இனி இந்த நகர வாசிகளால் காரை கழுவ முடியாது.. இதற்கு புதிய சட்டம் விதிக்கும் அபராதம் எவ்வளவு தெரியுமா?
வாகனங்களை கழுவுதல், புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட நீர் வீணடித்தல் செயலுக்கு அபராதம் விதிக்கும் முறையை நகராட்சி கையிலெடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நீரின்றி அமையாது உலகு... உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சமமான ஒன்று நீர். ஓர் மனிதன் உணவின்றிகூட பல நாட்கள் வாழ்ந்துவிட முடியும். ஆனால், நீரின்றி ஒரு நாளை கழிப்பதே பெரும் சிரமம். ஆனால், அத்தகைய நீரை நாம் வருங்காலத்திற்காக சேர்த்து வைக்கின்றோமா, என கேட்டால் இல்லவே இல்லை.

இருக்கும் நீரையும் வீணடித்து எதிர்கால சந்ததியினரின் நீர் தேவையை கேள்விக்குறியாக்கி வருகின்றோம். அதோடு மட்டும் விடால், இருக்கும் நீர் நிலைகளையும் குப்பை மேடுகளாக மாற்றி, வீணடித்து வருகின்றோம். மேலும், பாலித்தீன் பைகளை பயன்படுத்தி நிலத்தடிக்குள் நீர் செல்வதையும் தடுக்கின்றோம்.

இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் கடல் நீர் உட்புகும் சூழல் ஏற்படுகின்றது. இவையனைத்திற்கும், அரசு மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது, மக்களாகிய நாமும்தான். மழை பெய்யும்போது, அந்நீரை வீணடித்து வருகின்றோம். இதுவே, நன்னீர் சேரவேண்டிய இடத்தில் கடல்நீர் புகுகின்றது.

இவ்வாறு, எதிர்காலத்தைச் சற்றும் சிந்திக்காமல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும், எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.
இந்நிலையில், வீணாகும் தண்ணீரினை சேமிக்கும் விதமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகராட்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மீறும் குடிமக்களுக்கு அபராதம் உள்ளிட்ட சில கடுமையான தண்டனை வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது. முக்கியமாக, வாகனங்களை சுத்தம் செய்வதற்காக நீர் பயன்படுத்தப்பட்டால், அதற்கு உடனடியாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக நகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில், அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் வீணடிப்பதைத் தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கையை இந்தோர் நகராட்சி மேற்கொண்டுள்ளது. மேலும், இந்தோரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாகவும் இந்த அதிரடி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், வாகனங்களை கழுவுதலுக்கு மட்டுமின்றி புல்வெளிகளுக்கு நீர்ப்பாசனம் செய்தல், கட்டுமானம் வேலைகளுக்காக நீரை வீணடித்தல், நீர் தொட்டிகள் நிரம்பி வழிதல் உள்ளிட்ட பல்வேறு நீர் வீணடித்தலுக்கு ரூ .100 முதல் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராதம் விதிக்கத் தவறினால், நீர் இணைப்பு துண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தூர் நகராட்சி அறிவித்துள்ளது.

இந்தூர் நகராட்சியின் நீர்வழங்கல் துறையின் பொறுப்பாளரான பால்ராம் வர்மா இதுகுறித்து கூறுகையில், "நீர் வீணடித்தலை முதல் முறையாக மீறினால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இந்த விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். இது ஒவ்வொரு முறையும் ரூ. 500 என உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வாகனங்கள் மற்றும் வீட்டின் முற்றங்களை கழுவுதல், புல்வெளிகளுக்கு நீர்ப்பாசனம் செய்தல், கட்டுமானம், நீர் சேகரிப்பு தொட்டிகளை நிரம்பி வழியச் செய்தல் அல்லது எந்தவிதமான நீர் வீணடித்தலுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.

இதற்காக விதிகளை ஏற்கனவே உருவாக்கிவிட்டதாக பல்ராம் வர்மா தெரிவித்திருந்தார். மேலும், இதற்காக மண்டலம் வாரியாக குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது. அவர்கள், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். அப்போது, நீர் வீணடித்தலில் ஈடுபட்டால், அவர்களுக்கு உடனுக்குடன் அபராதத்திற்கான ரசீது வழங்கப்பட உள்ளது.

இந்தூர் நகராட்சியின் இந்த அதிரடி அறிவிப்பால், அப்பகுதி மக்கள் சற்று கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் பல்வேறு அசுத்தமற்ற சூழலைச் சந்திக்க நேரிடும். அப்போது அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற கேள்விக்குறி எழும்பியுள்ளது.

இருப்பினும், அதுகுறித்த தெளிவான தகவல் நகராட்சியிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆகையால், இதுகுறித்த தகவல்களை பொறுத்திருந்துதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல் மற்றும் மற்ற சுவாரஷ்யமான தகவலை உடனுக்குடன் அறிந்துகொள்ள நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ்குழுவுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








