இவ்வளவு சிறப்பம்சங்கள் பெற்ற மல்லையா விமானத்தை வாங்க ஆளில்லை!
மல்லையாவின் சொகுசு விமானம் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளது. வியக்க வைக்கும் வசதிகளை கொண்ட இந்த விமானம் தற்போது தூசி படிந்த நிலையில் நிற்கிறது. இந்த முறையாவது புதிய உரிமையாளருடன் புத்துயிர் பெறுமா என்
வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் தனி விமானத்தை மீண்டும் ஏலம் விடுவதற்கு சேவை வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் மல்லையா சொகுசு விமானத்தை மூன்றாவது முறையாக ஏலம் விடும் முயற்சி நடக்கிறது. இந்த நிலையில், இதுபோன்ற விமானங்களில் பறக்கமாட்டோமா என்று அனைவரையும் ஏங்க வைக்கும் வசதிகள் அந்த விமானத்தில் இருக்கிறது.

ஏர்பஸ் ஏ-319 என்ற விமானத்தில் 7 நட்சத்திர ஓட்டலுக்கு இணையான அம்சங்களுடன் பறக்கும் மாளிகையாக உட்புறம் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. வியாபார விஷயமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இந்த விமானத்திலேயே பறந்து வந்தார் விஜய் மல்லையா.

கடந்த 2006ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விமானம் இது. விடி-விஜேஎம் என்ற விஜய் மல்லையாவின் இனிஷியலில் இந்த விமானம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நொடித்து போனவுடன், விஜய் மல்லையா மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது வீடுகள், நிறுவனங்கள் மற்றும் விமானங்களை கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், 2013ம் ஆண்டு இந்த விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விமானத்தை சிஜே லீஸிங் என்ற நிறுவனத்திடம் இருந்து விஜய் மல்லையா குத்தகை அடிப்படையில் வாங்கி பயன்படுத்தி வந்தார். இதனால், சட்ட சிக்கல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நீதிமன்றம் இந்த விமானத்தை விற்பனை செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தது.

அழகிய மர வேலைப்பாடுகள், கண்ணாடி மாளிகை போன்ற வேலைப்பாடுகள், சொகுசான படுக்கையறை, பொழுதுபோக்கு அறை, குளியல் அறை, அலுவலக பணிகளுக்கு ஏற்ற வசதிகள், ஆலோசனை அறை, சமையல் அறை என்று பல்வேறு வசதிகளை இந்த விமானம் பெற்றிருக்கிறது. வீட்டில் இருப்பது போன்ற ஓய்வான உணர்வை தரும் பல சொகுசு அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

இந்த விமானத்தில் 6,000 கியூபிக் அடி பரப்பளவு இடவசதி உள்ளது. இந்த விமானத்தில் 22 விருந்தினர்களும், பணியாளர்களும் பயணிக்கும் இடவசதி உள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதி, உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் உள்ளன.

இந்த விமானத்தில் சேட்டிலைட் டிவியும் உண்டு. உலகின் எந்த மூலையில் பறந்து கொண்டிருந்தாலும் விரும்பும் டிவி நிகழ்ச்சிகளை இந்த சேட்டிலைட் டிவி மூலமாக பார்க்க முடியும்.

ஏர்பஸ் ஏ320 என்ற குடும்ப வரிசையில் குறுகலான உடல்கூடு அமைப்புடன் தயாரிக்கப்படும் விமான மாடல் ஏ319. 1988ம் ஆண்டில்தான் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

மல்லையா சொகுசு விமானத்தில் 22 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், சாதாரண இருக்கை வசதி கொண்ட மாடலில் 160 பேர் வரை பயணிக்கலாம்.

இந்த விமானம் அதிகபட்சமாக 41,000 அடி உயரம் வரை பறக்க அனுமதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 871 கிமீ வேகத்தில் செல்லும். இரண்டு எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானத்தை 2 பைலட்டுகள் இயக்குவர்.

இது ஏ319 விமானத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்ப்பரேட் ஜெட் மாடல். இந்த விமானத்தில் கூடுதல் பெட்ரோல் டேங்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 30,000 லிட்டர் பெட்ரோல் நிரப்பி செல்ல முடியும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும் பட்சத்தில் 11,000 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானம் தற்போது மும்பை விமான நிலையத்தின் விமான பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தூசி படிந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் மிக மோசமான நிலையில் நிற்கிறது.

இவ்வளவு சிறப்பம்சங்களை பெற்றிருந்தும், இந்த விமானத்தை வாங்க ஆளில்லை. இந்த முறையாவது ஏலத்தில் இந்த விமானத்திற்கு புதிய உரிமையாளர் கிடைத்து புத்துயிர் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏர்பஸ் ஏ319 கார்ப்பரேட் ஜெட் விமானம் தற்போது இந்தியாவில் முகேஷ் அம்பானியிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Mallya Aircraft Images: Indian Express
மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய ஆல்பம்!
இந்தியாவின் டக்கார் ராலியாக வர்ணிக்கப்படும் மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளை உங்கள் கண் முன்னே நிறுத்தும் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








