சாலையில் பணம் பறிக்க இப்படியெல்லாம் நடக்குது... உஷார் மக்களே!! இணையத்தில் வைரலாகும் வீடியோ
கடந்த பல வருடங்களாகவே நம் இந்தியா போன்ற நாட்டில் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு எதிராக மோசடிகளும், வழிப்பறிகளும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. நகரத்திற்குள் பயணிக்கும்போது இவ்வாறு நடந்தால் மற்றவர்களின் உதவியுடனோ அல்லது போலீஸாரின் உதவியுடனோ சமாளித்துவிடலாம். ஆனால் நெடுஞ்சாலைகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளிலும் பயணிக்கும்போது வழிப்பறிகள் களைய முடியாதவைகளாக இருந்து வந்தன.
ஆனால் அந்த புகார்களை சமீப காலமாக கார்களின் டேஷ்போர்டு கேமிராக்கள் குறைத்து வருகின்றன. சுருக்கமாக டேஷ்காம் (Dashcam) எனப்படும் டேஷ்போர்டு கேமிராக்கள் இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து கார்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய தொழிற்நுட்ப அம்சமாக விளங்குகிறது. ஏன் என்பதற்கு உதாரணமாக ஒரு டேஷ்காம் வீடியோ ஒன்று இணையத்தில் உலாவி வருகிறது. அதனை கீழே காணலாம்.
இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றதுதான் என்றாலும் சரியாக எந்த பகுதியில் அரங்கேறியுள்ளது என்பதை கண்டறிய இயலவில்லை. தென் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடந்தது போன்று உள்ளது. நீண்ட நேரமாக பயணத்தின்போது சாலையில் நடைபெறுபவற்றை தனது டேஷ்காம்-வில் காட்சிப்படுத்தி வரும் ஒருவரது காருக்கு குறுக்கே சாலையில் ஒருவர் வந்து மோதுகிறார். அந்த நபர், சாலையை கடக்க முயன்ற போது இந்த கார் அவர் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது போல் காட்சிப்படுத்த முயல்கிறார்.
ஆனால் இந்த சம்மந்தப்பட்ட கார் ஓட்டுனர் அவர் வருவதை அறிந்து சற்று தூரத்திற்கு முன்பாகவே காரை நிறுத்திவிட்டார். இருப்பினும் அந்த நபர் ஏமாற்றுடத்துடன் கூடிய பணம் பறிக்கும் வெறியில், வேண்டுமென்றே காரின் மீது வந்து விழுவதை மேற்கண்ட டேஷ்காம் வீடியோவில் தெளிவாக காண முடிகிறது. சாலையை அவர் கடந்து செல்வதற்காக மிக மிக குறைந்த வேகத்தில் காரை இயக்கிய கார் ஓட்டுனர் அந்த நபர் செய்யும் நாடக வேலையை பார்த்த உடனேயே காரை முழுவதுமாக நிறுத்திவிட்டார்.

கார் மீது மோதிய பின்னர் அந்த நபர் கார் ஓட்டுனரிடம் நியாயம் கேட்க, கார் ஓட்டுனர் சிம்பிளாக காரில் கேமிரா உள்ளதை கூறுகிறார். அந்த நபருக்கு சற்று நேரத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவரிடம் நம் நாடக வேலை எடுப்படாது என்பதை தெரிந்துக்கொண்ட அந்த நபர் மெதுவாக அங்கிருந்து நழுவுகிறார். இந்த சம்பவத்தில் காரில் டேஷ்காம் இல்லையென்றால், கதையே வேறமாறி அமைந்திருக்கும்.
இன்னும் சில பேருக்கு அந்த நபர் ஏன் அவ்வாறு செய்தார் என விளங்காமல் இருக்கலாம். சிலர் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார் என்று கூட நினைக்கலாம். அத்தகையவர்களுக்கு நான் ஒன்றே ஒன்றை கூறி கொள்கிறேன், இது முழுக்க முழுக்க கார் ஓட்டுனரிடம் இருந்து பணம் பறிக்க நடத்தப்பட்ட நிகழ்வாகும். அந்த நபர் தற்கொலை செய்ய முயன்றிருந்தால், இந்த காருக்கு முன்பாக பேருந்து ஒன்று செல்வதை பார்க்கலாம்.

ஆனால் அந்த நபர் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்த இந்த காரை தேர்வு செய்துள்ளார். டேஷ்போர்டு கேமிரா மட்டும் இல்லையென்றால், கார் மீதான மோதல் சரியாக அமையாதது பற்றி கூட கவலைப்படாமல், இதற்கென்றே கூட்டி வைத்த உள்ளூர்வாசிகள் உடன் சேர்ந்து பணம் பறிக்க அந்த நபர் முற்பட்டு இருப்பார். இந்தியாவில் இவ்வாறான சம்பவங்களை சர்வ சாதாரணமாக காணலாம்.
இதனாலேயே ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட இதனை வைத்து நடிகர் வடிவேலுவின் பிரபலமான ஒரு காமெடி காட்சி உள்ளது. அதிலிலும் குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் சாலையை கடந்து செல்ல வேண்டுமென்றால் பணம் கொடுத்துவிட்டுதான் செல்ல வேண்டும் என உள்ளூர் மக்கள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை கூட இணையத்தில் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications