வயநாட்டில் ஹீரோவாக ஜொலிக்கும் இராணுவ வீரர்கள்... நேரம் பார்த்து மாநில அரசிடம் இளைஞர்கள் வைக்கும் கோரிக்கை!!
கேரள வயநாடு நிலச்சரிவு ஓர் மறக்க முடியாத சம்பவமாக அமைந்துவிட்டது. கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து பெய்த கனமழையினால் கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மக்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் என்பதால், நிறைய பேர் எதற்காக இறந்தோம் என்பதே தெரியாமல் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மொத்த இந்திய நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 413 ஆகும். நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 10 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றால், இந்த நிலச்சரிவு எந்த அளவிற்கு கோரமாக நடந்துள்ளது என்பதை அறியலாம். முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி என்கிற கிராமங்கள் முற்றிலுமாக அழிந்தன. அட்டமலை, புஞ்சிரி மட்டம், வெள்ளரி மலை ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு உடன் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கியவர்களில் சிலரது உடல்கள் சுமார் 10கிமீ தொலைவிற்கு அப்பால் கிடைத்துள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட கிராமங்கள் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. இந்த தேடுதல் பணியில் இந்திய இராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மலைப்பிரதேச பகுதி என்பதால், இந்த தேடுதல் பணியில் ஈடுப்படுபவர்களுக்கு தனி திறன்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி, அவர்களது வாகனங்களும் வழக்கமான வாகனங்களில் இருந்து ஸ்பெஷல் ஆனவைகளாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே, இராணுவத்தினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் பயன்படுத்தும் வாகனங்களை எல்லாம் பார்த்தால், அவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவைகளாக இருக்கும்.

சாதாரண சாலைகளில் மட்டுமின்றி, அத்தகைய வாகனங்கள் பள்ளம் மேடான, கரடு முரடான பகுதிகளுக்கும் தைரியமாக கொண்டு செல்லக்கூடியவைகளாக இருக்கும். இதனால், தற்சமயம் வயநாட்டில் அத்தகைய ஆஃப்-ரோடு வாகனங்கள் தான் அதிகமாக கண்ணில் படுகின்றன. அந்த காலத்து மாருதி சுஸுகி ஜிப்ஸியில் இருந்து மாடர்ன் மஹிந்திரா தார் வரையில் வயநாட்டில் மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், இவ்வாறு சவாலான பயணங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு வாகனத்தை மாடிஃபை செய்துக் கொண்டுள்ளவர்களும் தங்களது வாகனங்களை மீட்பு பணிக்கு உறுதுணையாக வயநாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், பலர் தங்களது மாடிஃபைடு வாகனங்களில் பல நூறு கிமீ தொலைவிற்கு பயணம் செய்து வயநாட்டை அடைந்துள்ளனர்.

இதனை காரணம் காட்டி, கேரளாவில் உள்ள ஆஃப்-ரோடு வாகன பிரியர்கள் மாடிஃபை வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டி கேரள மாநில அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளனர். கேரளா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே வாகனங்களை மாடிஃபை செய்வதற்கு தடை உள்ளது. வாகனத்தின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாமே தவிர்த்து, அதை தாண்டி வாகனத்தில் வேறெந்த மாடிஃபிகேஷனையும் மேற்கொள்ளக் கூடாது.
வாகனங்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அதற்கென இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கஸ்டமைசேஷன் நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம். சட்டத்திற்கு உட்பட்ட ஆஃப்-ரோடு வாகனங்களாக மஹிந்திரா தார், மாருதி சுஸுகி ஜிம்னி, ஃபோர்ஸ் குர்கா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. பல இலட்சங்களை செலவழிக்க தயார் என்றால், லேண்ட் ரோவர் டிஃபெண்டர், ஜீப் வ்ராங்க்லர், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் உள்ளிட்டவற்றை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் வாகனங்கள் இல்லாமல் தேடுதல் பணிகளை மேற்கொள்வது முடியாத காரியம் ஆகும். இந்த வகையில் பார்த்தால், கேரள ஆஃப்-ரோடு வாகன பிரியர்களின் கோரிக்கை ஏற்கக்கூடிய ஒன்றாக தோன்றலாம். ஆனால், மாடிஃபை வாகனங்களினால் கிடைக்கும் இந்த நன்மைகளை காட்டிலும், தீமைகள் அதிகம் ஆகும். ஆதலால், இந்த விஷயத்தில் ஆஃப்-ரோடு வாகன ஆர்வலர்களின் கோரிக்கையை கேரள அரசு ஏற்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications









