10வது படிக்கற பையன் செய்யற காரியமா இது! தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்! போலீஸ்காரங்களே ஆடி போயிட்டாங்க!
பொது சாலைகளில் வாகனங்களில் ஸ்டண்ட் (Stunt) செய்வது, சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் சமூக வலை தளங்களில் (Social Media) பிரபலமாக வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் பலர் விதிமுறைகளை சற்றும் பொருட்படுத்தாமல், பொது சாலைகளில் கார் மற்றும் பைக்குகளில் சாகசங்களை செய்கின்றனர்.
இதில், பல்வேறு வீடியோக்கள் வைரல் ஆகி, பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் சாகசக்காரர்களை காவல் துறையினர் தூக்கி விடுகின்றனர். இந்த வரிசையில் ஒரு வைரல் வீடியோவால் (Viral Video) இளைஞர் ஒருவர் பெரும் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார்.

தனது தந்தையின் காரில் ஸ்டண்ட் செய்த குற்றத்திற்காக, இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞரின் பெயர் ஷியாம்வீர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது தந்தையிடம் சிகப்பு கலரில், ஹூண்டாய் ஐ20 எலைட் (Hyundai i20 Elite) கார் ஒன்று இருக்கிறது. சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இந்த காரில் ஸ்டண்ட் செய்து, அதனை ஷியாம்வீர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆக தொடங்கியதும், சமூக வலை தளங்களில் பலர் புகார் எழுப்பினர்.
எனவே கிரேட்டர் நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக ஆக்ஸனில் இறங்கினர். வீடியோவில் காரின் நம்பர் பிளேட் தெரிந்த காரணத்தால், ஷியாம்வீரை கைது செய்யும் பணிகள் சுலபமாக முடிந்து விட்டது. அவரை கைது செய்யும் படலம் முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட காரை பற்றிய புலன் விசாரணையில் காவல் துறையினர் இறங்கினர்.
அப்போது இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. ஆம், இந்த கார் விதிமுறைகளை மீறியிருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் இந்த காரில் நிறைய முறை போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த சூழலில்தான் தற்போது மீண்டும் ஒரு முறை போக்குவரத்து விதிமுறையை மீறியதற்காக இந்த கார் காவல் துறை வசம் சிக்கி கொண்டுள்ளது. எனவே எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 1.33 லட்ச ரூபாயை கிரேட்டர் நொய்டா போக்குவரத்து காவல் துறையினர் அபராதமாக விதித்து விட்டனர் (சமீபத்தில் ஸ்டண்ட் செய்ததற்கு அபராதம் 33 ஆயிரம் ரூபாய்).
காவல் துறையினர் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிமுறைகளை மீறலாம் என யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். ஏனெனில் தற்போதெல்லாம் காவல் துறையினர் அப்டேட் ஆகி விட்டனர். முக்கிய இடங்களில் எல்லாம் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு, ஆன்லைன் மூலம், அபராதம் விதிக்கப்படுகிறது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில், விதிமுறைகளை மீறிய ஹூண்டாய் ஐ20 எலைட் கார் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், ஷியாம்வீர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மிகப்பெரிய தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மற்றொரு குழப்பமும் இருக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள ஷியாம்வீர் 10ம் வகுப்பு மாணவர் என கூறப்படுகிறது.
ஆனால் ஷியாம்வீரின் டிரைவிங் லைசென்ஸில் (Driving Licence), அவரது வயது 19 என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த குழப்பம் தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏதாவது விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலைகளில் எக்காரணத்தை கொண்டும் ஸ்டண்ட் செய்யாதீர்கள். உங்களுக்கு வாகனங்களில் ஸ்டண்ட் செய்வதில் ஆர்வம் இருந்தால் அதற்கு வேறு வழிகள் உள்ளன. தனியார் இடங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நீங்கள் ஸ்டண்ட் செய்து மகிழலாம். ஆனால் ஹெல்மெட் (Helmet) பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








