அலுவலகம் செல்வது உள்ளிட்ட பயணங்களுக்கு கார் பயன்படுத்துவதில் உள்ள சாதகங்களும், பாதகங்களும்...
அலுவலகம் செல்வது உள்ளிட்ட பயணங்களுக்கு கார் பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அலுவலகம் செல்வது உள்ளிட்ட பயணங்களுக்கு சொந்த காரை பயன்படுத்தலாமா? அல்லது பேருந்து, ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தலாமா? என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். இந்த குழப்பத்திற்கு விடை காண வேண்டுமென்றால், சொந்த காரை பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகில் எந்த ஒரு செயல் என்றாலும், அதில் சில சாதகங்களும், சில பாதகங்களும் நிச்சயம் இருக்கும். இதன்படி சொந்த கார் பயன்படுத்துவதிலும் ஒரு சில சாதகங்களும், ஒரு சில பாதகங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை அடிப்படையாக வைத்து, சொந்த காரா? அல்லது பொது போக்குவரத்தா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

காரில் பயணம் செய்வதில் உள்ள சாதகங்கள்:
1. சௌகரியமும், சுதந்திரமும்
சௌகரியமும், சுதந்திரமும்தான் காரில் பயணம் செய்வதில் இருக்கும் மிக முக்கியமான நன்மைகள். நீங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் காரை நிறுத்தலாம். உங்கள் பயண நேரத்திற்கு ஏற்ப எந்த குறுக்கு வழியில் வேண்டுமானாலும் செல்லலாம். அதேபோன்று நீங்கள் காரை பயன்படுத்தினால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வேகத்தில் பயணித்து, நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் அடையலாம்.

இதன் மூலமாக தேவை இல்லாத பதற்றத்தை தவிர்க்க முடியும். அதே சமயம் உங்கள் குழந்தைகள், வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரையும் காரில் உங்களுடன் கூட்டி செல்ல முடியும். நீங்கள் செல்லும் வழியில் அவர்கள் இறங்க வேண்டிய இடம் இருந்தால், அவர்களை அங்கு பாதுகாப்பாக இறக்கி விட்டு விடலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

மேலும் பயணத்தின்போது நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிட முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. மனைவி, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக பேசி கொண்டே செல்லலாம் என்றாலும், அதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது நல்லது. சிறிய கவனக்குறைவு கூட பெரும் விபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

2. நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா?
காரில் பயணம் செய்வதில் இருக்கும் மற்றொரு நன்மை, நீங்கள் அனைத்து இடங்களையும் ரசித்து கொண்டே செல்ல முடியும் என்பதுதான். பொது போக்குவரத்து என்றால், நீங்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். மற்ற பயணிகளிடம் காணப்படும் பரபரப்பு, பதற்றத்தையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் கார் என்றால், கூட்ட நெரிசல், அதிக இரைச்சல் போன்றவை குறித்து புகார்கள், உங்களுக்கு பிடித்த பாடலை முணுமுணுத்து கொண்டே நீங்கள் உற்சாகமாக பயணிக்கலாம். அத்துடன் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர் என்றால், உங்களுக்கு விருப்பமான காட்சி/பகுதிகளை காண நேரிட்டால், எவ்வித பரபரப்பும் இல்லாமல் காரை நிறுத்தி ஒரு 'க்ளிக்' செய்யலாம்.

3. பணம் சேமிப்பு
காரில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக ஊழியர்களுடன் ஒன்றாக பயணிப்பதன் மூலமாக எரிபொருளுக்கு நீங்கள் செலவிடும் தொகையை ஓரளவிற்கு சேமிக்கலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாக பயணிப்பதை விட, ஒரே காரில் எரிபொருளுக்கான செலவை பகிர்ந்து கொண்டு பயணம் செய்வது சிறப்பானது.

4. தொற்று நோய்களிடம் இருந்து பாதுகாப்பு
பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை நீங்கள் பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சொந்த கார் என்றால், தொற்று நோய்களின் அச்சம் இல்லாமல் பயணம் செய்ய முடியும். கார் பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய நன்மை இது.

காரில் பயணம் செய்வதில் உள்ள பாதகங்கள்:
1. தொலைவு
காரில் பயணம் செய்வது சிறப்பான ஒரு அனுபவம்தான். குறிப்பாக குறுகிய தொலைவு பயணம் செய்வதற்கு கார் ஏற்றது. ஆனால் நீண்ட தூர பயணம் என்றால், கார் ஓட்டும்போது உங்களுக்கு சோர்வு ஏற்படலாம். இது தவிர இந்திய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலும், பொறுப்பற்ற மற்ற ஓட்டுனர்களின் கவனக்குறைவான செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த கூடும்.

மேலும் ஒரு சில பாதசாரிகள் செய்யும் அலட்சியமான செயல்களும், கார் ஓட்டுனர் இருக்கையில் உங்களுக்கு கோபத்தை வரவழைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற கவனக்குறைவான நபர்களுக்கு மத்தியில், நீண்ட நேரம் கார் ஓட்டினால், உங்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம். இது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

2. மோசமான வானிலை
காரில் பயணம் செய்வதில் இருக்கும் மற்றொரு குறைபாடு மோசமான வானிலைதான். இது உங்களுடைய பயணத்தை சீர்குலைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வானிலை மோசமாக உள்ள சமயங்களில், நீங்கள் கூடுதல் முன் எச்சரிக்கையுடன் காரை ஓட்ட வேண்டும். அத்துடன் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே, வானிலை முன் அறிவிப்புகளை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப திட்டமிடுவதும் அவசியம்.

மழை காலங்களில், வழுக்கும் தன்மை கொண்டதாக மாறும் சாலைகளும், அதில் உள்ள குண்டும், குழிகளும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விபத்து அபாயம் மட்டுமல்லாது, கார் சேதமடைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கனமழை, புயல் மற்றும் பனி ஆகியவை கார் ஓட்டுனர்களின் திறன்களை பாதித்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

3. மற்ற குறைபாடுகள்
பொது போக்குவரத்தை காட்டிலும், காரில் பயணம் செய்வது என்பது மலிவான தேர்வு கிடையாது. தனியாக பயணம் செய்வது என்றால், எரிபொருளுக்கு அதிக தொகை செலவிட வேண்டியது வரும். அத்துடன் நீங்கள் அவசர அவசரமாக அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது கார் பழுதாகி விட்டால், கால விரயம், மன உளைச்சல் ஏற்படுவதுடன், காரை சரி செய்ய கணிசமான தொகையை செலவிட வேண்டியிருக்கும்.

காரில் பயணம் செய்வதில் இருக்கும் மற்றொரு முக்கியமான பிரச்னை பார்க்கிங். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தில், காரை நிறுத்துவதற்கு உரிய இடம் இருக்கிறதா? என்பதை முன்னரே பரிசோதித்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் ஏன் காரில் வந்தோம்? என்று எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமாகி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








