காவல் துறை திடீர் நடவடிக்கை... நிலுவையில் உள்ள அபராதத்தை செலுத்த வாகன ஓட்டிகள் தீவிரம்... ஏன் தெரியுமா?
நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்த வாகன ஓட்டிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வாகன ஓட்டிகள் பலர் இன்னமும் போக்குவரத்து விதிமுறைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி கொண்டே உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் நிறைய பேர் அபராதத்தை முறையாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பலர், மிக நீண்ட நாட்களாக அபராதத்தை செலுத்தவில்லை. அவர்கள் செலுத்த வேண்டிய அபராதம் தொடர்ந்து நிலுவையிலேயே இருக்கிறது.

இந்த சூழலில் நிலுவையில் உள்ள அபராத தொகைகளுக்கு தெலங்கானா காவல் துறையினர் சிறப்பு தள்ளுபடியை வழங்க தொடங்கியுள்ளனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தள்ளுபடிகள் ஒரு மாத காலத்திற்கு பொருந்தும். அதாவது மார்ச் 1ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரை அபராத தொகைளுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வகையை சேர்ந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அபராத தொகையில் 25 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. உதாரணத்திற்கு 1,000 ரூபாய் அபராதம் என்றால், வாகன உரிமையாளர்கள் 250 ரூபாயை மட்டும் செதுத்தினால் போதும். மீதி 750 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

அதே நேரத்தில் இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் அபராத தொகையில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, நிலுவையில் உள்ள அபராத தொகைகளை செலுத்தி விட வாகன ஓட்டிகள் திட்டமிட்டுள்ளனர்.

எனவே நடப்பு மார்ச் மாதத்தில் நிலுவையில் உள்ள அபராத தொகைகள் அதிகமாக வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இது வருமானத்தை பெருக்கும் முயற்சியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பிரச்னையால் உலகம் கடந்த 2 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலருக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளால் பலரால் சரியான நேரத்தில் அபராத தொகையை செலுத்த முடியவில்லை.

எனவே வாகன ஓட்டிகளுக்கு ஓரளவிற்கு நிவாரணம் வழங்கும் வகையில்தான் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வருவாயை பெருக்குவதற்காக மட்டும் இந்த திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவில்லை. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு சற்றேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது'' என்றார்.

நிலுவையில் உள்ள அபராத தொகைகளுக்கு தெலங்கானா காவல் துறையினர் தள்ளுபடி வழங்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இந்த திட்டத்தை காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்துள்ளனர். அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் தள்ளுபடி வழங்கினாலும், இதெல்லாம் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு அதுதான் நிரந்தர தீர்வு.

நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் சிக்கி கொள்ளாமலும் தப்பிக்கலாம். நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது உங்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications