10 அடி காம்பவுண்டு சுவரை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த காரில் மோதி கவிழ்ந்த கார்..!!
வேகன்-ஆர் கார் ஒன்று ஏற்படுத்திய விபத்து மழைக்காலங்களில் கவனமுடன் வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என நமக்கு உணர்த்தியுள்ளது.
கோடிக்கணக்கான மக்களும், வாகனங்களும் நிறைந்த ஒரு நாட்டில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் மிகவும் சகஜமான ஒன்று தான்.

ஆயினும் விபத்துக்கள் நிகழும் போது அவை எந்த அளவுக்கு கொடூரமாக இருக்கும் என்பதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது ஒரு கோரமான விபத்து அரங்கேறியுள்ளது, அது சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தினை பார்க்கும் போது வேகம் விவேகம் அல்ல என்பது தெளிவாவதோடு, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தருவதாகவும் அமையும் என நம்பலாம்.

கர்நாடக மாநிலத்தின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ளது மூடபித்ரி என்ற சிறிய நகரம், இது மூங்கில் காடுகளால் நிறைந்த இயற்கை எழில்கொஞ்சும் ஊர் ஆகும்.

மூடபித்ரி நகரில் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அங்கு மழை பெய்து கொண்டிருந்தது, அங்குள்ள ஒரு சிறிய சாலையில் வலது புறம் மாருதிசுசுகி டிசையர் கார் ஒன்று சாலையோர கடைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த சமயம் அதிவேகமாக வந்த மாருதி வேகன்-ஆர் கார் ஒன்று அருகில் இருந்த காம்பவுண்டு சுவரை உடைத்துக்கொண்டு மாருதி டிசையர் கார் மீது மோதி கவிழ்ந்தது.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்தேரிய இந்த விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னர் தான் டிசையர் காரில் இருந்து அதன் ஓட்டுநர் வெளியே வந்திருக்கிறார்.

மழைக் காலம் என்பதால் சாலை முழுவதும் ஈரமாக இருந்துள்ளது, இதில் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கே பிரேக் பிடிப்பது சிரமம் என்ற நிலையில் வேகன்-ஆர் காரைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிரேக் பிடிக்க முயன்றும் கார் வழுக்கிச் சென்று அந்த காம்பவுண்டு சுவரை பெயர்த்துக் கொண்டு சென்றுள்ளது.

10 அடி அகல சுவரை கார் இடித்துத் தள்ளியதை கண்ட அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். டிசையர் காரில் ஒரு பெண்ணும் அவரின் குழந்தையும் இருந்துள்ளனர், இந்த விபத்தில் அவர்கள் காயமின்றி தப்பினர், இருந்தாலும் வேகன்-ஆர் காரின் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்துள்ளார்.

இது காண்போரை அதிர வைத்தாலும், மழைக்காலங்களில் எப்படி கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

மழை நேரங்களில் சாலைகளில் அதிகப்படியான ஈரம் இருக்கும், அப்போது அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஈரமான சாலையில் பிரேக் பிடிக்க முயன்றால் அது டயரை வழுக்கச் செய்யும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிர வைக்கும் அந்த விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சியை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..


Click it and Unblock the Notifications








