மஹாராஷ்டிராவில் இருந்து கேரளா வர ஒரு வருஷம் ஆச்சு... இந்த லாரியில் அப்படி என்ன இருக்குனு தெரியுமா?
மஹாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று கேரளாவிற்கு வர ஒரு வருடத்திற்கும் மேலாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் அல்லது அமேசானில், செல்போன் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பொருளை ஆர்டர் செய்து விட்டு, ஒரு சில நாட்கள் காத்திருக்கும் பொறுமையே பலரிடம் இல்லை. ஆர்டர் செய்த பொருள் எப்போதுதான் டெலிவரி கிடைக்குமோ? என துடியாய் துடித்து விடுகின்றனர். ஆனால் இங்கே ஒரு சரக்கு மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் இருந்து கேரளாவின் வட்டியூர்காவுக்கு செல்ல ஒரு வருடத்திற்கும் மேலாக எடுத்து கொண்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூட இன்னமும் அந்த சரக்கு சென்று சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக் நகரில், ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவை (Aerospace Autoclave) ஏற்றிக்கொண்டு, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் புறப்பட்ட லாரி ஒன்று இன்னமும் அதன் இலக்கை சென்றடையவிலை. அது ஏன்? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

வால்வோ எஃப்எம்12 (Volvo FM12) லாரி ஒன்று, சுமார் 70 டன் எடையுள்ள சரக்கை சுமந்து கொண்டு கடந்த ஒரு வருடமாக பயணம் செய்து கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவை ஏற்றிக்கொண்டு, கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தை நோக்கி அந்த லாரி சென்று கொண்டுள்ளது.

இது 74 சக்கரங்களை கொண்ட பிரம்மாண்ட லாரி ஆகும். ஆனால் ராட்சத அளவு காரணமாக, ஒரு நாளைக்கு சராசரியாக 5 கிலோ மீட்டர்களை மட்டுமே இந்த லாரி கடக்கும். இந்த லாரி ஏற்றி செல்லும் சரக்கின் உயரம் 7.5 மீட்டர்கள். அகலம் 6.65 மீட்டர்கள். இந்த பிரம்மாண்ட அளவு காரணமாக இது சாலையை அப்படியே அடைத்து கொள்ளும்.

இந்த லாரி ஒரு பகுதிக்கு வரும்போது, மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும். குறிப்பாக நகரங்களை கடக்கும் சமயங்களில், இந்த லாரிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். நாசிக் மற்றும் வட்டியூர்காவுக்கு இடைப்பட்ட தொலைவு சுமார் 1,700 கிலோ மீட்டர்கள்.

சாதாரண லாரிகள் இந்த தொலைவு சுமார் ஒரு வார காலத்தில் கடந்து விடும். ஆனால் இந்த ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவை ஏற்றி வரும் லாரியால் அப்படி எல்லாம் வேகமாக செல்ல முடியாது. மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். இந்த லாரி செல்வதற்காக ஒரு சில இடங்களில் மரங்கள் வெட்டப்படும். மேலும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்படும்.

இந்த லாரியில் ஒரு படையே வேலை செய்து வருகிறது. லாரி முன்னேறி செல்வதில் இருக்கின்ற தடைகளை கண்டறிவதும், அதை சரி செய்வதும்தான் அவர்களின் பணி. இந்த பணியை 32 பேர் கொண்ட குழு செய்து வருகிறது. இந்த லாரி மிகவும் மெதுவாக ஊர்ந்துதான் செல்லும் என்பதால், இந்த பணியாளர்கள் பெரும்பாலும் லாரியை ஒட்டியே நடந்து வருவார்கள்.

சரக்கு பாதுகாப்பாக உள்ளதா? ஏதேனும் பொருளின் மீது உரசுகிறதா? என்பதையெல்லாம் அவர்கள் பார்த்து கொண்டே இருப்பார்கள். இந்த லாரி தற்போது கேரள மாநிலத்திற்குள் நுழைந்து விட்டது. அடுத்த ஒரு சில நாட்களில் தனது இலக்கை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளைவை ஏற்றி சென்று கொண்டிருப்பது வால்வோ எஃப்எம் சீரிஸ் டிரக் ஆகும்.

இந்த மாடலில் ஒரு சில இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதில், குறைந்த செயல்திறன் கொண்டது 10,800 சிசி இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 450 பிஎச்பி பவரையும், 2,150 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் ஹை-பவர் வேரியண்ட்கள், 12,800 சிசி இன்ஜினை பெற்றுள்ளன.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரையும், 2,500 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இதை லாரி என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. டார்க்கை வாரி வழங்க கூடிய அசூரன் என்றுதான் சொல்ல வேண்டும்!


Click it and Unblock the Notifications








