கும் கார் ஒன்றில் பயணிப்பவர்கள் சீட் பெல்டு அணியவேண்டும் என்பது கட்டாயம். அதை நடிகர் வருண் தவன் செய்யவில்லை.
இதன்காரணமாக சமூகத்திற்கு தவறான உதாரணத்தை வருண் தவன் ஏற்படுத்தியுள்ளார். மேலும் இதையே அவரது ரசிகர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது, என்று ட்விட்டர் பதிவில் மும்பை போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக முன்னணியில் இருக்கும் வருண் தவன், சமூக கடமைகளிலிருந்து தவறக்கூடாது என போலீசார் மேலும் பதிவிட்டுள்ளனர்.

இறுதியாக காரில் சீட் பெல்டு அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வருண் தவனுக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தன்று எஸ்யூவி காரில் சென்ற வருண் தவன், டிராஃபிக்கில் காத்திருந்தார். அப்போது ஒரு பெண் ரசிகை அவரை புகைப்படம் எடுக்க முயல, அதற்கு வருண் தவன், ரசிகையுடன் சேர்ந்து காரில் இருந்தபடியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
மும்பை போலீஸின் பதிவிற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள நடிகர் வருண் தவன், சீட் பெல்டு அணியாத தவறுக்கு மனிப்பு கேட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செயலை மீண்டும் செய்யமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

காரில் நாம் ஏறிய உடன், ஸ்டார்ட் செய்யும் முன், சீட் பெல்டு அணிவது தான் முதல் கடமை. கார் டிராஃபிக் நிறுத்தத்தில் இருந்தாலும், இயக்கத்தில் இருந்தாலும் சீட் பெல்டு அணிவது மிக மிக அவசியம்.

பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்வது என்பது நமது நாட்டில் பல வாகன ஓட்டிகளுக்கு பெரிய சங்கடமாக இருந்து வருகிறது. பைக்கில் ஹெல்மெட் அணிவது, காரில் சீட் பெல்டு அணிவது என்பது அடிப்படையான பாதுகாப்பு அறிவு.

அதை ஏற்க மறுப்பவர்கள், நிச்சயம் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. அதற்கு நடிகர் என்ற பொறுப்பில் இருப்பவர்கள் கூட விதி விலக்கு அல்ல என்பதை தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








