பெரும்பாலான உல்லாச கப்பல்கள் இந்த நாட்டில்தான் பதிவு செய்யப்படும்! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா
உலகில் பெரும்பாலான உல்லாச கப்பல்கள் ஏன் பனாமாவில் பதிவு செய்யப்படுகின்றன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாம் தினசரி பயன்படுத்தும் கார், டூவீலர் போன்ற வாகனங்களை போன்று உல்லாச கப்பல்களையும் பதிவு செய்தாக வேண்டும். உல்லாச கப்பல் எங்கு பதிவு செய்யப்படுகிறதோ, அந்த நாடுதான் விதிமுறைகளை தீர்மானிக்கிறது. அதாவது அந்த நாட்டின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உல்லாச கப்பல்கள் இயங்க வேண்டும்.

அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன. அமெரிக்காவில் பதிவு செய்யப்படும் கப்பல்கள், அமெரிக்க கடல்சார் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும். இந்த விதிமுறையின் கீழ் என்ன ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதனை உல்லாச கப்பல் ஊழியர்களுக்கு வழங்குவது அவசியம். குறைவாக வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் வைத்து கழிவுகளை அகற்றுவதிலும் கடுமையான விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதுபோன்ற விதிமுறைகளுக்கு கட்டுப்பட முடியாத காரணத்தால், உல்லாச கப்பல் உரிமையாளர்கள்/நிறுவனங்கள் தங்கள் கப்பலை பதிவு செய்வதற்கு வேறு சில நாடுகளை தேர்வு செய்கின்றனர்.

அப்படி உல்லாச கப்பல் உரிமையாளர்கள்/நிறுவனங்கள் மிகவும் விரும்பும் நாடுகளில் ஒன்றாக இருப்பது பனாமா (Panama). உலகில் உல்லாச கப்பல்கள் அதிகளவில் பதிவு செய்யப்படும் நாடுகளில் ஒன்றாக பனாமா திகழ்கிறது. பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதும், விதிமுறைகள் மிக எளிமையாக இருப்பதும்தான் பனாமா அனைவரையும் ஈர்க்க முக்கியமான காரணமாக உள்ளது.

பனாமாவில் உல்லாச கப்பல்களை பதிவு செய்யும்பட்சத்தில், வரி சலுகைகளை அனுபவிக்கலாம். சாதாரண கப்பல்களின் உரிமையாளர்கள், படகுகளின் உரிமையாளர்கள், ஆடம்பர படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் பாய்மர படகுகளின் உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சர்வதேச பயணம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்களுக்கு பனாமாவில் வரி கிடையாது. எனவே கப்பல் உரிமையாளர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன் கப்பல்களை பதிவு செய்பவர்களிடம் தேசியம்/குடியுரிமை அடிப்படையில் பனாமா எந்த பாகுபாட்டையும் காட்டுவதில்லை. எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும், பனாமாவில் கப்பல்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் பனாமாவில் கப்பல்களை பதிவு செய்வதற்கான செலவும் மிக குறைவாக இருக்கிறது. உலகிலேயே கப்பல்களை மிகவும் சிக்கனமான செலவில் பதிவு செய்யக்கூடிய நாடுகளில் ஒன்றாக பனாமா உள்ளது. கப்பல்களின் உரிமையாளர்கள் பனாமாவை விரும்புவதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் பனாமாவில் கப்பல்களின் வயதிற்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இருப்பினும் 20 ஆண்டுகளுக்கு மேலான கப்பல்கள், நிரந்தர நேவிகேஷன் காப்புரிமையை பெறுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பனாமா ஆய்வாளரால் மேற்கொள்ளப்படும் சிறப்பு சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலை இயக்குவது செலவு குறைந்த மற்றும் அதிக லாபம் தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதன் காரணமாகதான் பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல் நிறுவனங்களும், உரிமையாளர்களும் பனாமாவிற்கு படையெடுக்கின்றனர். இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் இப்படி ஒரு வழியை பின்பற்றுவது உங்களுக்கு தற்போது நினைவிற்கு வரலாம்.

அதாவது ஒரு சில மாநிலங்களில் சொகுசு கார் போன்ற விலை உயர்ந்த வாகனங்களுக்கு வரி மிக அதிகமாக இருக்கிறது. எனவே தங்களது சொந்த மாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்யாமல், குறைவான வரி விதிப்பு அமலில் உள்ள மாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் விதிமீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். குறிப்பாக கேரள மாநிலத்தில் நடிகர், நடிகைகள் பலர் இந்த குற்றச்சாட்டில் சிக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். கேரளா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரையுலகினரும் வரியாக செலுத்த வேண்டிய தொகையை குறைப்பதற்காக மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications