இவ்வளவு நடந்தும்... காரில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்!! இவ்வளவு தரமான காரை தயாரித்தது யார் தெரியுமா?
ஹரியானா மாநிலத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) காருடன் T-வடிவத்தில் பேருந்து ஒன்று மோதியுள்ளது. இந்த மோதலில் கார் அப்பளம் போல் நொறுங்கிய போதிலும், உள்ளே இருந்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சாலை விபத்துகள் நம் இந்தியாவில் அதிகளவில் நடைபெறுவதற்கு ஆக்ரோஷமான டிரைவிங்கை முக்கிய காரணமாக சொல்லலாம். பைக் மற்றும் கார்களில் செல்வோர் தான் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவர் என சொல்லிவிட முடியாது. ஏனெனில், கனரக லாரிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கூட ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவதையும், அத்தகைய டிரைவிங்கினால் ஏற்பட்ட விபத்துகளையும் பலமுறை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அவ்வாறு, ஆக்ரோஷமாக ஓட்டப்பட்ட பேருந்தினால் ஏற்பட்ட விபத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ஹரியானா மாநிலம் ரெவாரி மாவட்டத்தில் பஹல்வாஸ் என்ற பகுதியில் 3 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் காரின் மீது, பக்கவாட்டில் இருந்து வந்த பேருந்து மோதியுள்ளது. வேறொரு திசையை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் பேருந்து மோதியதில் கார் சில மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.
இந்த மோதலினால், விபத்திற்குள்ளான போலோ கார் அப்பளம் போல் நசுங்கியுள்ளது. பேருந்தின் முன்பக்கம் சில அடி உயரத்திற்கு காரின் மீது ஏறி நின்றுள்ளது. இந்த விபத்து கடந்த ஜூன் 26ஆம் தேதி நடந்தது. ஆனால் இந்த விபத்து தொடர்பான விபரங்கள் அடங்கிய வீடியோ தற்போதுதான் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை செய்திக்கு இறுதியாக கீழே காணலாம்.

இந்தியாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த விபத்தை மட்டும் ஸ்பெஷலாக பார்ப்பதற்கு காரணம், பேருந்து மோதியதில் கார் நசுங்கிய போதிலும் காருக்குள் இருந்த மூவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தது மட்டுமின்றி, விபத்தின்போது அவர்களாகவே காருக்குள் இருந்து வெளியே வந்துள்ளனர். இத்தனைக்கும், காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் விபத்தின்போது காருக்குள் பின்னோக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மற்றப்படி, சம்பவத்தின்போது பேருந்துக்குள் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. அதேபோல், இந்த விபத்துக்கு முக்கியமான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. பேருந்து ஓட்டுனர் கண்ட்ரோலை இழந்திருக்கலாம் அல்லது பேருந்தின் பிரேக்குகள் முறையாக செயல்படாமல் போயிருக்கலாம் என கூறப் படுகிறது.

நமக்கு கிடைத்துள்ள வீடியோவில், விபத்து நடந்த சாலை மழையினால் ஈரமாக உள்ளதை காண முடிகிறது. பேருந்தின் டயர்கள் சரியான தரத்தில் இல்லையெனில், ஈரமான சாலையில் பிரேக் முறையாக வேலை செய்தாலும் பயனில்லாமல் போய்விடும். ஒருவேளை இந்த விபத்துக்கு போலோ கார் காரணமாக இருப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. அதாவது, பேருந்துக்கு குறுக்கே கார் திடீரென வந்து இருக்கலாம்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்சமயம் போலோ கார்களை விற்பனை செய்வதில்லை. அதன் விற்பனையை ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நிறுத்திவிட்டது. போலோ ஹேட்ச்பேக் கார் ஆனது செயல்படுதிறனிலும், ஹேண்ட்லிங்கிலும் சிறப்பானதாகவே இருந்தது. ஆனால் தொழிற்நுட்ப அம்சங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தினாலேயே போலோவின் விற்பனை நிறுத்தப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான விபத்துகளில் சிக்கிய காரில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர்பிழைத்த சம்பவங்களை சிலமுறை பார்த்து உள்ளோம். ஆனால், அவ்வாறான கார்கள் பெரும்பாலும் டாடா மோட்டார்ஸின் கார்களாகவே இருக்கும். ஆனால், இம்முறை ஃபோக்ஸ்வேகன் காரின் தரம் பயணிகளின் உயிர்களை காப்பாற்றி உள்ளது.


Click it and Unblock the Notifications









