இந்த பைக்க டிரெயின்ல வேற ஒரு ஊருக்கு அனுப்பி வைக்க எவ்ளோ ரூபா செலவாகும்.. நிறைய பேருக்கு இதுபற்றி தெரியவே இல்ல
ரயில்கள் வாயிலாக நாம மட்டுமில்லைங்க, நம்முடைய பைக்குகளையும் ஊர விட்டு ஊர் எடுத்துச் செல்ல முடியும். இதற்கு மிகவும் குறைவான கட்டணமே ரயில்வே நிர்வாகம் வசூலிக்கின்றது. அது எவ்வளவு? ரயிலில் இருசக்கர வாகனத்தை அனுப்பி வைக்க என்ன மாதிரியான நிபந்தனைகள் எல்லாம் இருக்கின்றன? இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ரயில்களில் பைக்கை பார்சலாக அனுப்பி வைக்கும் சேவை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்றது. இந்த சேவையை இந்தியன் ரயில்வே துறை மிகவும் மலிவான கட்டணத்தில் செய்து வருகின்றது. தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிக மிக குறைவான தொகையையே அது கட்டணமாக வசூலித்து வருகின்றது.

உதாரணமாக ஓர் பார்சல் சர்வஸ் நிறுவனத்தின் வாயிலாக பைக்கை வேறு மாநிலம் அல்லது மாவட்டம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு குறைந்தபட்சம் சில ஆயிரங்களையாவது நாம் செலவிட வேண்டி இருக்கும். அதே வேலையை இந்தியன் ரயில்வேஸ் வாயிலாக செய்ய வேண்டும் எனில் சில நூறு ரூபாய் அல்லது ஆயிரங்களே போதுமானது.
மேலும், பத்திரமாகவும் நம்முடைய இரண்டு சக்கர வாகனத்தை இடம் பெயர செய்துவிட முடியும். நீங்கள் அதே ரயிலில் பயணிக்கின்றீர்கள் என்றால் அந்த பைக்கை லக்கேஜாகவும், நீங்கள், ரயிலில் இல்லை என்றால் அதை பார்சலாகவும் எடுத்துக் கொண்டு ரயில்வேஸ் நிர்வாகம் பைக்கை அனுப்பி வைக்கின்றது.

இந்த சேவையை நம்மால் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டின் வாயிலாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இருப்பினும், ஆஃப்-லைனைக் காட்டிலும் ஆன்லைனில் நாம் கூடுதல் தகவல்களையும், வேலைகளையும் செய்ய வேண்டி இருக்கின்றது.
ஆஃப்-லைன் வாயிலாக பைக்கை அனுப்பி வைக்க என்ன செய்ய வேண்டும்? அருகாமையில் உள்ள ரயில்வே பார்சல் முன்பதிவு நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதுவே முதல் ஸ்டெப் ஆகும். அங்கு பார்சல் அனுப்பி வைப்பதற்கு என தனி படிவம் வழங்கப்படும். அதாவது, ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதைப் போல பைக்கை பார்சல் செய்வதற்கான முன் பதிவை செய்ய வேண்டும்.

பைக்கின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். அந்த கட்டணத்தை கவுண்டரிலேயே செய்ய வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்படும். இந்த ரசீதானது ஆர்ஆர் என்று கூறப்படுகின்றது. இது மிகவும் முக்கியமானது ஆகும். இதன் ஒரிஜினலைச் சமர்பித்தால் மட்டுமே நாம் அனுப்பி வைத்த வாகனத்தை மறு முனையில் இருப்பவர்களாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஆன்லைன் வழியாக பைக்கை அனுப்பி வைக்கும் வழிமுறைகள்: இந்தியன் ரயில்வேஸ் தளத்தில் இதற்கென தனி பக்கமே உள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங்கைப் போல பார்சலை புக் செய்ய அந்த பக்கம் உதவும். இதில் உள் நுழைய நமக்கு ஐஆர்சிடிசி கணக்கு இருக்க வேண்டும்.
பார்சல் அனுப்பி வைக்கப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடம் ஆகிய தகவல்களை அந்த தளத்தில் வழங்க வேண்டும். இதுதவிர, எந்த ரயிலில் அனுப்பி வைக்க வேண்டும் என்பதையும் நாம் தேர்வு செய்ய வேண்டும். இதை அடுத்து, வாகனத்தின் சரியான எடையையும் நாம் அந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதை அடுத்தே வாகனத்தை பார்சல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். இதற்கும் ஆர்ஆர் வழங்கப்படும். இந்த ரசீதை வைத்து நம்மால் பார்சலை டிராக் செய்யவும் முடியும். இத்துடன், வாகனம் இருக்கும் இடம் பற்றிய தகவலும் நமக்கு குறுஞ் செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். ஆஃப்லைனைப் போலவே ஆன்-லைன் புக்கிங்கிற்கும் நாம் ஆர்ஆர் காப்பியின் ஒரிஜினிலை உரிய இடத்தில் கொடுத்தால் மட்டுமே பைக்கின் டெலிவரி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கட்டண விபரம்: எடை மற்றும் இடை வெளி ஆகியவற்றைப் பொருத்தே இந்த கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் வசூலிக்கின்றது. பொதுவாக, ஓர் பைக்கிற்கு 500 கிமீ தூரத்திற்கு ரூ. 1,200 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இந்த கட்டணம் தூரம் மட்டும் எடையைப் பொருத்து மாறுபட வாய்ப்பு உள்ளது.
ஆனால், இது பேசிக்கான கட்டண நிலவரம் ஆகும். இதேபோல், வாகனத்தின் ஆவணங்களும் உங்களிடம் இருத்தல் வேண்டும் என்பது அவசியமானது. திருட்டு வாகனங்கள் கடத்தப்படுவதை தவிர்க்க இதுவும் சில நேரங்களில் சரிபார்க்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னர் பைக் பார்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர, முக்கிய ஆவணங்களான ஆர்சி புத்தகம் மற்றும் இன்சூரன்ஸ் காப்பி உள்ளிட்டவற்றை கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும். இதுதவிர, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸும் வைத்திருப்பது அவசியமாகவும். இதுதவிர, பைக்கை பார்சல் செய்யும் முன்னர் அதில் உள்ள பெட்ரோலை முழுமையாக காலி செய்ய வேண்டும்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பார்சல் அனுப்பும் முன் பெட்ரோல் டேங்கில் துளி பெட்ரோல்கூட இருக்க கூடாது. பாதுகாப்பு காரணமாக இதனை கட்டாயம் நாம் கடைபிடிக்க வேண்டும் என இந்தியன் ரயில்வேஸ் அறிவுறுத்துகின்றது. இது மீறப்படும் எனில் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கை பார்சல் வாயிலாக இந்தியாவின் எந்த மூலைக்கும் அனுப்பி வைத்துக் கொள்ள முடியும். சின்ன குக்கிராமங்களுக்குகூட இதை அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், ரயில்வே நிலையத்திற்கு அந்த பைக் அனுப்பி வைக்கப்படும். டோர் டெலிவரியை இதில் பெற முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









