களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...
கத்தி படத்தை மிஞ்சும் வகையில், களத்தில் இறங்கி முதியவர்கள் செய்த தரமான சம்பவத்திற்கு, இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத நாடு இந்தியா. இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை எள் அளவுக்கு கூட மதிப்பதில்லை. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதில் இந்தியர்கள் உலக பிரசித்தி பெற்றவர்கள். இதனால் விதிமுறைகளை முறையாக பின்பற்றும் நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியர்களை கிண்டல் அடிக்கும் நிலை காணப்படுகிறது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததால், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது.

ஆனால் சட்ட திட்டங்களை மிகவும் கடுமையாக்கினாலும் கூட, தொடர்ச்சியாக பலர் விதிமுறைகளை மீறி கொண்டுதான் உள்ளனர். செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களை போல், இந்தியர்கள் செய்யும் மற்றொரு முக்கியமான விதிமீறல் நடைபாதையில் வாகனங்களை ஓட்டுவது.

நடைபாதையா? அது எங்கே இருக்கிறது? என நீங்கள் கேட்பது நியாயம்தான். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பாதசாரிகளுக்கான நடைபாதைகள் கிடையாது. அப்படியே இருந்தாலும், பூக்கடை, பழக்கடை என ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன. அதையும் மீறி இருக்கும் கொஞ்ச நஞ்ச நடைபாதையையும் வாகன ஓட்டிகள் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.

சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதைகள் பாதசாரிகளுக்கானது. ஆனால் டூவீலர்களும், கார்களும் வேகமாக செல்ல இதனை பயன்படுத்தி கொள்கின்றன. இதனால் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து போலீசாரும் கூட இந்த விதிமீறலை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

இப்படிப்பட்ட சூழலில், நடைபாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது முதியவர்கள் சிலர் தக்க பாடம் புகட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் காட்டு தீயாய் பரவி வரும் சூழலில், இந்தியா முழுவதிலும் இருந்து சம்பந்தப்பட்ட முதியவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண்தான். இல்லை... இல்லை... அவர் ஒரு சூப்பர்வுமன்.

போக்குவரத்து போலீசார் செய்ய வேண்டிய பணியை செய்து, நாடு முழுவதும் அவர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் பெயர் நிர்மலா கோகலே (Nirmala Gokhale). இந்த சூப்பர்வுமன் மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்தவர். இவர் செய்த காரியத்தை செய்ய நம்மில் எத்தனை பேர் முன் வருவோம்? என்பது தெரியவில்லை.

புனே நகரில் எஸ்என்டிடி கல்லூரிக்கு அருகே உள்ள கேனல் ரோடுக்கு இவர் சமீபத்தில் சென்றார். அப்போது வாகன ஓட்டிகள் சிலர் நடைபாதையில் பயணித்து கொண்டிருந்தனர். ஆனால் அநியாயத்திற்கு எதிராக சமூக வலை தளங்களில் மட்டும் பொங்கும் ஒரு சிலரை போல் அல்லாமல், நிர்மலா கோகலே துணிந்து களத்தில் இறங்கினார்.

நடைபாதையின் நடுவே சென்ற அவர், வாகன ஓட்டிகள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத வகையில், பாதையை அடைத்து நின்று கொண்டார். அப்போது நடைபாதையின் மீது இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்டி வந்தார். அவரை மறித்த நிர்மலா கோகலே, ''நீங்கள் நடைபாதையில் மேற்கொண்டு பயணம் செய்வதாக இருந்தால், என் மீது வண்டியை ஏற்றி விட்டு செல்லுங்கள்.

இல்லாவிட்டால் ஒழுங்காக சாலையில் வண்டியை ஓட்டுங்கள்'' என தடாலடியாக கூறினார். இதனால் அந்த இளைஞர் அதிர்ந்து விட்டார். பின்னர் நமக்கு எதுக்கு வம்பு? என ஒழுங்காக சாலையில் வண்டியை இறக்கி விட்டார். நிர்மலா கோகலேவின் அதிரடியை கண்ட இன்னும் சில முதியவர்களும், அவருடன் இணைந்து கொண்டனர்.

உண்மையில் போக்குவரத்து போலீசார் செய்ய வேண்டிய பணியை முதியவர்கள் இணைந்து செய்துள்ளனர். முதியவர்களால் பெரிதாக என்ன சாதித்து விட முடியும்? என்று எண்ணும் நமது சமுதாயத்தில், இந்த வாதம் தவறானது என்பதை அவர்கள் ஒன்றாக சேர்ந்து நிரூபித்து காட்டியுள்ளனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த அதிரடி நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட முதியவர்களை நெட்டிசன்கள் தற்போது பாராட்டு மழையில் நனைய வைத்து கொண்டுள்ளனர். இதுபோன்று விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் தவறை உணர்ந்து தங்களை திருத்தி கொள்ள வேண்டிய நேரமிது. அதேபோல் போலீசாரும் தங்கள் கடமையை உணர்ந்து, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications