4 லைக்ஸ் வாங்க என்னென்ன பண்ண வேண்டி இருக்கு!! போலீஸார் கொத்தா தூக்கிட்டு போயிடுவாங்க!
குஜராத் மாநிலம், சூரத்தில் ஓலை குடிசை வீடு போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனம் தொடர்பான வீடியோ வைரல் பயானி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான வாகனம் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இணையத்தில் லைக்குகளையும், கமெண்ட்களையும் பெற விசித்திரமான செயல்களில் பலர் ஈடுப்படுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. ஆனால், அதனை மட்டுமே மனதில் வைத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறந்துவிடுகின்றனர். அவ்வாறே சூரத்தில் சிலர், நகரும் குடிசை வீடு போன்றதான ஒரு வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.

குடிசை வீடு ஒன்று சாலையில் இயங்குவதை பார்த்தால் எவரொவருக்கும் ஆச்சிரியமாக இருக்கும் அல்லவா... அதை வைத்து சமூக வலைத்தள பக்கங்களில் பார்வையாளர்களை கவர்ந்து லைக்குகளையும் கமெண்ட்களையும் பெறுவதுதான் இவர்களது நோக்கம். ஆனால் இது, சாலை போக்குவரத்து விதிமுறைகளுக்கு முற்றிலும் தவறானது ஆகும்.
இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளவர்கள் ஓர் தொழில்முறை டிசைனர்களாகவே இருக்க வேண்டும். 2004ஆம் ஆண்டில் வெளிவந்த 'டார்சான்: தி வொண்டர் கார்' என்கிற திரைப்படத்தில் காட்சித்தரும் வாகனத்தின் டிசைனினால் ஈர்க்கப்பட்டு இந்த வாகனத்தை உருவாக்கி இருக்க வேண்டும். இந்த வாகனம் தொடர்பான வீடியோ, வைரல் பயானி என்கிற பிரபலமான பாலிவுட் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் உள்ள மோட்டாரின் மூலமாக மணிக்கு 15- 20கிமீ வேகத்தில் இந்த வாகனத்தில் செல்லலாம். ஆட்டோ டயரின் அளவுக்கு 4 சக்கரங்கள், நடுவில் ஒரு மோட்டார் உடன் இரும்பு ஃப்ரேமில் இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளனர். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் தெரியக்கூடாது என்பதற்காக சுற்றிலும் அட்டையினால் மறைத்துள்ளனர்.
இந்த அட்டையின் மீது வைக்கோலும், காய்ந்த ஓலை இலைகளையும் கட்டி ஓர் ஓலை குடிசை வீடு போன்ற செட்-அப்பை கொண்டுவந்துள்ளனர். மற்றப்படி, இந்த வாகனத்தை ஓட்டுவது, நிறுத்துவது எவ்வாறு என்பது தெரியவில்லை. காரை போன்று, சுற்றிலும் மூடிக்கொண்டு உள்ளே அமர்ந்து இயக்குவதுபோல் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வாகனத்தினுள் ஒரேயொருவரால் மட்டுமே அமர முடியும்.

அதாவது அந்த அளவிற்கு தான் இந்த வாகனத்தினுள் இடவசதி உள்ளது. கொஞ்சம் அசவுகரியமாக இருவர் கூட அமர முடியும். ஆனால், அவ்வளவு எடையை வாகனம் தாங்குமா என்பது தெரியவில்லை. உள்ளே இருந்து சாலையை பார்ப்பதற்கு 4 பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஜன்னல் கண்ணாடிகளுக்கு கருப்பு நிற டிண்ட் கொடுக்கப்பட்டு உள்ளதால், வெளியே இருப்பவர்களால் உள்ளே இருப்பவர்களை காண முடியாது.
இந்த வாகனத்தை நகர்த்த உதவும் மோட்டாரின் திறன் எவ்வளவு என்பதும் தெரியவில்லை. வைரல் பயானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரையில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். லைக்குகள் அதிகம் கிடைத்தாலும், பலரும் இத்தகைய வாகனத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வாகனம் சாலையில் ஓட்டுவதற்கு ஏற்றது அல்ல என்றே பலரும் நினைக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்றவர்கள் கூறுவதுபோன்று, இந்த வாகனம் பொது சாலையில் ஓட்டுவதற்கு ஏற்றது அல்ல. ஏனெனில், இந்த வாகனத்தை பார்த்துக் கொண்டே மற்ற வாகன ஓட்டிகள் தங்களது கவனத்தை இழக்கலாம். இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வளவு செலவு செய்து எவ்வாறு இவ்வாறான வாகனங்களை உருவாக்குகின்றனர் என்பது தெரியவில்லை. ஏனெனில், எப்படியிருந்தாலும் இத்தகைய வாகனத்தை சாலையில் கண்டால் போலீஸார் பறிமுதல் செய்வதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









