உங்கள் வாகனம் புதியதோ அல்லது பழையதோ எச்எஸ்ஆர்பி நிறுவலாம்... ஆர்டிஓ தகவல்..!
உங்கள் வாகனம் பழையதோ அல்லது புதியதோ எதுவாக இருந்தாலும் புதிய உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டைப் பொருத்திக் கொள்ள முடியும் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், "இனி புதிதாக விற்பனைச் செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் (HSRP) பொருத்துவது கட்டாயம்" என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வாகனம் சார்ந்து நடைபெறும் அனைத்து குற்றச் சம்பவங்களையும் தடுக்கும் ஓர் முயற்சியாக மத்திய அரசு இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
குறிப்பாக, வாகன திருட்டு மற்றும் போலி பதிவெண் உள்ளிட்ட முறைகேடுகளை முற்றிலும் ஒழித்துக்கட்டும் ஓர் முயற்சியாக கொண்டுவந்திருப்பதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது.

பொதுவாக, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலி பதிவெண்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. மேலும், நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த சம்பவங்களால் அந்தத்துறை சார்ந்து இயங்கும் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலி ஏற்பட்ட சூழலே நிலவுகின்றது.

இந்த விவகாரத்தில் உடனடி தீர்வு காண்பதற்கு புதிய உயர் பாதுகாப்புக் கொண்ட நம்பர் பிளேட் திட்டம் பயன்படும் என நம்பப்படுகின்றது. எனவே, நாடு முழுவதும் விற்பனையாகும் அனைத்தும் வாகனங்களிலும் இந்த நம்பர் பிளேட் கட்டாயம் பொருத்த வேண்டும் என அனைத்து வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் ஆர்டிஓக்களுக்கு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பாக, ஏப்ரல் 1 மற்றும் அதன்பின் விற்பனையாகும் அனைத்து வாகனங்களிலும் இது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டை ஏப்ரல் 2019-க்கு முன்பு விற்பனைக்கு வந்த வாகனங்களிலும் பயன்படுத்தலாம் என்ற புதிய தகவலை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதேசமயம், இந்த புதிய உத்தரவை கட்டாயம் பழைய வாகனங்களில் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஆர்டிஓ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "பழைய வாகனங்களுக்கு உயர்பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும், வாகன உரிமையாளர்களுக்கு அதை ஒட்டுமாறு அறிவுறுத்துகிறோம். ஏனெனில், இது தொலைந்த அல்லது திருடப்பட்ட வாகனங்களை எளிதில் கண்காணிக்க உதவுகிறது. இதனால், வாகன திருட்டுகளைத் தடுக்கவும் முடியும்" என்றார்.

தொடர்ந்து, "அனைத்து வாகனங்களும் உயர்பாதுகாப்பு பொருந்திய நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் 2018 ல் உத்தரவிட்டது. அதிலும், ஏப்ரல் 2019-ல் இருந்து விற்பனைச் செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் இது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையிலேயே சமீபத்தில் ஆர்டிஓக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது" என கூறினார்.

உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்தை 2001ம் ஆண்டே மத்திய அரசு அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், இதுவரை இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதன்காரணமாகவே, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்தது. தொடர்ந்து, இனி வரும் காலங்களில் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவும் அதில் விடுக்கப்பட்டிருந்தது.

ஆர்டிவின் தகவல்களின்படி, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (HSRP) என்பது, அலுமினிய தகட்டால் ஸ்டாம்பிங் முறையில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டாகும். இதில், அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதை கிழிக்க முடியாது. இதன்கீழே 'ஐஎன்டி' (IND) என நம் நாட்டின் அடையாளத்தைக் குறிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அதற்குக் கீழே அல்லது பக்காவட்டில், வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண்கள் ஸ்டிக்கராக இல்லாமல் அழுத்தமாக அச்சிடப்பட்டிருக்கும்.

இதுமட்டுமின்றி, இந்த நம்பர்பிளேட் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தைப் பெற்றிருப்பதால், ஒரு ஸ்கேனிங் மூலம் வாகனத்தின் அனைத்து தகவல்களையும் போலீஸாரால் பெற்றுவிட முடியும். ஆகையால், வாகன திருட்டு என்பதற்கோ, போலி பதிவெண் என்பதற்கோ இங்கு இடமில்லை என கூறப்படுகின்றது.

இந்த எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் ரிவிட் முறை மூலம் வாகனங்களில் பொருத்தப்படுகின்றது. ஆகையால், அதனை அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடியாது. மேலும், போலி நம்பர் பிளேட்டுகளையும் அதில் பொருத்த முடியாது. ஆகையால், போலி நம்பர் பிளேட் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய அம்சம் கொண்ட எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட்டை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதால், "இழந்த அல்லது திருடப்பட்ட வாகனங்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்" என ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனை, புதிய வாகன உரிமையாளர்கள் பொருத்தத் தவறினால் பதிவு சான்றிதழ் (ஆர்சி) வழங்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 2019 க்கு முன்னர் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு எச்எஸ்ஆர்பி கட்டாயமில்லை என்றாலும், அதன் நன்மைகள் குறித்து மக்களை உணருமாறு ஆர்டிஓக்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








