காசு, பதவி, கார் எல்லாமே குவியுது!! விஜய்காந்தின் மகனுக்கு ரூ.1.5 கோடியில் கார்... கொடுத்தது யார் தெரியுமா?
மறைந்த நடிகர் விஜய்காந்த் (Vijaykhanth)-க்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் இருப்பது ஊரறிந்த விஷயம். இதில் இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த போர்ஷே காரை அண்ணன் விஜய பிரபாகரன் பரிசாக வழங்கியுள்ளார். இதன் மூலமாக விஜய்காந்தின் குடும்பத்தில் புதியதாக இணைந்துள்ள இந்த போர்ஷே காரை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை நிறுவியவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜய்காந்த் மறைந்த செய்தி நம் மனதில் அழியா வடுவாக பதிந்துவிட்டது. தேமுதிக சார்பில் விஜய்காந்த் அவர்களின் மனைவி பிரேமலதா தற்சமயம் கட்சி பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

நடிகர் விஜய்காந்த் மறைந்து சமீபத்தில் 100 நாட்கள் நிறைவடைந்தது. அந்த தினத்தில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜய்காந்தின் சமாதி முன்பு பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் இருவரும் தேம்பி, தேம்பி அழுதது இப்போதுவரையில் நினைவில் உள்ளது. இதற்கிடையே, விஜய்காந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அவரது 31வது பிறந்த நாளை கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடினார்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால், பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் சண்முக பாண்டியன் இந்த முறை தனது பிறந்த நாளை கொஞ்சம் சிம்பிளாகவே கொண்டாடி உள்ளார். மறுப்பக்கம், சண்முக பாண்டியனின் நடிப்பில் படை தலைவன் என்கிற திரைப்படம் உருவாகி வருவதால், சினிமா, அரசியல் என இரண்டையும் கவனித்துக் கொண்டு பிறந்த நாளை கொண்டாட சண்முக பாண்டியனுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், விஜய்காந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அவரது தம்பியின் பிறந்த நாளை விலையுயர்ந்த பரிசு ஒன்றின் மூலமாக ஸ்பெஷல் ஆகியுள்ளார். அதாவது, பிறந்த நாளை கொண்டாடிய சண்முக பாண்டியனுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த போர்ஷே காரை விஜய பிரபாகரன் பரிசாக வழங்கியுள்ளார்.
சண்முக பாண்டியனுக்கு அண்ணன் விஜய பிரபாகரன் பரிசளித்து இருப்பது ரூ.1.5 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) கார் ஆகும். உலகளவில் பிரபலமான கேயென்னே காரை இந்தியாவில் கடந்த பல வருடங்களாக போர்ஷே நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதாவது, கொஞ்ச மாதங்களுக்கு போர்ஷே கேயென்னே விற்பனையில் இருக்கும், அதன்பின் விற்பனை நிறுத்தப்பட்டு, மீண்டும் அறிமுகம் செய்யப்படும்.
இந்த வகையில் மேம்படுத்தப்பட்ட போர்ஷே கேயென்னே கார் கடைசியாக கடந்த 2023 ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கேயென்னே, கேயென்னே கூபே என இரு விதமான உடலமைப்புகளில் இந்தியாவில் போர்ஷே கேயென்னே கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவை இரண்டில் எதை சண்முக பாண்டியன் பெற்றுள்ளார் என்பதை இணையத்தில் வெளியாகியுள்ள இதுகுறித்த படங்களை வைத்து அறிய முடியவில்லை.
கேயென்னே மற்றும் கேயென்னே கூபே இவை இரண்டும் தோற்றத்தில் ஒன்றோடு ஒன்று வேறுப்படுகின்றன. அதாவது, கேயென்னே கூபே காரின் ரூஃப் ஆனது பின்பக்கத்தில் கொஞ்சம் சரிவாக இருக்கும். 2023 ஜூலையில் புதிய போர்ஷே கேயென்னே கார் ரூ.1.36 கோடியிலும், கேயென்னே கூபே ரூ.1.42 கோடியிலும் அறிமுகம் செய்யப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.1.36 கோடி மற்றும் ரூ.1.42 கோடி என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆர்டி பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் காரின் ஆன்-ரோடு விலை ரூ.2 கோடியை நெருங்கிவிடும். ரூ.2 கோடியில் ஒரு போர்ஷே காரை வாங்குவது விஜய்காந்த் அவர்களின் குடும்பத்தாருக்கு ஒன்று பெரிய விஷயமாக இருக்காது.


Click it and Unblock the Notifications








