அரசு பஸ் ஒரு கிமீ ஓடினால் எவ்வளவு ரூபாய் நஷ்டம் தெரியுமா? உண்மையை போட்டுடைத்த தமிழ்நாட்டு நிதியமைச்சர்!
தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்னபடியே அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவரது அமைச்சரவையில் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இவர் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சூழலில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமை மோசமடைந்து விட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

இதன்படி 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வருவது குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது அரசு பஸ் ஒரு கிலோ மீட்டர் இயங்கினால், தமிழ்நாட்டு அரசின் போக்குவரத்து துறைக்கு 59.15 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். போக்குவரத்து துறையின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை இந்த புள்ளி விபரத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

போக்குவரத்து துறையின் நிதி நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில் பயண கட்டணத்தை உயர்த்த தவறியது முக்கியமான காரணங்களில் ஒன்று என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது.

எனவே வரும் காலங்களில் தமிழ்நாட்டு அரசு பஸ்களில் பயண கட்டம் உயர்த்தப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் பேருந்துக்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியாத அளவிற்கு போக்குவரத்து துறை நலிவடைந்து இருப்பதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டம் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாகவே போக்குவரத்து துறை நஷ்டத்தில் சிக்கியுள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

அத்துடன் குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் வாகன வரி குறைவு எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நிலைமை இப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றி அமைக்கப்படவில்லை எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகள் இதனை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழ்நாட்டு அரசுக்கு தற்போது இருக்கும் நிதி நெருக்கடியை வைத்து பார்க்கும்போது, அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறைக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். எதிர்காலத்தில் வேண்டுமானால் இது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








