ஹைப்பர்லூப் மனித சோதனையோட்டம் வெற்றி... புல்லட் ரயிலைவிட இது மிக அதிக வேகம்... வீடியோ...
ஹைப்பர்லூப் மனித பயண சோதனையோட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பயணத்திற்கான பரிணாம வளர்ச்சி நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே செல்கின்றது. முதலில் மாட்டு வண்டியில் பயணிக்க தொடங்கிய நாம் தற்போது விமானம், பறக்கும் கார் என பலவிதமான வாகனங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளோம். இந்த நிலையில் மற்றுமொரு புரட்சியாக ஹைப்பர்லூப் எனப்படும் காந்த விசையால் இயங்கக்கூடிய போக்குவரத்தும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் டெவ்லூப் சோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைப்பர்லூப் சார்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே சோதனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மனித பயணம் பற்றிய சோதனையே அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்டது.

இந்த சோதனையோட்டமே தற்போது வெற்றிகரமாக முடிவடைந்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை விர்ஜின் ஹைப்பர்லூப் திங்களன்று வெளியிட்டது. இதில் ஒரு ஆண் மற்றும் பெண் என இரு பயணிகளைக் கொண்டு விர்ஜின் ஹைப்பர்லூப் பரிசோதனையைச் செய்யப்பட்டது. இவர்கள் இருவருமே விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர்.

இவர்களைக் கொண்டே மணிக்கு 172 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் ஹைப்பர்லூப் இயக்கப்பட்டது. இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து மணிக்கு 1,000 கி.மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைக் கொண்டே 15 செகண்டுகளில் 500 மீட்டரை மனிதர்களுடன் விர்ஜின் ஹைப்பர் கடந்திருக்கின்றது.

சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் புனேவை பூர்வீமாகக் கொண்டவரும், விர்ஜின் ஹைப்பர்லூப் பவர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிபுணருமான தனேய் மஞ்ரேகர் அடுத்த ரைடை ஹைப்பர்லூப்பில் செய்ய இருக்கின்றார். இதுகுறித்த தகவலை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

ஹைப்பர்லூப் என்பது அடுத்த தலைமுறை பயண முறையாகும். இது நெடுவரிசைகளில் அமைக்கப்பட்ட குறைந்த அழுத்தம் கொண்ட குழாய்களின் வழியே அதிக வேகத்தில் பயணிக்கும் ஓர் வாகனம் ஆகும். இதனை வாகனம் என்பதற்கு மாத்திரைப் போன்ற பெட்டி என்று குறிப்பிடலாம். ஏனெனில் இதுபோன்ற அமைப்பிலேயே மனிதர்கள் பயணிப்பதற்கு ஏதுவான இருக்கைப் போன்றவை நிறுவப்பட இருக்கின்றன.
இந்த பயண முறை இந்தியாவில் அமைவதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகியிருக்கின்றன என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இதற்கான விருப்பத்தை துபாய், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தெரிவித்திருக்கின்றன. மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அமைவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இதன் வெற்றிகரமான மனித பயண சோதனையோட்டம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு துபாய்-அபுதாபி நகரங்களுக்கு இடையே கட்டமைக்கப்பட உள்ளது. இந்த சாதனம் போக்குவரத்து உலகில் புதிய புரட்சியை படைக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








