நட்ட நடு ரோட்டில் கார் டிரைவரிடம் மோசமாக நடந்து கொண்ட இளம்பெண்... வைரலாகும் வீடியோ!
நட்ட நடு ரோட்டில் கார் டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கேப் டிரைவர் ஒருவரை நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் தாக்கும் காட்சிகளை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அத்துடன் அந்த கேப் டிரைவரின் செல்போனையும் அந்த இளம்பெண் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. நடுரோட்டில் கேப் டிரைவரை இளம்பெண் தாக்கியதை பார்த்து, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவரையும் இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் அந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்துவதற்கு அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை. பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அவர் தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் பெண் போலீசார் யாரும் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கேப் டிரைவரை இளம்பெண் தொடர்ச்சியாக தாக்கி கொண்டே இருந்தார்.

எனவே சிறிது நேரத்திற்கு பிறகு சிலர் இந்த பிரச்னையில் தலையிட்டனர். ஆனால் உதவிக்கு வந்த நபரையும் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் தாக்க தொடங்கினார். ஆனால் கேப் டிரைவரை போல் இவர் அமைதியாக இருக்கவில்லை. அந்த இளம்பெண்ணை அவர் திருப்பி தாக்கினார். இந்த பிரச்னை ஏன் ஏற்பட்டது? என்பதை அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் நமக்கு எடுத்து காட்டுகின்றன.

வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த இளம்பெண் இயல்பாக ஜீப்ரா க்ராஸிங்கில் நடந்து செல்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது பேருந்து ஒன்று அவர் மீது மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அப்போது அந்த வழியாக அந்த இளம்பெண்ணிடம் அடி வாங்கிய கேப் டிரைவர் காரில் வந்தார்.

அவர் அந்த இளம்பெண்ணை பார்க்கவில்லை என்பது போல் தெரிகிறது. எனவே அவருக்கு நெருக்கமாக சென்று காரை நிறுத்தினார். கார் அந்த இளம்பெண் மீது மோதியதா? இல்லையா? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த இளம்பெண் காயம் அடையவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த காரின் ஓட்டுனரை வலுக்கட்டாயமாக வெளியே வரவழைத்த அந்த இளம்பெண் சரமாரியாக தாக்க தொடங்கினார்.
அதன்பின்புதான் மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன. இந்த சம்பவம் காரணமாக கேப் டிரைவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது என்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த செய்தி வேகமாக பரவியதும், நெட்டிசன்கள் அந்த கேப் டிரைவருக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கினர்.
#ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் அந்த கேப் டிரைவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நெட்டிசன்கள் பலரும் அந்த இளம்பெண்ணிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








