விமானத்தின் மீது பறவை மோதினால் என்ன நடக்கும்?
விமானத்தின் மீது பறவை மோதுவதால் ஏற்படும் சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்தும், அதில் பயணிகளின் உயிருக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்தும் இந்த செய்தியில் காணலாம்.
விமானங்களின் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனால் ஏற்படும் விபத்துக்கள், தவிர்ப்பதற்கு பைலட்டுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் பயணிகளுக்கு உயிர் போய், உயிர் வர வைக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சென்னை, கோவை விமான நிலையங்களில் அடிக்கடி பறவை மோதும் சம்பவங்கள் நடந்த விஷயங்கள் உண்டு. இதனை பைலட்டுகளும், கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உரிய நேரத்தில் சிறப்பாக கையாண்டனர்.

விமானத்தின் மீது பறவைகள் அல்லது வவ்வால்கள் எதிர்பாராதவிதமாக மோதும்போது, அது பல அபாயகரமான சூழல்களை உருவாக்குகிறது. அவ்வாறு பறவை மோதினால், ஏற்படும் பாதிப்புகள், அதனால் பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விவரிக்கிறது இந்த செய்தி.

விமானத்தின் மீது பறவைகள் மோதும் சம்பவங்களில் 65 சதவீத அளவுக்கு சிறிய சேதங்கள் மற்றும் பாதிப்புகளை மட்டுமே இருக்கும். சில வேளைகளில் பெரிய அளவிலான சேதங்களை கூட ஏற்படுத்திவிடும். இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

விமானத்தின் உடல்கூடு அல்லது விண்ட்ஷீல்டு எனப்படும் முன்பக்க கண்ணாடி மீது மோதினால், அதனால் தெறிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, விமானத்தின் உள் பக்கத்தில், இருக்கும் காற்று அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதன் காரணமாக, விமானம் பறக்கும் உயரத்தை தக்க வைக்கும் திறனை இழந்து படிப்படியாக உயரம் குறைய வாய்ப்புள்ளது.

விமானம் மேல் எழும்பும்போது, தரை இறங்கும்போதும் குறைவான உயரத்தில் பறக்கும்போதுதான் பெரும்பாலும் பறவை மோதும் பிரச்னையை சந்திக்கின்றன. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டினாலும், முற்றிலுமாக பறவை மோதுவதை தவிர்க்க முடியாது என்கின்றனர் விமானத் துறை வல்லுனர்கள்.

அதிக உயரத்தில் பறக்கும்போதும் விமானங்கள் மீது பறவை மோதிய சம்பவங்கள் நடந்துள்ளன. நடக்காது என்று கூற முடியாது. ஆனால், அதுபோன்ற அபாயம் மிக குறைவாக தெரிவிக்கப்படுகிறது.

விமானங்கள் மோதுவதை அச்சத்துடன் விமான நிறுவனங்களும், பைலட்டுகளும் பார்ப்பதற்கு முக்கிய காரணம், 5 கிலோ எடையுடைய பறவை ஒன்று அதிவேகத்தில் மோதும்போதும், அது 100 கிலோ கல் மோதுவதற்கு சமமான பாதிப்பை தரும். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். பறவை மோதினால் எந்தளவு பாதிப்பு ஏற்படும் என்பது.

பறவைகள் விமானத்தின் உடல்கூடு, விண்ட்ஷீல்டு மீது மோதினால் கூட ஓரளவு பாதிப்பு இல்லாமல் விமானத்தை தரை இறக்கிவிட முடியும். ஆனால், பறவைகள் கூட்டமாக வரும்போது, எஞ்சின் விசிறிகளுக்குள் சிக்கிக்கொண்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எஞ்சின் செயலிழக்கும் அபாயமும் உண்டு.

இரண்டு எஞ்சின்களிலுமே பறவைகள் சிக்கும் ஆபத்து குறைவு என்றாலும், இதற்கு ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நீங்கள் அடிக்கடி ஒரு விமான படத்தை பார்த்திருக்க்கூடும். அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றில் விமானம் ஒன்று தண்ணீரில் தரை இறக்கப்பட்ட அந்த படம் மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் சிக்கி விளையாடி வருகிறது.

ஆனால், 2009ம் ஆண்டு நடந்த அந்த சம்பவத்திற்கு பின்னால் சற்று ஆராய்ந்து பார்த்தால், அந்த ஏர்பஸ் ஏ320 விமானம் லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களில், வேகமாக வந்த பறவைக் கூட்டம் ஒன்று, அந்த விமானத்தின் இரண்டு எஞ்சின்களிலும் மோதி சிக்கிக் கொண்டது.

இதனால், அந்த விமானத்தின் இரண்டு எஞ்சின்களுமே செயலிழந்தது. இதையடுத்தே, அந்த விமானம் எஞ்சின் துணை இல்லாமல் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, ஹட்சன் ஆற்று தண்ணீரில் தரை இறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது அதிசயமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

விமானத்தின் மீது பறவைகள் மோதும் விஷயத்தில் ஒரே ஆறுதல் என்ன தெரியுமா? பெரும்பாலன சம்பவங்கள் விாமனம் மேல் எழும்பும்போது, தரை இறங்கும்போது நடப்பதால், உடனடியாக விமானத்தை தரை இறக்குவதற்கான வாய்ப்பு பைலட்டுகளுக்கு கிடைக்கிறது.

எனவே, பறவை மோதும் சம்பவங்களில், விமானங்கள் பெரும்பாலும் தப்பி பிழைத்துவிடுகின்றன என்பது பெரும் ஆறுதல்!


Click it and Unblock the Notifications