கார்களின் ஹாரன் சவுண்டை மாற்ற ஒன்றிய அரசு திட்டம்... இனி எப்படி சவுண்ட் வரும்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!
கார்களின் ஹாரன் சப்தத்தை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் தற்போது இருக்கும் ஹாரன்களின் சப்தம் தொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அதிருப்தி தெரிவித்துள்ளார். அத்துடன் கார் ஹாரன் சப்தத்தை மாற்றுவதற்கான வேலைகளை தனது துறை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இந்திய இசை கருவிகளை போன்று கார்களின் ஹாரன் சப்தம் ஒலிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு கட்டாயமாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''நாக்பூரில் 11வது தளத்தில் நான் வசித்து வருகிறேன். நான் தினமும் காலையில் 1 மணி நேரம் யோகா செய்வேன்.

ஆனால் காலை நேர அமைதியை ஹாரன் சப்தம் சீர்குலைத்து விடுகிறது. இந்த தொந்தரவிற்கு பிறகுதான், கார்களின் ஹாரன் சப்தம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்ற யோசனை எனக்கு வந்தது. கார் ஹாரன்களின் சப்தம் இந்திய இசைக்கருவிகளின் சப்தத்தை போன்று இருக்க வேண்டும் என நாங்கள் யோசிக்க தொடங்கி விட்டோம்.

தற்போது அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கார்களின் ஹாரனில் இருந்து தபேலா, வயலின் மற்றும் புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளின் சப்தம் கேட்க வேண்டும்'' என்றார். அமைச்சர் நிதின் கட்காரியின் இந்த பேச்சு தற்போது இந்திய மக்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமைச்சர் நிதின் கட்காரி இந்திய வாகனங்கள் மிகவும் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் என விரும்ப கூடியவர். எனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் ஏர்பேக் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை ஒன்றிய அரசு சமீப காலமாக தொடர்ச்சியாக கட்டாயமாக்கி வருகிறது.

அரசின் உத்தரவிற்கு இணங்கும் வகையில், கார் உற்பத்தி நிறுவனங்களும், பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து கொண்டுள்ளன. எனவே இந்திய கார்கள் தற்போது பாதுகாப்பானவையாக மாறி கொண்டு வருகின்றன. ஆனால் கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் நிறைய உள்ளது.

அதேபோல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக், சிஎன்ஜி, எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் அமைச்சர் நிதின் கட்காரி ஊக்குவித்து வருகிறார். இந்த வரிசையில் அவர் தற்போது கார்களின் ஹாரன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இது உண்மையிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பதில் இந்தியர்கள் வல்லவர்கள்! தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதால் இரைச்சல் ஏற்படும். இது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை இங்குள்ள வாகன ஓட்டிகள் பலரும் உணர்வதில்லை.

நம் நாட்டில் ஹாரன் அடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள் நிறைய உள்ளன. ஆனால் நம் ஆட்கள் இதை பின்பற்றுவதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஹாரன்களை அடிக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி, ஹாரனின் அதிகபட்ச சப்தம் 112 டெசிபலுக்கு அதிகமாக இருக்க கூடாது. ஆனால் வாகன ஓட்டிகள் பலர் இதனை பின்பற்றுவதில்லை.

அதிக சப்தம் ஒலிப்பும் ஹாரன்களை தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்கின்றனர். இத்தகைய ஹாரன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஒரு சிலர் தொடர்ந்து அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர்.

கேரளாவில் தற்போது காவல் துறையினருக்கு அதிநவீன சவுண்ட் மீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஹாரன் சப்தத்தை துல்லியமாக தெரிவித்து விடும். அனுமதிக்கப்பட்டதை விட அதிக சப்தத்தை ஹாரன் எழுப்பினால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இத்தகைய சோதனைகள் நடைபெறுகிறதா? என்பது தெரியவில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








