நிறைய பேர் மறந்து விடுகின்றனர்... எரிபொருள் டேங்க்கை சரியாக மூடாமல் வண்டி ஓட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?
எரிபொருள் டேங்க் மூடி இல்லாமல் காரை ஓட்டினால் என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் டேஷ்போர்டில் நிறைய எச்சரிக்கை விளக்குகள் எரியும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏர்பேக், ஏபிஎஸ் போன்றவற்றில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், இந்த எச்சரிக்கை விளக்குகள் மூலமாக கார் அதனை நம்மிடம் தெரிவிக்கும். இதில், ஒரு சில எச்சரிக்கை விளக்குகளை நாம் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக பிரச்னையை சரி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் பின்னால் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் சில எச்சரிக்கை விளக்குகள் சாதாரணமானவை. இந்த எச்சரிக்கை விளக்குகள் நமக்கு சில தகவல்களை மட்டுமே வழங்கும். இதில், எரிபொருள் டேங்க் மூடி விளக்கும் ஒன்று. இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால், எரிபொருள் டேங்க் மூடி இல்லை அல்லது சரியாக மூடப்படவில்லை என அர்த்தம்.

ஒரு சில சமயங்களில் எரிபொருள் நிரப்பி முடித்த பிறகு, மூடியை இறுக்கமாக திருகி மூடுவதற்கு பலர் மறந்து விடுகின்றனர். தற்போது எரிபொருள் டேங்க் மூடியானது, ரப்பர் மூலம் காருடன் இணைந்த வகையிலேயே வருகிறது. இதன் காரணமாக எரிபொருள் டேங்க் மூடி தொலைந்து போவதற்கோ அல்லது பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் நீங்கள் மறந்து வைத்து விடுவதற்கோ வாய்ப்புகள் குறைவு.

எனவே எரிபொருள் டேங்க் மூடி எச்சரிக்கை விளக்கு எரிந்தால், காரை நிறுத்தி அதனை மூடி விட்டு தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கலாம். ஆனால் அனைத்து கார்களிலும் இந்த தொழில்நுட்பம் இருக்காது. தற்போதைய சூழலில் ஒரு சில கார்களில் மட்டும்தான் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பழைய கார்களில் இந்த தொழில்நுட்பம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும் பழைய கார்களில் பெட்ரோல்/டீசல் நிரப்பும்போது, எரிபொருள் டேங்க் மூடியை காரில் இருந்து தனியாக கழற்ற வேண்டியதிருக்கும். அப்போது ஒரு சிலர் ஞாபக மறதியில் எரிபொருள் டேங்க் மூடியை காரின் மேற்கூரையில் வைத்து விடுவார்கள்.

பின்னர் மூடி போட்டு மூடாமலேயே அங்கிருந்து சென்று விடுவார்கள். இதன் காரணமாக எரிபொருள் டேங்க் மூடி தொலைந்து விடும். எரிபொருள் டேங்க் மூடி தொலைந்து போவதற்கு இதேபோல் மேலும் சில காரணங்களும் இருக்கின்றன. இதுபோன்ற சூழல் ஏற்பட்டு, எரிபொருள் டேங்க் மூடி இல்லாமல் நீங்கள் காரை ஓட்டினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மூடி மூலம் எரிபொருள் டேங்க்கை மூடுவது, உங்கள் காரின் ஃப்யூயல் சிஸ்டம் சரியான அழுத்தத்தை பராமரிக்க உதவும். இதன் காரணமாக உங்கள் கார் 'ஸ்மூத்' ஆக இயங்கும். எனவே எரிபொருள் டேங்க் மூடி மிகவும் முக்கியமானது. எக்காரணத்தை கொண்டும் எரிபொருள் டேங்க்கை சரியாக மூடாமல் காரை இயக்காதீர்கள்.

எரிபொருள் டேங்க் மூடி இல்லாவிட்டால், ஆவியாதல் காரணமாக நீங்கள் எரிபொருளை இழக்க கூடும். எரிபொருளை வீணாக்குவது என்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது. அத்துடன் இது உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் விலை நினைவிற்கு வந்தால், யாரும் வீணாக எரிபொருளை வீணடிக்க மாட்டார்கள்.

அதேபோல் எரிபொருள் வீணாவதன் காரணமாக உங்கள் காரின் மைலேஜ் குறையும். இதன் காரணமாக நீங்கள் அதிக எரிபொருளை நிரப்ப வேண்டியிருக்கும். இதுவும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது மற்றும் உங்களுக்கு அதிக செலவை வைக்க கூடியது. எரிபொருள் டேங்க் மூடி எச்சரிக்கை விளக்கு எரியும் வசதி உள்ள கார்களில், நீங்கள் மூடியை சரியாக மூடாவிட்டால் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வசதி இல்லாத கார்களில், குறிப்பாக மூடியை தனியாக கழற்ற வேண்டிய தேவை உள்ள கார்களில் மூடி தொலைந்து போனால், அடுத்த முறை நீங்கள் எரிபொருள் நிரப்ப செல்லும்போதுதான் உங்களுக்கு இது குறித்த தகவலே தெரியவரும். எனவே எரிபொருள் டேங்க் மூடி குறித்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அத்துடன் வாகனங்களும் போதிய மைலேஜ் தராத காரணத்தால் வாகன உரிமையாளர்கள் தடுமாறி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிறிய அலட்சியத்தால் எரிபொருளை வீணாக்குவது தேவையில்லாமல் கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications