விராத் கோஹ்லியின் நிகழ்ச்சிக்கு பெண் உதவியாளர் சகிதமாக மேபக் சொகுசு காரில் வந்திறங்கிய மல்லையா!
லண்டனில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு மேபக் சொகுசு காரில் வந்து இறங்கினார் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா.
சாராய அதிபர் விஜய் மல்லையா ஆடம்பரத்திற்கு பெயர் போனவர். குறிப்பாக, கார்கள் மீது தீராத பிரியமும், ஆர்வமும் கொண்டவர். இதனால், அவர் இந்தியாவில் இருந்தபோது ஏராளமான சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தியதோடு, விலை மதிப்பு மிக்க விண்டேஜ் கார்களையும் வாங்கி சேகரித்து வந்தார்.

இந்த நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.8,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் ஏப்பம் விட்டு இங்கிலாந்துக்கு தப்பிய விஜய் மல்லையா இன்னமும் அந்த ஆடம்பரம் குறையாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி தனது அறக்கட்டளை சார்பில் சில தினங்களுக்கு முன் லண்டனில் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு தனது வழக்கமான படாடோபத்துடன் விஜய் மல்லையா வந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக விஜய் மல்லையாவுக்கும், விராத் கோஹ்லிக்கும் நெருக்கமான நட்பு உண்டு. இதனை பயன்படுத்திக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு விஜய் மல்லையா வந்துள்ளார்.

அதுவும் மேபக் 62 என்ற மிகவும் விலை உயர்ந்த காரில் அவர் இரண்டு பெண் உதவியாளர்களுடன் வந்திறங்கினார். இந்த மேபக் 62 கார் வடிவத்திலும், விலையிலும் மிரட்டும் அம்சங்களை கொண்டது.

இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.5 கோடி மதிப்பு கொண்டது. இங்கிலாந்தில் இந்த காரை மல்லையா பயன்படுத்தியதற்கு மற்றுமொரு காரணம் உண்டு. இதே மாடலை இந்தியாவில் இருக்கும் போது வாங்கி பயன்படுத்தி வந்தார்.

ருசி கண்ட பூனைபோலவும், நிகழ்ச்சிக்கு செல்லும்போது தனது அஸ்தஸ்தை பரைசாற்றும் விதத்திலும் இந்த காரை பயன்படுத்தி இருக்கிறார்.

இந்த மேபக் 62 மாடல் கடந்த 2002 முதல் 2012ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. மேலும், இந்த காரை விருப்பம் போல் சொகுசு அம்சங்களை சேர்த்துக் கொள்ளும் விதத்தில் ஏராளமான கஸ்மடைஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டன.

மேலும், முன்வரிசை இருக்கைக்கும், பின் வரிசைக்கும் நடுவில் தடுப்பு உண்டு. அதாவது, பயணிகள் அமரும் பின் இருக்கை தனி அறை போல இருக்கும். இதுதவிர, பொழுது போக்கு வசதிகளும் இந்த காரில் சிறப்பாக இருக்கும்.

இந்த காரில் 5.5 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக 543 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஆனால், அந்த கார் அண்மையில் வாங்கி கடனுக்காக ஈடுகட்டும் வகையில், பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதுதவிர, அவரது ஏராளமான கார்கள் ஏலத்தில் விடப்பட்டது நினைவிருக்கலாம்.

விராத் கோஹ்லி நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லாமலேயே விஜய் மல்லையா வந்ததாகவும், அவரை இந்திய வீரர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








