கோடை காலத்துல பெட்ரோல் டேங்க்கை முழுசா நிரப்பினா வண்டி வெடிச்சிருமா? ரொம்ப வருஷ குழப்பம் தீந்துருச்சு!
இந்தியாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வரலாறு காணாத வெப்ப நிலை உயர்வால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெப்பம் போதாதென்று, சமூக வலை தளங்களில் உலா வரும் போலி செய்திகளும் மக்களை வாட்டி வதைத்து கொண்டுள்ளன.
இதில் ஒரு போலி செய்தி, வாகன உரிமையாளர்கள் பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த போலி செய்தி பின்வருமாறு: வெப்ப நிலை அதிகரித்து வருவதால், வாகனங்களின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்ப வேண்டாம். இதை மீறி எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பினால், வாகனம் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே பாதி டேங்க் மட்டும் எரிபொருள் நிரப்பி கொள்ளுங்கள். மீதி டேங்க்கை காலியாக விட்டு விடுங்கள். இவ்வாறு அந்த போலி செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியன் ஆயில் (Indian Oil) நிறுவனம்தான், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் அந்த போலி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையல்ல.
உண்மையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இப்படியான எச்சரிக்கை எதையும் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கவே இல்லை. இந்த போலி செய்தியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயர் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்கள் தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். வாகன உரிமையாளர்களுக்கான அந்த விளக்கம் பின்வருமாறு:

இந்த போலி செய்தியை நாங்கள் மறுக்கிறோம். வாகன உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகுதான், வாகனங்களை உருவாக்குகின்றன. எனவே கோடை காலம் அல்லது குளிர் காலம் எதுவாயினும், வாகனங்களின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பலாம். அது பாதுகாப்பான ஒன்றுதான். இவ்வாறு இந்தியன் ஆயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமூக வலை தள பக்கங்கள் மூலமாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, சமூக வலை தளங்களில் இப்படி ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது என்பதுதான். இந்த வரிசையில் நடப்பு வருடமும், அதே போலி செய்தி மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனமும் வழக்கம் போல விளக்கம் அளித்துள்ளது. எனவே கோடை காலம் அல்லது குளிர் காலம் எதுவாயினும், உங்கள் வாகனத்தின் எரிபொருள் டேங்க்கை நீங்கள் முழுமையாக நிரப்பலாம். தேவையில்லாமல் போலி செய்திகளை நம்பிக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கோடை காலத்தில் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பினால், வாகனம் வெடித்து விடும் என்ற போலி செய்தி பல ஆண்டுகளாகவே பரவி வருகிறது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் பல முறை விளக்கம் அளித்து விட்டாலும் கூட, இன்னமும் ஒரு சிலர் இதை நம்பி கொண்டிருப்பது கவலைக்குரிய ஒரு விஷயம்தான்.
எந்தவொரு சூழலிலும் போலி செய்திகளை நம்பாதீர்கள். சமூக வலை தளங்களில் நாம் காணும் அத்தனை விஷயங்களும் உண்மையல்ல. எனவே சமூக வலை தளங்களில் வரும் தகவல்கள் உண்மையா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை 'க்ராஸ் செக்' செய்து பாருங்கள். இதன் முடிவுகளை பொறுத்து, நம்பலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள். கண்ணை மூடிக்கொண்டு எதையும் நம்பி விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








