2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
2019 ஆம் ஆண்டில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஓர் விமானம் கடலில் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டது. அந்த விமானத்தின் தற்போதைய நிலையைக் காண்பிக்கும் படங்களே இணையத்தில் வெளியாகி பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. பலர் அந்த விமானத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்எச் 370 (MH370) என தவறாக கருதிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இது அந்த விமானம் இல்லை. இது வேண்டும் என்றே கடலில் மூழ்கடிப்பு செய்யப்பட்ட ஓர் விமானம் ஆகும். என்ன வேணும்னே மூழ்கடிச்சாங்களா? ஏன் அப்படி செஞ்சாங்க? இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? மற்றும் எங்கு இப்படி செய்யப்பட்டது? இதுபோன்ற கேள்விகளுக்கான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Source: Brett Hoelzer/Instagram விமானங்களை வானத்தில் பறக்கும் போதோ அல்லது விமான நிலையங்களில் நின்றுக் கொண்டிருக்கும் போதோதான் நம்மில் பலர் பார்த்திருப்போம். இதுதவிர, ஓடுதளத்தில் ஓடிக் கொண்டிருக்கையிலும், விமான நிலையத்தில் தரையிறங்கும் போதும்கூட நாம் பார்த்திருக்கக்கூடும். ஆனால், இதுவரை கடலுக்குள் மூழ்கிய விமானத்தை யாரும் பார்த்திருக்க மாட்டோம்.
இதை பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இத்தகைய அரிதினும் அரிதான படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த விமானம் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்ட ஓர் விமானம் ஆகும். மிகப் பெரிய வரலாற்றைக் கொண்ட விமானமாகவும் இது இருக்கின்றது.

லாக்ஹீட் மார்டின் எல்1011 ட்ரீஸ்டார் (Lockheed Martin L1011 Tristar) மாடல் விமானம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் 400 இருக்கைகள் வசதிக் கொண்ட விமானம் ஆகும். பல ஆண்டுகளாக இந்த விமானம் கை விடப்பட்டு பயனற்ற நிலையில் நின்றுக் கொண்டிருந்திருக்கின்றது.
ஜோர்டானில் உள்ள கிங் உசைன் சர்வதேச விமான நிலையத்திலேயே அது நீண்ட காலமாக நின்றுக் கொண்டிருந்திருக்கின்றது. இதற்கு முன்னர் இந்த விமானம் பயணிகளின் போக்குவரத்திற்கான சிறந்த விமானமாக விளங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இது 1980களில் இருந்து சேவையில் இருந்தது. பல விமான நிறுவனங்களின்கீழ் இந்த விமானம் சேவையில் இருந்திருக்கின்றது.

குறிப்பாக, ராயல் ஜோர்டானியன் (Royal Jordanian), போர்சுகலின் டேப் ஏர் (TAP Air) மற்றும் சுவீடனின் நோவேர் (Novair) உள்ளிட்ட நிறுவனங்களின் கீழே இந்த விமானம் சேவையில் இருந்திருக்கின்றது. அந்தவகையில், இவ்விமானம் கடைசியாக லஸ்ஏர் (Luzair) நிறுவனத்தின் வசம் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே நீண்ட கால சேவையை அடுத்து லாக்ஹீட் மார்டின் எல்1011 ட்ரீஸ்டார் விமானத்திற்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு பின்னர் நீண்ட காலமாக அப்படியே பயன்பாடு இல்லாமல் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே அவ்விமானம் வேண்டும் என்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த முடிவு ஜோர்டானின் சுற்றுலா துறையால் எடுக்கப்பட்டது ஆகும். ஜோர்டானின் அகபா வளைகுடா பகுதியிலேயே விமானம் மூழ்கடிக்கப்பட்டு இருக்கின்றது. ஏன் இப்படி செஞ்சாங்கனு தானே கேக்குறீங்க.. ஜோர்டான் நாட்டின் உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இந்த விமானம் அந்நாட்டு சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டே கடலில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
கடலில் மூழ்கி விமானத்தைக் காண சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என அந்நாட்டு அரசு நம்பி இதை செய்தது. இதுமட்டுமின்றி பவள பாறைகளின் வளர்ச்சிக்கும் இது உதவும் அவர்கள் நம்பியிருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே கடந்த 2019ம் ஆண்டு வேண்டும் என்றே லாக்ஹீட் மார்டின் எல்1011 ட்ரீஸ்டார் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
தற்போது இதன் நிலை எப்படி இருக்கின்றது என்கிற படங்களே வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் வல்லுநரான பிரெட் ஹோல்செரே இதன் படங்களை எடுத்து தற்போது வெளியிட்டு இருக்கின்றார். கடலில் சுமார் 15 முதல் 28 மீட்டர் ஆழத்தில் விமானம் தள்ளப்பட்டு இருக்கின்றது.
தற்போது அந்த விமானம் கடல் ஜீவராசிகளின் வாழ்விடமாக மாறி இருக்கின்றது. முழுமையாக விமானம் கடல் தூசி மற்றும் பாசிகளால் மூழ்கி இருக்கின்றது. விமானம், அதன் இருக்கை மற்றும் முக்கிய சில பாகங்களுடன் அப்படியே மூழ்கடிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், மிக முக்கியமான பாகங்கள் சிலவற்றை அவர்கள் அகற்றியிருக்கின்றனர்.
ஆனால், எஞ்சின்கள் அகற்றப்படாத நிலையை நம்மால் காண முடிகின்றது. இந்த விமானம் ஓர் மூன்று எஞ்சின்கள் கொண்ட விமானம் என கூறப்படுகின்றது. வால் துடுப்பு மற்றும் இரண்டு றெக்கைகளில் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். அவையே அப்படி இருக்கின்றன. பவளப்பாறைகள் அதிகளவில் விமானத்தைச் சுற்றியும், விமானத்திலும் வளர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. மேலும், ஆக்டோபஸ்கள் மற்றும் அபூர்வமான கடல் வாழ் உயிரினங்களும் அதை சுற்றி வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுற்றுலாத் துறையை வளர்ச்சியை அடையச் செய்ய உலக நாடுகள் பல பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையிலேயே கடலில் மூழ்கி அதிசயங்களைக் காண விரும்பும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு ஜோர்டான் சுற்றுலா பிரிவு விமானத்தை வேண்டும் என்றே மூழ்கடித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









