ஐயயோ உடனே கழட்டீர வேண்டியதுதான்... வாகனத்தில் எக்ஸ்ட்ரா பம்பர் இருந்தால் ஆப்பு... என்ன தண்டனை தெரியுமா?
வாகனத்தில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தியுள்ளவர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களில் க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு தடை விதித்தது. இதற்கேற்ப மோட்டார் வாகன சட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. க்ராஷ் கார்டு அல்லது புல்பாரை ஏன் வாகனங்களில் பொருத்த கூடாது? என்பது தொடர்பாக சமூக வலை தளங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த பணிகளை தொடர்ந்து செய்து கொண்டுள்ளது. க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பொருத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் 182A (4) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த சூழலில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பயன்படுத்துபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் தற்போது மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை செய்துள்ளது. அல்லது இந்த 2 தண்டனைகளும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரில் அமர்ந்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பாதசாரிகளுக்கும் க்ராஷ் கார்டு அல்லது புல்பார்கள் ஆபத்தானவை. க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பொருத்தப்பட்ட வாகனங்கள் மோதினால், பாதசாரிகள் உயிரிழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய நிலையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலம் அனைத்து வாகனங்களும் பாதசாரிகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏர்பேக் உள்ள கார்களில் க்ராஷ் கார்டு அல்லது புல்பார்களை பொருத்தினால், காரின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.

அதாவது க்ராஷ் கார்டு அல்லது புல்பார்கள் காரின் முன் பகுதியில் பொருத்தப்படுகின்றன. விபத்தின்போது ஏர்பேக்கை விரிவடைய செய்யும் சென்சார்கள் இங்குதான் வழங்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட சூழலில், க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பொருத்தப்பட்டிருந்தால், விபத்தின்போது சென்சார்களுக்கு மோதலின் தாக்கம் தெரியாது.

எனவே ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டும், இந்தியாவில் க்ராஷ் கார்டு அல்லது புல்பார்களை அரசாங்கம் தடை செய்திருப்பதற்கான முக்கியமான காரணங்கள். விபத்து நேரும்போது ஏர்பேக் விரிவடையாமல் போனால், காரின் உள்ளே இருக்கும் பயணிகள் படுகாயம் அடைவதற்கோ அல்லது உயிரிழப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன.

எனவே உங்கள் காரில் க்ராஷ் கார்டு அல்லது புல்பார் பொருத்தப்பட்டிருந்தால் உடனே அகற்றி விடுங்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் காவல் துறையினர் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதேபோன்ற நடவடிக்கை மீண்டும் எடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








