அம்பானி,எல்லாம் ஒன்னுமே இல்ல! நூடுல்ஸ் போட்டவரு தமிழ்நாட்டுல முதலீடு பண்ற அளவிற்கு பணக்காரரானது எப்படி?
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் பாம் நத் வூவாங். இவர் தற்போது இந்திய மார்க்கெட்டில் தனது நிறுவனத்தை துவங்கி இங்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய உள்ளார். இதற்காக இரண்டு பில்லியன் அளவிலான அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர் தூத்துக்குடியில் தான் தனது ஆலையை அமைக்க இடம் பார்த்து உள்ளார்.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை அமைத்து வாகன உற்பத்தியை துவங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்காகவும் அதிகரித்து வரும் டிமாண்ட் காரணமாகவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து வருகின்றன.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறங்குவது மூலம் தனது மிக முக்கியமான முன்னெடுப்பை எடுத்து வைத்துள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் அந்நிறுவனம் பேட்டரி தயாரிப்பு ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது. முன்னரே சொன்னபடி இது குறித்து தமிழக அரசுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 16 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் குறித்து நமக்கு மிக முக்கியமான தகவல்கள் சில கிடைத்துள்ளன. அதில் இந்நிறுவனத்தின் நிறுவனர் வூவாங் குறித்த சில முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வியட்நாம் நாட்டின் முதல் பில்லியனராக இவர் தான் மாறியுள்ளார். இவர் வின்ஃபாஸ்ட் ஜாயிண்ட் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் விண் பாஸ்ட் என்ற நிறுவனம்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தொழில்நுட்பத் துறை ரியல் எஸ்டேட் சில்லறை வணிகம் மற்றும் ஹெல்த்கேர் உள்ளிட்ட ஏகப்பட்ட துறைகளில் தனது பிசினஸை செய்து வருகிறது. இந்நிறுவனம் முதன்முதலாக 1993ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் தான் துவங்கப்பட்டது. அப்பொழுது இது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமாக துவங்கப்பட்டு பின்னர் உணவு தயாரிக்கும் நிறுவனமாக மாறியது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் வூவாங் கடந்த 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஹனோய் என்ற பகுதியில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இவரது தந்தை வியட்நாம் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாய் சொந்தமாக ஒரு டீக்கடை நடத்தி வந்தார். இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய குடும்பமாக இருந்தது. 1985 ஆம் ஆண்டு இவர் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பின் 1987 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஜியாலஜி பட்டம் பெற்றார். பின்னர் ரஷ்யாவிற்கு சென்று தனது மேல் படிப்பை மாஸ்கோ ஜாலஜிகல் இன்ஸ்டியூட்டில் படித்தார். 1992 ஆம் ஆண்டு இவர் பட்டம் பெற்றார். அதன் பின்பு இவர் தனது தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தனது தோழியுடன் பள்ளியில் படிக்கும் போதே காதல் வயப்பட்டிருந்தார். பின்பு அங்கிருந்து உக்ரைன் நாட்டிற்கு சென்றார்.
உக்ரைன் நாட்டில் சொந்தமாக தொழில் துவங்க நினைத்த இவர் உடனடியாக செய்து தரப்படும் நூடுல்ஸ் ரெஸ்டாரன்டை துவங்கினார். இதற்காக பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இருந்தும் நண்பர்கள் பெற்று இந்த தொழிலை அவர் துவங்கினார். இங்கு அவர் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களை தயாரித்து விற்பனை செய்தார். தனது தொழிலை விரிவுபடுத்தும் வகையில் பதப்படுத்தப்படும் உணவுகளை விற்கும் நிறுவனத்தைத் துவங்கி உக்ரைன் நாட்டில் மிகப் பிரபலமானார்.

அதன் பின்பு இது நிறுவனத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற விலையில் நெஸ்லே நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். இந்த நிறுவனத்தை விற்பனை செய்து விட்டு தனது சொந்த ஊரான வியட்னாமிற்கு மீண்டும் திரும்பினார். வியட்நாமில் அவர் மீண்டும் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கினார். அப்படி துவங்கப்பட்ட நிறுவனம் தான் வின் குரூப் நிறுவனம்.
இன்று அவர் தான் அந்த நிறுவனத்திற்கு சேர்மேனாக இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிலில் களமிறங்கியது. வின்ஃபாஸ்ட் என்ற பெயரில் துணை நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. பெண்ணின் பிரா பிஎம்டபிள்யூ மற்றும் மேக்னா ஸ்பிரேயர் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் இந்நிறுவனம் தனது முதல் காரை தயாரித்தது.
2018 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது. இந்நிறுவனம் தான் வியட்நாம் நாட்டின் முதல் வாகன தயாரிப்பு நிறுவனம் எனவும் சர்வதேச அரங்கில் பங்கேற்கும் முதல் நிறுவனமும் இதுதான் எனவும் கூறியது.2018 ஆண்டு நிறுவனம் முதல் தயாரிப்பை காட்சிப்படுத்தி இருந்தாலும் 2021 ஆம் ஆண்டு தான் முதல் முழுமையான தயாரிப்பிற்குள் இந்நிறுவனம் இறங்கியது.
இது சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இதுவரை இந்நிறுவனம் பெரிய அளவிலான லாபத்தை சம்பாதிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அறிக்கையின்படி இந்நிறுவனம் மொத்தமாக 623 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நஷ்டத்தில் தான் இயங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது தொழிலை விரிவு படுத்துவதன் மூலம் இந்த நஷ்டத்தை ஈடு கட்டி லாபம் சம்பாதிக்கலாம் என நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்நிறுவனம் இதுவரை ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய சாதனை எதையும் செய்யவில்லை. இருந்தாலும் இந்நிறுவனத்தின் திட்டங்கள் எல்லாம் நிச்சயம் இந்நிறுவனம் பெரிய நிறுவனமாக மாறும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது. வியட்நாமை தொடர்ந்து இந்நிறுவனம் இந்தோனேஷியாவிற்கும் இந்தியாவிற்கும் தனது காலடித்தடத்தை எடுத்து வைக்க முடிவு செய்துள்ளது. இதுபோக ஆஸ்திரேலியா நாட்டிற்கும் நிறுவனம் செல்ல முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அமெரிக்காவில் தனது தொழிலை துவங்கி விட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகமாகி வருவதால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் மக்களுக்கு ஏற்ற தரமான கார்களை தயாரித்து வழங்கினால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெரும். இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரிக்கும் நியாயமான விலையில் நல்ல தரமான எலெக்ட்ரிக் கார்கள் வந்தால் யார் தான் வாங்க மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications









