ஆண் நண்பருடன் தனியாக வந்த சிறுமியை காரில் கடத்திய காவலர்கள்! இந்த மாதிரியான நேரத்தில் உதவி பெற என்ன செய்யலாம்!
சமீபத்தில் திருச்சி முக்கொம்பு பகுதியில் ஆண் நண்பருடன் வந்த சிறுமியை போலீஸாரே காரில் கடத்திய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த மாதிரியான கடத்தலின்போது கடத்தல்காரர்களின் காரில் இருந்து தப்பிக்க என்னென்ன எல்லாம் செய்யலாம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
திருச்சியில் உள்ள முக்கொம்பு பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். திருச்சி வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்குள்ள காவிரி கரை மற்றும் பூங்காவைக் காண மக்கள் வருகைத் தந்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து முக்கொம்பு சுற்றுலா பூங்காவிற்கு வந்திருக்கின்றார்.

அப்போது அவர்களை சாலையில் வைத்து மடக்கிய காவலர் ஒருவர், அவர்கள் இருவரையும் சமூக விரோதிகளைப் போல் நடத்தி இருக்கின்றனர். குறிப்பாக, சிறுமி உடன் வந்த ஆண் நண்பனை ஆபாச வார்த்தையால் திட்டியும், அவரை கஞ்சா விற்பனையாளரைப் போல் இருப்பதாகக் கூறி விசாரணைக்கு வருமாறும் அழைத்ததாகக் கூறப்படுகின்றது.
இதை எதிர்த்து அந்த சிறுமி போலீஸாரிடத்தில் சத்தமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். இதில் சலசலப்பு ஏற்படவே, உடன் பணிபுரியும் காவலர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு சிவப்பு நிற காரில், நான்கு காவலர்கள் சேர்ந்து அந்த சிறுமியைக் கடத்திச் சென்றிருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து சிறுமியின் தோழன் காவல் அவசர எண் 100-ஐத் தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்து இருக்கின்றார். புகாரைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு அந்த நான்கு காவலர்களையும் தேடும் பணி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, கரூரில் வைத்து அந்த நான்கு போதைக் காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் கடத்திச் சென்ற சிறுமியையும் பத்திரமாக மீட்டனர். மேலும், சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் திருச்சியையே உலுக்கும் வகையில் நம்முடைய தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றது. குறிப்பாக காவலர்களே இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்டது பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. ஆகையால், இந்த மாதிரியான கடத்தல் சூழலைக் கையாள்வது எப்படி என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகுந்த அவசியமானதாக மாறி இருக்கின்றது.
இதனால் தான் நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தளம் இதுகுறித்த டிப்ஸை இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு வழங்கி இருக்கின்றது. அதாவது, நீங்கள் கார் வாயிலாக கடத்த நேரிட்டால், கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பிக்க என்னென்ன யுக்தியை எல்லாம் செய்யலாம் என்பதையேப் பார்க்க உள்ளோம்.
கார் ட்ரங்கிற்குள் தள்ளப்பட்டால் என்ன செய்வது? கடத்தல்காரர்கள் உங்களைக் கடத்தி காரின் ட்ரங்க் பகுதிக்குள் தள்ள நேரிட்டலாம். இது மிகவும் மோசமான சூழலை உருவாக்கும். குறிப்பாக, வெளியில் வருவது மிக மிக கடினமானது. ஆனால், புத்திச் சாலி தனமாக யோசித்தால் அதில் இருந்தும் வெளி வந்துவிட முடியும்.
ட்ரங்கை அவசர காலத்தில் திறக்கும் வகையிலேயே வாகன உற்பத்தியாளர்கள் அதனை வடிவமைத்து இருக்கின்றனர். இதனைக் கண்டுபிடித்துவிட்டால் விரைந்து தப்பித்துவிடலாம். யாரேனும் தெரியாலம் காரில் சிக்கிக் கொண்டால் அதை உடனடியாக திறக்கும் நோக்கிலேயே இந்த வசதியை கார் உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
அதற்கு கார் ட்ரங்கின் தரைப் பகுதியையே நாம் பார்க்க வேண்டும். இங்கே போர்த்தப்பட்டு இருக்கும் துணியை விளக்கினால், அடியில் கேபில் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். அதை இழுப்பதனால் ட்ரங்கின் லாக்கை உடனடியாக திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.. பொதுவாக, காரின் டிரங்கை திறப்பதற்கான லிவர் டிரைவருக்கு அருகிலேயே இருக்கும்.
ஒருவேளை உங்களால் இந்த கேபிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஸ்பேர் வீலுக்காக வழங்கப்படும் ஜாக்கைக் கொண்டு டிரங்கின் லாக்கை உடைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். ஒரு சில முறை அழுத்தினாலே அந்த லாக்கை உடைத்துவிட முடியும். ஒருவேளை உங்கள் கைகளில் செல்போன் இருக்கும் எனில் வேலை மிகவும் சுலபம்.
நெருங்கிய நண்பர் அல்லது காவல்துறையை உதவிக்கு அழைக்கலாம். அத்துடன், லொகேஷனை ஷேர் செய்து உங்களை டிராக் செய்ய வழிவகுக்கலாம். சமீபத்தில் ஆந்திராவில், ஆற்றில் தூக்கி வீசப்பட்ட சிறுமி, ஆற்றின் கம்பியைப் பிடித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அத்துடன், தன்னைக் கண்டுபிடிக்க போலீஸாருக்கு செல்போன் வாயிலாக லொகேஷேனை அனுப்பி வேலையை சுலபமாக்கினார்.
இதைப் போலவே கடத்தல்காரர்களிடம் இருந்துக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள் செல்போனை பயன்படுத்தி உதவியை நாடலாம். இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவான இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தால் உங்களை நீங்கள் இதன் வாயிலாக காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். சில கடத்தல்காரர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவார்கள்.
உயிர் பயத்தைக் காட்டி உங்களை அவர்களுடனேயே ஓர் பயணியைபோல் மிகவும் அசால்டாக கடத்திச் செல்வார்கள். இந்த மாதிரியான நேரத்தில் உங்களைக் காப்பாற்றிக் கொள்வது சற்று சிக்கல்தான். ஏனெனில் கடத்தல்காரரின் தொடர் கண்கானிப்பில் நீங்கள் இருப்பீர்கள் என்பதால், நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அந்தவகையில், நெரிசல் மிகுந்த சாலையில் நீங்கள் இருப்பீர்கள் என்றால் பிறரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம். குறிப்பாக முக பாவனையை மாற்றிக் காண்பித்து சைகை செய்யலாம். இதன் வாயிலாக உங்களுக்கு உதவி கிடைக்க நேரிடலாம். அதேவேளையில், இது ஆபத்தானது என்பதால் சரியான நேரத்தில் மட்டுமே இந்த முயற்சியை செய்ய வேண்டும் என்பதை மறவ வேண்டாம்.
அதிக கூட்டம் இருக்கும் இடத்தில் நீங்கள் உதவியை கேட்க நேரிடும்போது, கடத்தல்காரன் உங்களை விட்டுவிட்டு செல்லவே முயற்சிப்பான். ஏனெனில் கடத்தல்காரர்களுக்கு பிடிபடும் சூழலைத் தவிர்க்க விரும்புவார்கள். ஆகையால், இந்த முயற்சியில் தாராளமாக ஈடுபடலாம். மேலும், கார் ரன்னங்கில் இருக்கும்போதே வெறு கதவை பயன்படுத்தி வெளியேற முயற்சிக்கலாம்.
ஆனால், காரின் வேகம் அதிகமாக இருக்கும்போது இதை முயற்சிக்க வேண்டாம். இது மிகப் பெரிய ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும். மேலும், நீங்கள் வெளியே குதிக்கும் பகுதி புல் தரையாக அல்லது செடிகள் நிறைந்ததாக இருத்தல் வேண்டும். இது உங்களுக்கு ஏற்படும் காயங்களை குறைக்கும்.
இதுதவிர, கடத்தல் காரரின் கவனத்தை திசை திருப்பி வாகனத்தின் வேகத்தைக் குறைத்து விபத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். இதன் வாயிலாக கணிசமான காயங்களுடன் தப்பிக்க முடியும். இல்லை எனில் வேறு ஒரு வாகனத்துடன் மோதவிட்டு, கடத்தல்காரனுக்கும் பிறருக்கும் இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தியும் தப்பிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது எல்லாம் யாரால் வேண்டுமானாலும் நமக்கு ஆபத்து ஏற்படும் என்கிற சூழலே நிலவுகின்றது. ஆகையால், தற்காப்பு கலை மற்றும் உயிர் காக்கும் யுக்திகள் ஆகியவற்றை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது மிகுந்த அவசியமானதாக இருக்கின்றது. ஆகையால், நீச்சல், முதலுதவி, ஆபத்து காலத்தில் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை அனைந்திருத்தல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








