சூப்பரான ஐடியா... விமான நிலையங்களை ஏன் ஏரிக்கு பக்கத்துல கட்றாங்க தெரியுமா? தண்ணீ எடுக்கன்னு நெனச்சராதீங்க!
விமான நிலையங்கள் ஏன் பெரும்பாலும் ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் கட்டப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் ஆயிரக்கணக்கான விமான நிலையங்கள் (Airports) இருக்கின்றன. இதில் பெரும்பாலான விமான நிலையங்கள் நீர் நிலைகளுக்கு அருகில்தான் அமைந்திருக்கும். அதாவது ஏரி (Lake) மற்றும் கடல் (Ocean) போன்ற நீர் நிலைகளுக்கு பக்கத்தில்தான் பெரும்பாலான விமான நிலையங்கள் கட்டமைக்கப்படும். இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணங்களை இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

விமான நிலையங்கள் மீது பொதுமக்கள் பலராலும் கூறப்படும் மிக முக்கியமான புகார்களில் ஒன்று சத்தம். எனவே விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பது மிகவும் சிரமமான காரியங்களில் ஒன்று. இந்த சத்தம் குறித்த புகார்களை குறைப்பதுதான், பெரும்பாலான விமான நிலையங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் கட்டமைக்கப்படுவதற்கான முதல் காரணம்.

விமானங்கள் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, தரையில் உள்ள மக்களுக்கு அவை அமைதியானவையாக இருக்கலாம். விமானங்கள் இந்த உயரத்தில் பறக்கும்போது, தரையில் இருக்கும் உங்களுக்கு சத்தம் கேட்காது. ஆனால் விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போதும் மற்றும் லேண்டிங் செய்யப்படும்போதும் கதையே வேறு.

இந்த இரண்டு சமயங்களிலும் விமானங்கள் மிகவும் குறைவான உயரத்தில் பறக்கும். அப்போது அதிக சத்தம் ஏற்படும். ஆனால் விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே கட்டமைக்கும்போது, விமானங்களுக்கும், தரையில் உள்ள மக்களுக்கும் இடையே ஒரு இயற்கையான தடை உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக சத்தம் தொடர்பான புகார்கள் குறையும்.

விமானங்கள் சத்தம் உருவாக்குவதை நீர் தடுக்காதுதான். ஆனால் அது இடத்தை ஆக்கிரமித்து கொள்கிறது. இல்லாவிட்டால் அந்த இடத்தில் வீடுகளோ அல்லது அலுவலகங்களோ கட்டப்படும். இதனால் அதிக மக்கள் வசிப்பார்கள். இதன் காரணமாக சத்தம் தொடர்பான புகார்கள் அதிகளவு வரும். ஆனால் நீர் நிலைகளில் கட்டிடங்கள் இருக்காது.

எனவே அந்த சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். சத்தம் தொடர்பான புகார்களும் குறைவாகவே வரும். விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே அமைப்பதற்கு இது ஒரு காரணம் மட்டுமே. இதை விட மற்றொரு முக்கியமான காரணம் ஒன்றும் இதற்கு பின்னால் உள்ளது. அது பாதுகாப்பு.

விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே கட்டமைப்பதற்கு பாதுகாப்புதான் மிகவும் முக்கியமான காரணம். அதாவது விமானங்களில் இயந்திர கோளாறுகள் ஏற்படாது என உறுதியாக சொல்லவே முடியாது. அவற்றில் எப்போது வேண்டுமானாலும் திடீரென கோளாறுகள், பழுதுகள் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலைகள் மிகவும் அபாயகரமானவை.

விமானத்தில் திடீரென்று கோளாறுகள் ஏற்பட்டால், பைலட்களால் சரியாக டேக் ஆஃப் செய்ய முடியாமலோ அல்லது லேண்டிங் செய்ய முடியாமலோ போகலாம். இதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் அருகில் நீர் நிலைகள் இருக்கும்பட்சத்தில், பைலட்களால் பிரச்னையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும். அதாவது நீர் நிலைகளில் அவர்கள் விமானத்தை இறக்கி விடுவார்கள்.

மலைகள் அல்லது கட்டிடங்களில் மோதுவதை விட, நீர் நிலைகளில் விமானத்தை இறக்குவது சிறந்த முடிவாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விமான நிலையங்களை ஒட்டியுள்ள பெரும்பாலான நீர் நிலைகள் ஆழமற்றதாகவே இருக்கும். அவசர சூழல்களில், விமானத்தை பாதுகாப்பாக லேண்டிங் செய்வதற்கு இந்த ஆழமற்ற நீர் நிலைகள் உதவி செய்கின்றன.

நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல், மலைகள் அல்லது கட்டிடங்களில் மோதுவதை காட்டிலும், ஆழமற்ற இந்த நீர் நிலைகளை தேர்வு செய்வது பாதுகாப்பான முடிவாக இருக்கும். எனவே விமான நிலையங்களுக்கு அருகே உள்ள நீர் நிலைகள் 'பேக்அப் சொல்யூசன்' ஆக கருதப்படுகின்றன. பெரும்பாலான விமான நிலையங்களை நீர் நிலைகளுக்கு அருகே அமைப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.


Click it and Unblock the Notifications