மகிழ்ச்சியில் மோடி அரசு.. எதிர்பார்த்ததைவிட அதிக கல்லா கட்டும் ஃபாஸ்ட் டேக்! டிசம்பர் வசூல் எவ்வளவு?
மத்திய அரசு அறிமுகம் செய்த ஃபாஸ்ட்டேக் திட்டத்தின் மூலம் அரசிற்கு முன்பு வந்ததைக் காட்டிலும் அதிகளவு வரி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வருகின்ற 15ம் (ஜனவரி) தேதி முதல் நாடு முழுவதும் டோல்கேட் கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக உள்ளது. இத்திட்டம் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், விரைவில் கட்டாயமாக்கப்பட இருக்கின்றது.
ஏற்கனவே, இதற்கான கால அவகாசம் இரண்டும் முறைக்கும் மேலாக மத்திய அரசு வெளியிடப்பட்டநிலையில், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அத்திட்டத்திற்கு மாறாத காரணத்தினால் கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டது.

ஆகையால், இம்முறை எந்தவொரு மாற்றமும் இன்றி வருகின்ற 15ம் தேதி முதல் இத்திட்டம் கட்டாயம் அமலுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, இத்திட்டத்திற்கு மாறாத வாகனங்களிடம் இருந்து இரு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களில் ஃபாஸ்ட்டேக்கை செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனால், ஃபாஸ்ட்டேக்-கின் விற்பனை முன்பைக் காட்டிலும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த கால சுங்கவரியைக் காட்டிலும் தற்போது பல மடங்கு வரி வசூலாகவும் தொடங்கியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் நிலவிவரும் கட்டணக் கொள்ளை மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும்விதமாக மத்திய அரசு இந்த ஃபாஸ்ட்டேக் திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாக்கியுள்ளது.

இருப்பினும், ஒரு சில சுங்கச்சாவடி ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட வண்ணமே இருக்கின்றனர். அதாவது, 24 மணி நேர பயணத்திற்கு பெற வேண்டிய 75 சதவீத கட்டணத்திற்கு பதிலாக 100 சதவீத கட்டணத்தை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை, எதிர்த்து கேள்விக்கேட்கும் வாகன ஓட்டிகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதைப்போன்று ஊழியர்களைக் கொண்டு அருவருக்கத்தக்கக் கூடிய செயலில் ஈடுபட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

ஆகையால், ஒரு சில வாகன ஓட்டிகள் மத்திய அரசின் இத்திட்டம் செயல்பாட்டு வந்தும் முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் முறைகேட்டும் தீர்வு கிடைத்தப்பாடில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதற்கேற்ப, பெரும்பாலான சுங்கச்சாவடி ஊழியர்கள் அராஜகத்திலும், கட்டணக் கொள்ளையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசு எதற்காக இத்திட்டத்தை அறிமுகம் செய்ததோ அதற்கான பலனை அது ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஈடி ஆட்டோ ஆங்கில தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஃபாஸ்ட்டேக்கின் மூலம் மத்திய அரசு கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகப்படியான வரி ஈட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ஃபாஸ்ட்டேக் விற்பனையும் காலக்கெடுவை முன்னிட்டு சூடுபிடித்திருப்பதாக கூறியுள்ளது.

அந்தவகையில், 6.4 கோடி ஃபாஸ்ட்டேக்குகள் மூலம் ரூ. 1,256 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே செய்யப்பட்ட வரி வசூல் விபரம் ஆகும். இதேபோன்று, கடந்த நவம்பர் மாதம் 3.4 ஃபாஸ்ட் டேக்குகள் மூலம் ரூ.774 கோடி மதிப்பிலான பண பரிவார்த்தனைச் செய்யப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இந்த அதீத வசூலுக்கு மத்திய அரசு ஃபாஸ்ட்டேக் கட்டாயம் என அறிவித்ததே முக்கிய காரணமாக இருக்கின்றது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 3.1 கோடி ஃபாஸ்ட்டேக்குகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தநிலையில், தற்போது 6.4 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, அக்டோபர் மாதம் 703 கோடி ரூபாயாக இருந்த பண பரிவார்த்தனை 1,256 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த காலங்களைக் காட்டிலும் மிக மிக அதிகம் ஆகும்.
டோல்பிளாசாக்களில் அரங்கேறும் முறைகேடுகளை தவிர்க்க மட்டுமல்ல வேகமாக கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் இந்த ஃபாஸ்ட்டேக் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்காக, காரின் விண்ட் ஷீல்டு பகுதியில் ஃபாஸ்ட்டேக் என எழுத்துகள் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். ரேடியோ அதிர்வெண் பொருந்திய அந்த ஸ்டிக்கர் டோல்கேட்டின் ஹைபிரிட் லேனைக் கடக்கும்போது தானாக அதற்கான கட்டணத்தை ஸ்கேனிங் முறை மூலம் செலுத்திவிடும். இதனால், பணமாக பரிவார்த்தனைச் செய்வதைக் காட்டிலும் பல மடங்கு நேரம் மிச்சப்படுத்தப்பட முடியும்.

மேலும், ஃபாஸ்ட்டேக் மூலம் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த 1 நிமிடமே போதும் என்று கூறப்படுகின்றது. ஆனால், ஒரு சில வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் டேக் மூலமாக கட்டணம் செலுத்தவும் பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார்கள் அளித்த வண்ணம் இருக்கின்றது.

இருப்பினும், மோடி தலைமையிலான பாஜக அரசின் கட்டாயத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் தங்களை ஃபாஸ்ட் டேக் திட்டத்திற்கு மாற்றி வருகின்றனர். இதனால், ஒருபக்கம் டோல் வசூலும், மறுபக்கம் ஃபாஸ்ட் டேக் விற்பனை அதிவேகமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், இவற்றின் மூலம் அரசுக்கும் வரும் வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சுங்கச்சாவடி விவகாரத்தில் தற்போது கண்டிருக்கும் வெற்றியைப் போன்றே, மிகப் பெரிய பெரிய பிரச்னை ஒன்றை அசால்டாக முடிக்கும் காரியத்தில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

இந்தியாவில் தற்போது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தி பயன்படுத்தி அலுத்து போயுள்ள இந்திய மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமும் இதற்கு ஒரு காரணம்.

ஆம், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியே இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாகதான் இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற காரணத்தால்தான், இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், முதலில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் தேவை குறையும். இந்தியாவிடம் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரியும். எனவே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக அதிகப்படியான தொகையை இந்தியா செலவிட்டு வருகிறது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை குறையும். எனவே இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக பிரதமராக பதவியேற்றது முதலே நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாக வேண்டியதன் அவசியத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இந்த பிரச்னையை சமாளிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவேதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது கூடுதல் சிறப்பம்சம். தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி போன்ற நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பிரச்னையை சமாளித்தாக வேண்டிய கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது.

ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் புழக்கம் குறைந்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது, காற்று மாசுபாடு பிரச்னை படிப்படியாக கட்டுக்குள் வரும். ஆக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகமாகும் பட்சத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும். நாட்டின் நன்மைக்காகவும், தங்களது நன்மைக்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வமாகதான் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவை காட்டிலும் மிகவும் குறைவான செலவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும். இதனை தங்களுக்கான நன்மையாக மக்கள் பார்க்கின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் உள்ளன. மின்சார வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பது முதலாவது பிரச்னை.

அவற்றை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவிற்கு இல்லை என்பது இரண்டாவது பிரச்னை. இந்த 2 பிரச்னைகளையும் களைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மின்சார வாகனங்களின் விலை குறைய வேண்டும் என்பதற்காக, ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் குறைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தற்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தற்போது மருந்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன.

ஆனால் இந்தியாவில் வெகு விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது. ஆம், 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களை புதிதாக கட்டமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களும் 62 நகரங்களில் இன்ஸ்டால் செய்யப்படவுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஞ்ச் காரணமாக இருக்கும் பயத்தால்தான் மின்சார வாகனங்களை வாங்க பலர் தயங்குகின்றனர். மின்சார வாகனங்கள் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் ரேஞ்ச். இதனிடையே ஓரிடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் பலரிடமும் காணப்படுகிறது.

இதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால் உடனடியாக பங்க்கிற்கு சென்று எரிபொருள் நிரப்பி விட்டு தொடர்ந்து பயணிக்கலாம். ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரிய அளவில் இல்லாததால், சார்ஜ் தீர்ந்து விட்டால் சிக்கலை சந்திக்க வேண்டியது இருக்கும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் நிலவுகிறது.

ஆனால் அரசின் தற்போதைய முடிவு எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள பதற்றத்தை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் மிகவும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களும் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.

ஃபேம்-2 திட்டத்தின் கீழ், 62 நகரங்களில் 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தற்போது அறிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். இதுபோன்ற நடவடிக்கைகளால் இனி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகம் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








