கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
கேரளாவில் செயல்பட்டுவரும் வாட்டர் மெட்ரோ போக்குவரத்து சேவை எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆகையால், கேரளாவிற்கு செல்வோர் முடிந்த வரையில் இந்த வாட்டர் மெட்ரோவில் ஒருமுறையாவது சென்றுவர பாருங்கள். கேரளாவின் ஐகானாக மாறிவரும் இந்த வாட்டர் மெட்ரோ சேவையை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மெட்ரோ இரயில் பெட்டிகளை போன்று தோற்றத்தை கொண்டிருப்பதினாலேயே நீரில் இயக்கப்படும் இந்த படகு போக்குவரத்து சேவையை வாட்டர் மெட்ரோ என அழைக்கின்றனர். கேரளாவில் படகு போக்குவரத்து ஆச்சிரியமான ஒன்று கிடையாது. நமக்கு கேரளா என்றவுடனே ஞாபகத்திற்கு வருவது அதன் இயற்கை அழகும், நீர்நிலைகளும், அதில் இயங்கும் படகுகளும் தான்.

அந்த அளவிற்கு படகு போக்குவரத்துகள் கேரளா மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவி காணப்படுவதால், வாட்டர் மெட்ரோ சேவை பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் துவங்கப்பட்டது. ஆனால், மெட்ரோ இரயிலை போல் மூடிய அரங்கிற்குள் ஏசி வசதி உடன் வழங்கப்படுவதால், வாட்டர் மெட்ரோ மக்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில்தான், தற்போது கேரளாவில் வாட்டர் மெட்ரோ சேவையின் நெட்வொர்க் பெரியதாக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த வாட்டர் மெட்ரோ சேவையில் 4 புதிய முனையங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. கேரளாவில் கொச்சி மாநகரத்தில் செயல்படும் இந்த வாட்டர் மெட்ரோ சேவையில் உயர்நீதிமன்றத்தில் இருந்து தென் சித்தூர் வரையிலும், தென் சித்தூரில் இருந்து சேரனல்லூர் வரையிலும் வாட்டர் மெட்ரோ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தட சேவைகள் மார்ச் 17ஆம் தேதியில் இருந்து துவங்கியுள்ளன.

தென்சித்தூருக்கு கேரள உயர்நீதிமன்ற பகுதியில் இருந்து தினமும் 4 முறை வாட்டர் மெட்ரோ இயக்கப்படும். அதேபோல், ரீட்டர்ன் பயணமும் தினமும் 4 முறை இருக்கும். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோருக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயங்கும் வகையில் இந்த புதிய வழித்தட சேவையின் நேர அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம், சேரனல்லூர் - தென் சித்தூர் இடையேயான வழித்தடத்தில் வாட்டர் மெட்ரோ சேவை ஆனது மதிய நேரங்களில் மட்டுமே இயக்கப்பட உள்ளன.
கொச்சி வாட்டர் மெட்ரோ லிமிடெட் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த வாட்டர் மெட்ரோவில் பயணிக்க ஒருவருக்கு ரூ.20இல் இருந்து ரூ.40 வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய வாட்டர் மெட்ரோ வழித்தட சேவைகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கொடியசைத்து துவங்கி வைத்தார். வாட்டர் மெட்ரோ சேவையை பெற்றுள்ள 4 புதிய முனையங்களாவன, தென் சித்தூர், முலாவுகாடு வடக்கு, சேரனால்லூர் மற்றும் எலூர் ஆகும்.

வாட்டர் மெட்ரோ சேவை கொச்சியில் அமைந்துள்ள தீவு பகுதிகளை பொருளாதார ரீதியாக செழிப்படைய செய்யும் என தெரிவித்துள்ள கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜ்வீ, கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையில் புதிய படகுகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக மற்றும் மற்ற சில திட்டங்களுக்காக சேர்த்து ரூ.94.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதியதாக 4 முனையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையில் முனையங்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. கேரளாவின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் கொச்சியில் அமைந்துள்ள இந்த வாட்டர் மெட்ரோ படகு சேவை உள்ளூர் வாசிகளுக்கு தினசரி போக்குவரத்துக்கு உதவிகரமானதாக இருக்கும் என்பது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும்.


Click it and Unblock the Notifications









