73ஆண்டு கால பழைய இந்தியாவின் பொக்கிஷம் வெளிநாடு போகுது! சென்னையில் இருந்து கப்பல் வழியாக ஹூஸ்டன் செல்லும் கார்
7 தசாப்தங்கள் பழைமையான மோரிஸ் மைனர் (Morris Minor) கார் மாடல் ஒன்று இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மிகவும் அரிதான கார் மாடல்களில் இதுவும் ஒன்றும். நாட்டின் பொக்கிஷம் மாதிரியான கார் மாடல் என இதை சொல்லலாம். இத்தகைய காரே வெளிநாடு எடுத்துச் செல்லப்படுகின்றது. அதன் உரிமையாளரே இந்த காரை வெளிநாடு எடுத்துச் செல்கின்றார். மோரிஸ் மைனர் காரின் உரிமையாளர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அந்த கார் இந்தியாவில் இருந்து அங்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதற்காக அவர் பெரும் தொகையை செலவு செய்திருக்கின்றார். இதுவரை ரூ. 13 லட்சம் வரை அவர் செலவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு அந்த காரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என தெரிகின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்த காரணத்தினாலேயே இந்த அளவு பெரும் தொகையை செலவிட்டு மோரிஸ் மைனர் காரை அதன் உரிமையாளர் அமெரிக்கா எடுத்துச் செல்கின்றார். வேலரியன் மிரண்டா இவரே அந்த காரின் உரிமையாளர் ஆவார். 1952 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே இந்த கார் வாங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த காரே வேலரியன் மிரண்டா பிறந்த போது அவரையும், அவரது அம்மாவையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது அப்பாவால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த சென்டிமென்டும் அவர் இந்த காரை சென்னையில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனுக்கு எடுத்துச் செல்ல காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
சென்னையில் செயல்பட்ட அடிசன் மோட்டார்ஸ் () வாயிலாகவே இந்த கார் வாங்கப்பட்டு இருக்கின்றது. வேலரியன் மிரண்டா அப்பாவே இந்த காரை வாங்கி இருக்கின்றார். தற்போது வேலரியன் மிரண்டா செலவு செய்திருக்கும் பணம் ஆனது அந்த காரின் தற்போதைய மதிப்பைவிட ஐந்து மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுமட்டுமல்ல இந்த காரை அவர் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்பவும் வேலரியன் மிரண்டா மாற்றியிருக்கின்றார். அதாவது, ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகம் செய்யப்படும் தொழில்நுட்பம் மற்றும் சொகுசு அம்சங்களை இந்த காரில் வேலரியன் மிரண்டா சேர்த்திருக்கின்றார். அத்துடன், ஷோரூம் கண்டிஷனில் அதை பராமரித்தும் வந்திருக்கின்றார்.
ஆகையால், இப்போதும் புத்தம் புதிதுபோல் காட்சியளிப்பதுடன் மோரிஸ் மைனர் சொகுசு அம்சங்கள் நிறைந்த காராகவும் காட்சியளிக்கின்றது. இதன் வாயிலாக அந்த காரை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போல வேலரியன் மிரண்டா நேசித்து வந்திருக்கின்றார் என்பது தெள்ள தெளிவாகத் தெரிகின்றது. இந்த கார் இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், அதன் பெருவாரியான ஆயுட்காலம் இந்தியாவிலேயே கழிந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய நாடாக அது அமெரிக்காவை தஞ்சமடைந்திருக்கின்றது. மேலும், இதுவே இந்தியாவின் முதல் மோரிஸ் மைனர் கார் மாடல் ஆகும். வேலரியன் மிரண்டாவின் அப்பாவே இந்த காரை இந்தியாவில் முதல் ஆளாக வாங்கி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய பன்முக சிறப்புகளைத் தாங்கிய காரையே தன்னுடைய எதிர்கால சந்ததியினர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா எடுத்துச் சென்றிருக்கின்றார் வேலரியன் மிரண்டா. அவரிடத்தில் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பழைமையான கார் மாடல்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் இந்த கார் தனிச் சிறப்புமிக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பொக்கிஷம் மாதிரியான கார் மாடல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா எடுத்துச் செல்லப்படுவது ஓர் இழப்பைப் போல பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த காரை இந்தியாவில் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல இந்தியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் அவர் பலரை சந்தித்து அனுமதி பெற்றே இந்த காரை எடுத்துச் செல்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








