திடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்
எலெக்ட்ரிக் வாகனம் திடீரென வெடித்ததில், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவில் காற்று மாசுபாடு குறையும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைக்கப்படும்.

இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை கொடுக்கும். இப்படி பல்வேறு நன்மைகள் இருக்கும் காரணத்தால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட விலை சற்று அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்னை, அதன் பாதுகாப்பு குறித்த அச்சம்தான். எலெக்ட்ரிக் வாகனங்கள் சில சமயங்களில் திடீரென தீப்பற்றி எரிகின்றன. இதுகுறித்த செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வெளியாகி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்த மக்களுக்கு அச்சம் உள்ளது.

அந்த அச்சத்தை அதிகரிக்கும் வகையிலான ஒரு சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில், எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒன்று திடீரென வெடித்ததில், அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா டிரைவருக்கு 26 வயது மட்டுமே ஆகிறது.

மால்டா நகரின் இங்கிலீஷ் பஜார் பகுதியில் இருக்கும் கோரப்பிர்-கிருஷ்ணப்பள்ளி சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா திடீரென வெடித்தது. நேற்று முன் தினம் (ஜூலை 1ம் தேதி) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூர விபத்தில் எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் டிரைவரான முகம்மது இல்யஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறுகையில், ''எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் 4 பேட்டரிகளில், 2 பேட்டரிகள் வெடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்றனர். எலெக்ட்ரிக் ரிக்ஸா சாலையில் ஓடி கொண்டிருந்தபோது, திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் திடீரென வெடிப்பதோ அல்லது தீப்பற்றி எரிவதோ இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக உலகின் பல்வேறு பகுதிகளில், எலெக்ட்ரிக் கார்களும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களும் இதேபோல் தீக்கிரையாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தில், அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா பலத்த சேதமடைந்துள்ளது.

அதே சமயம் இது சதி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து என்ஐஏ (NIA - National Investigation Agency) விசாரணை நடத்த வேண்டும் என மால்டா (வடக்கு) பாஜக எம்பி காகென் முர்மு வலியுறுத்தியுள்ளார். இதன்பேரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








