நம்ம தாத்தா காலத்து பேருந்துக்கு உயிர் கொடுத்த ஐடிஐ மாணவர்கள்.. ஷோரூம்ல இருந்து இப்பதான் இறக்கினதபோல இருக்கு!
நம்ம தாத்தா காலத்து பழைய பேருந்துக்கு மாணவர்கள் சிலர் இணைந்து உயிர் கொடுத்திருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலேயே இந்த ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. புத்துயிர் வழங்கப்பட்டு இருக்கும் அந்த பேருந்து 1962 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். மேலும், இந்த பேருந்து இப்போது ராஜகுமாரியில் உள்ள எம்ஜிஎம் ஐடிஐ (MGM ITI)-யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட ஓர் பேருந்தே இதுவாகும்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உடனான கூட்டணியின் வாயிலாகவே இந்த பேருந்து பொது சேவைக்காக இந்தியாக் கொண்டு வரப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. கேரள மாநிலத்தின் பல்வேறு போக்குவரத்து துறையில் இந்த பேருந்து பயன்பாட்டில் இருந்து என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இந்த பென்ஸ் பஸ் 1978 ஆம் ஆண்டு வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றது.

Image Source: D FLowers VLog இந்த நிலையிலேயே இந்த பேருந்து பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு, கைவிடப்பட்டு இருக்கின்றது. இதனால், அப்பேருந்து முற்றிலுமாக சீர்குலைந்து போயிருக்கின்றது. குறிப்பாக, மழை, வெயில் உள்ளிட்டவற்றால் கடுமையான பாதிப்புகளை அந்த பேருந்து சந்தித்து இருக்கின்றது. இந்த நிலையில் இருந்த இப்பேருந்தையே கேரளாவில் உள்ள எம்ஜிஎம் ஐடிஐ-யைச் சேர்ந்த மாணவர்கள் குழு புத்தம் புதிய பேருந்தாக தயார் செய்திருக்கின்றனர்.
அதன் உண்மை தன்மை மாறாமல், அதாவது, அதன் பழைய மனம் மாறாமல் அப்படியே உள்ளதை உள்ளது போல் தயார் செய்திருக்கின்றனர். இதனை நாம் படிக்கும் வேண்டுமானால் மிகவும் சுலபமாக படித்திருக்கலாம். ஆனால், இந்த பேருந்தை புதிதாக மாற்ற அந்த மாணவர்கள் குழு அரும்பாடு பட்டிருக்கின்றது.
இது மிக மிக பழைய பேருந்து என்பதால் அதற்கான பாகங்களைப் பெறுவதில் மாணவர்கள் குழு மிகப் பெரிய சிக்கல்களைச் சந்தித்து இருக்கின்றது. மாணவர்கள் பேருந்தின் அந்த விண்டேஜ் தோற்றத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அதன் ஒரிஜினல் பாகங்களைப் பிரதிபலிக்கும் அணிகலன்களைக் கொண்டே பேருந்தை புதுப்பித்து இருக்கின்றனர்.
இதனால்தான் அந்த பேருந்து இப்போதும் விண்டேஜ் லுக்கில் காட்சியளிக்கின்றது. ஆகையால், ஏற்கனவே ஸ்பெஷல் வாகனமாக பார்க்கப்பட்ட அது மேலும் ஸ்பெஷலான ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் திருவனந்தபுரம் போக்குவரத்து துறையின்கீழே இந்த பேருந்து பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. இதற்கு பின்னர் கேஎஸ்ஆர்டிசி-இன் கீழ் 1965 ஆம் ஆண்டில் இயக்கப்பட்டிருக்கின்றது.
எனவே முன்னதாக பதியப்பட்ட கேஎல்டி 5403 என்கிற பதிவெண் மாற்றப்பட்டு கேஎல்எக்ஸ் 604 என்கிற புதிய பதிவெண் அதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பின்னரும் அதன் பதிவெண் மாற்றப்பட்டு இருக்கின்றது. கடைசியாக இடுக்கி மாவட்டத்திற்கு இந்த பேருந்து மாற்றப்பட்டு, கேஎல்ஐ 3399 என்கிற பதிவெண் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த பதிவெண்ணிலேயே இப்போதும் அந்த பேருந்துக் காட்சியளிக்கின்றது. மேலும், புதுப்பித்தல் பணி தற்போது முழுமையாக முடிந்துவிட்ட நிலையிலேயே அப்பேருந்துக் காட்சியளிக்கின்றது. ஆனால், இது இயங்குவதற்கான அனுமதி ஆர்டிஓ-விடம் இருந்து கிடைக்குமா என்பது சந்தேகமே. அதேவேளையில், இது ஓர் அரிய வகை பேருந்து என்பதால் இதை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று பழைய வாகனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் சம்பவங்கள் பல அரங்கேறி இருக்கின்றன. ஆனால், தாத்தா காலத்து பேருந்திற்கு உயிரளிக்கும் சம்பவம் இப்போதே அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக, சமீபத்தில் ஷோரூமில் இருந்து இறக்கியதைப் போல இந்த பேருந்தை மாற்றியிருப்பது ஆச்சரியத்தின் உச்சம். ஆகையால், இந்த நிகழ்வை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலருக்கு இந்த பேருந்து தங்களின் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








