பழைய வாகனங்களுக்கு ஆப்பு... அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி... என்னனு தெரியுமா?
பழைய வாகன அழிப்பு கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பழைய வாகன அழிப்பு கொள்கையை (Vehicle Scrappage Policy), பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 13) அறிமுகம் செய்தார். குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிமுகம் செய்தார்.

அத்துடன் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார். இந்த பழைய வாகன அழிப்பு கொள்கையின் மூலம் தகுதியற்ற மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை வெளியேற்ற முடியும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், ''இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள பழைய வாகன அழிப்பு கொள்கை இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பழைய வாகன அழிப்பு கொள்கை மூலமாக வேலைவாய்ப்ப்பு அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

வாகன உடற்தகுதி மையங்கள் மற்றும் ஸ்கிராப் யார்டுகளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் எனவும் அரசு எதிர்பார்க்கிறது. வாகனங்களின் உடற்தகுதி சோதனைக்கான செலவு வாகனங்களின் வகையை பொறுத்து மாறுபடும். இதன்படி தனிப்பட்ட வாகனங்களுக்கு (Personal Vehicle), 300-400 ரூபாய் வரை இருக்கலாம்.

அதே சமயம் வர்த்தக வாகனங்களுக்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இருக்கலாம். ''15 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய வாகனங்களை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்கிராப் செய்து விடும்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம்'' என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் கிரிதர் அரமனே கூறியுள்ளார்.

''இந்த விதிமுறைகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உடற்தகுதி இல்லை என்றால், 2023ம் ஆண்டு முதல், கனரக வர்த்தக வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட வேண்டும். அதே சமயம் தனிப்பட்ட வாகனங்களுக்கு இதனை நாங்கள் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்'' எனவும் அவர் கூறியுள்ளார்.

மறுபக்கம் இந்த பழைய வாகன அழிப்பு கொள்கை, மெட்டல் ரீ-சைக்கிள் தொழிலுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பழைய வாகன அழிப்பு கொள்கை காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை உயரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை அதிகரிப்பது என அனைத்திற்கும் இந்த பழைய வாகன அழிப்பு கொள்கை பயனுள்ளதாக இருக்கும்.

உடற்தகுதி மற்றும் எமிஷன் டெஸ்ட்களில் தோல்வியடையும்பட்சத்தில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பயணிகள் வாகனங்களும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வர்த்தக வாகனங்களும் கட்டாயமாக ஸ்கிராப் செய்யப்படுவதற்கு இந்த பழைய வாகன அழிப்பு கொள்கை வழிவகுக்கிறது. இதன் காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கும் இந்த பழைய வாகன அழிப்பு கொள்கை ஒரு காரணமாக இருக்கும்.

குறிப்பாக நாங்கள் ஏற்கனவே கூறியபடி மெட்டல் ரீ-சைக்கிள் தொழில் வளர்ச்சியடைவற்கு இந்த பழைய வாகன அழிப்பு கொள்கை உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை ஸ்டீல்தான் மிகவும் முக்கியமானது. ஆனால் கடந்த 6 மாதங்களில் அதன் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

எனவே வாகன உற்பத்திக்கான செலவுகளை குறைப்பதற்கும் பழைய வாகன அழிப்பு கொள்கை உதவி செய்யலாம். ஏனெனில் பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்து, அதில் இருந்து மெட்டீரியலை பெறலாம். பழைய வாகன அழிப்பு கொள்கை மூலம் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு கிடைக்க கூடிய முக்கியமான நன்மைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பழைய வாகன அழிப்பு கொள்கை உதவி செய்யும்.

பழைய வாகன அழிப்பு கொள்கை மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாகவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








