உங்க வண்டில டயர் மோசமா இருந்தா இனி இவ்ளோ அபராதம் கட்டணுமா! ஒரு மாச சம்பளத்தை அப்படியே குடுத்தாலும் பத்தாது!
இந்தியாவில் நடைபெற்று வரும் அதிகப்படியான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. போக்குவரத்திற்கு என வகுக்கப்பட்ட சட்ட திட்டங்களை (Traffic Laws) வாகன ஓட்டிகள் மீறுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். சாலைகளின் தரம் (Road Condition) மோசமாக இருப்பது மற்றொரு காரணம்.
இதுதவிர சாலை விபத்துக்களுக்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது. வாகனத்தில் திடீரென ஏற்படும் பழுதுகள் பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்திய மக்கள் பலர் மோசமான நிலையில் உள்ள டயர்களுடன் (Tyres) வாகனங்களை ஓட்டுவதால், எண்ணற்ற விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன.

கார், டூவீலர், லாரி அல்லது பஸ் என எந்த விதமான வாகனம் என்றாலும், டயர்கள் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கின்றன. எனவே பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக டயர்கள் எப்படி இருக்கின்றன? என்பதை நாம் கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். ஆனால் நம்மில் நிறைய பேர் இதை செய்வதில்லை.
தொலை தூர பயணங்களை தொடங்குவதற்கு முன்பாக கூட டயர்களின் கண்டிஷனை பரிசோதிக்க நம்மில் பலரும் தவறி விடுகிறோம். இது மிகவும் மோசமான சாலை விபத்துக்களுக்கு வழிவகுத்து விடுகிறது. எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் மிகவும் முக்கிய நகரங்களாக இருந்து வரும் நாக்பூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், நாக்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ்வே (Nagpur-Mumbai Expressway) அமைக்கப்பட்டுள்ளது. சம்ருதி மஹாமர்க் (Samruddhi Mahamarg) என்ற பெயரிலும் இந்த எக்ஸ்பிரஸ்வே அழைக்கப்பட்டு வருகிறது.
நாக்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில், கடந்த 4 மாதங்களில் மட்டும், 22 பயங்கர விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான விபத்துக்களுக்கு, வாகனங்களின் டயர் கண்டிஷன் மோசமாக இருந்ததுதான் மிக முக்கியமான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே மிகவும் மோசமான நிலையில் உள்ள டயர்களுடன் வரும் வாகனங்கள், நாக்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில் நுழைவதற்கு தற்போது அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் எல்லாம், நாக்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையை பயன்படுத்துவதற்கு, நாக்பூர் ரூரல் ஆர்டிஓ (RTO) அதிகாரிகள் தற்போது தடை விதித்துள்ளனர்.
இந்த விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலை தொடங்கும் இடத்தில், ஆர்டிஓ பறக்கும் படை அதிகாரிகள் தற்போது சோதனையை தொடங்கி விட்டனர். மோசமான டயர்களுடன் வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கார் மற்றும் டூவீலர் உள்பட எந்தவொரு வாகனம் என்றாலும், பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், டயர்கள் நல்ல கண்டிஷனில் இருப்பது அவசியம். எனவே சீரான இடைவெளிகளில் உங்கள் வாகனங்களுடைய டயர்களின் கண்டிஷனை பரிசோதித்து பார்ப்பதை வழக்கமாக வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் வேக வரம்பு (Speed Limit) மிகவும் அதிகம். அங்கு வாகனங்கள் பொதுவாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அப்படிப்பட்ட ஒரு சாலையில், டயர் பிரச்னை காரணமாக ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்தால், வேகமாக வரும் மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கைதான்.


Click it and Unblock the Notifications








