ஃபோக்ஸ்வேகன் டீசல் எஞ்ஜின் மோசடியை திரைப்படமாக்கும் டைட்டானிக் நாயகன்!
ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், அதன் டீசல் இஞ்ஜின் சோதனையில் தேறுவதற்காக மென்பொருள் கொண்டு ஊழல் செய்த சம்பவம் திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் இஞ்ஜின் ஊழல் சம்பவம் ஆட்டோமோபைல் உலகில் மிகப் பெரிய மோசடி சம்பவமாக கருதப்படுகிறது. இதை மையமாக வைத்து ஒரு ஹாலிவுட் படம் தயாராக உள்ளது.

டைட்டானிக் பட நாயகனும், முன்னணி ஹாலிவுட் நடிகருமான லியார்னாடோ டி கேப்ரியோ தனது அடுத்த படமாக ஃபோக்ஸ்வேகன் டீசல் எஞ்சின் மோசடியை மையப்படுத்தி, சினிமா எடுக்க உள்ளார்.
எண்டெர்டெய்ன்மெண்ட் வீக்லி-யில் வெளியாகிய தகவல்களின் படி, இந்த டீசல் இஞ்ஜின் ஊழல் தொடர்பாக புத்தகம் ஒன்று எழுதப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் 2014-ல், இந்த பிரச்னை துவங்கிய சமயம் முதல், நியூ யார்க் டைம்ஸ் இதழுக்காக, இது தொடர்பாக செய்திகளை எழுதி வரும் ஜாக் எவிங் தான் இந்த புத்தகத்தை எழுதுகிறார்.
ஐரோப்பிய பொருளாதார பத்திரிக்கையாளரான ஜாக் எவிங் எழுத உள்ள இந்த புத்தகத்தின் உரிமையை, பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனமும், லியார்னாடோ டி கேபிரியோவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அப்பியான் வே-வும் சேர்ந்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
வேறு யாரையும் காட்டிலும், இந்த சம்பவம் தொடர்பான திரைப்படத்தை லியார்னாடோ டி கேப்ரியோ தயாரிப்பதற்கான காரணம் தெரியுமா? லியார்னாடோ டி கேப்ரியோ தீவிரமான சுற்றுச்சூழல் ஆர்வலராக திகழ்கிறார். அவர் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்த்தும், பருவ நிலை மாற்றங்களை எதிர்த்தும் போராடி வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல், லியார்னாடோ இந்த உயரிய நோக்கத்தை அடைவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்த திரைப்படம் வெளியானால், அது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மதிப்புக்கு பெரும் களங்கத்தையும், விற்பனையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








