வேற லெவல்... தேசிய நெடுஞ்சாலைகள் விஷயத்தில் மத்திய அரசின் 'டார்கெட்' இதுதான்... என்னனு தெரியுமா?
தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசின் இலக்கு குறித்து அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அத்துடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் வேகம் அதிகமாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளை ஒட்டிய இடங்களில் சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர்கள் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் என விரும்புகிறோம்'' என்றார். கடந்த 2020-21ம் நிதியாண்டில், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் வேகம் சாதனை அளவாக ஒரு நாளைக்கு 37 கிலோ மீட்டர்களை தொட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனை ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர்களாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. வலுவான சாலை கட்டமைப்பானது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும் என்பதால்தான், தேசிய நெடுஞ்சாலைகளை வேகமாக கட்டமைக்கும் பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது.

எதிர்வரும் நிதியாண்டில் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் அளவை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பு நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூட இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றாலும், எல்லை பகுதிகளில் மத்திய அரசு சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. நாட்டின் பாதுகாப்புதான் அந்த காரணம். சாலை வசதிகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே, போர் நடைபெறும் சமயங்களில் ராணுவ வீரர்களால், எல்லை பகுதியை வேகமாக சென்றடைய முடியும்.

அத்துடன் ராணுவ தளவாடங்களையும் விரைவாக கொண்டு செல்ல இயலும். இல்லாவிட்டால் பிரச்னைதான். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்பதால்தான், எல்லை பகுதிகளிலும் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சாலைகளை மேம்படுத்தி வரும் அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை மத்திய அரசு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தவுள்ளது. இந்த நடவடிக்கையானது, பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

யமஹா நிறுவனம் கூட நடப்பாண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே விற்பனையில் உள்ள பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஏத்தர் 450எக்ஸ் போன்றவற்றுடன் யமஹாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் மாதமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








