உலகமே பொறாமைப்படுது... துபாய் மக்களின் பகட்டான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...
துபாய் மக்களின் பகட்டான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் ரகசியங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் என்பது நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க உதவும் வாகனம் என்பதே இந்திய மக்களின் எண்ணமாக உள்ளது. எனவே இந்திய சாலைகளில் ஒரு லக்ஸரி காரையோ அல்லது ஒரு சூப்பர் காரையோ அல்லது ஒரு ஸ்போர்ட்ஸ் காரையோ பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்திய சாலைகளில் பெரும்பாலும் உலா வருவது சாதாரண பட்ஜெட் கார்கள்தான். இதற்கு இந்திய மக்கள் சம்பாதிக்கும் பணம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். ஆனால் துபாய் மக்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. உலகையே பொறாமை கொள்ள செய்யும் அளவிற்கு துபாய் மக்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. துபாய் சாலைகளில் லக்ஸரி கார்கள், சூப்பர் கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை நீங்கள் எளிதாக பார்க்கலாம். இந்திய சாலைகளில் மாருதி சுஸுகி கார்களை எப்படி எளிதாக பார்க்க முடியுமோ, அதே அளவிற்கு துபாய் சாலைகளில் ஆடம்பரமான கார்களை மிக எளிதாக பார்க்க முடியும்.

லம்போர்கினி, ஃபெராரி, போர்ஷே, மஸராட்டி, ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்களை துபாய் சாலைகளில் எளிதாக காணலாம். துபாயில் மொத்தம் இரண்டு வகையான மக்கள் இருக்கின்றனர். இதில், முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் உண்மையிலேயே கார் ஆர்வலர்கள்.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை ஓட்டுவதில் அவர்களுக்கு உண்மையாகவே ஆர்வம் அதிகமாக இருக்கும். எனவே அதிக விலை கொடுத்து அவர்கள் கார்களை வாங்குகின்றனர். அதே சமயம் 2வது ரகத்தை சேர்ந்தவர்களோ கார்களை தங்களது அந்தஸ்தை வெளிக்காட்டும் அம்சமாக பார்க்க கூடியவர்கள். எனவே விலையை பொருட்படுத்தாமல் அவர்கள் கார்களை வாங்கி குவிக்கின்றனர்.

ஒரு முறை நீங்கள் துபாய் சென்றால், அவர்கள் ஓட்டும் கார்களை பார்த்து உங்களுக்கு பொறாமை வராமல் இருந்தால் ஆச்சரியம்தான். சரி, துபாய் மக்களால் மட்டும் எப்படி இவ்வளவு விலை உயர்ந்த கார்களை சொந்தமாக்க முடிகிறது? இதற்கான பணம் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான். இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தி விடையளிக்கும்.

வருமான வரி கிடையாது!
ஐக்கிய அரபு எமீரகத்தில் தற்போதைய நிலையில் வருமான வரி என்ற ஒன்று கிடையவே கிடையாது. எனவே நீங்கள் சம்பாதிக்கும் அத்தனை பணமும் முழுமையாக உங்களுக்குதான். எனினும் வருமான வரி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி ஒரு திட்டம் இல்லை என ஐக்கிய அரபு எமீரக அரசு அதிகாரிகள் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அதே சமயம் வாட் வரியும் கூட மிகவும் குறைவாக 5 சதவீதம் என்கிற அளவில் மட்டுமே விதிக்கப்படுகிறது. மேலும் துபாயில் ஒயிட் காலர் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களின் செல்வ செழிப்பிற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. எனவே அவர்களால் விலை உயர்ந்த கார்களை எளிதாக சொந்தமாக்க முடிகிறது.

கார் திருடு போகாது!
உலகின் பல்வேறு நாடுகளில் கார் திருட்டு சம்பவங்கள் மிகவும் அதிகமாக நடக்கின்றன. மேலும் பொறாமை காரணமாக விலை உயர்ந்த கார்கள் சேதப்படுத்தப்படுகின்றன. ஆனால் துபாயில் அப்படி ஒரு பிரச்னை கிடையவே கிடையாது. துபாயில் கார் திருட்டு சம்பவங்களோ அல்லது வேறு ஏதேனும் குற்றங்களோ அரிதாகதான் நடக்கும்.

உண்மையில் ஐக்கிய அரபு எமீரகம் மிகவும் பாதுகாப்பான நாடு. இதை எவராலும் மறுக்க முடியாது. எனவே தங்கள் விலை உயர்ந்த கார்கள் திருடப்பட்டு விடுமோ? அல்லது சேதப்படுத்தப்பட்டு விடுமோ? என துபாய் மக்கள் ஒருபோதும் அச்சம் கொள்வதில்லை. இதனால் விலை உயர்ந்த கார்களை வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர். அந்நாட்டு குடிமக்களை அதன் சட்ட திட்டங்கள் காப்பாற்றுகின்றன.

பெட்ரோல் விலை மலிவு!
பொதுவாக சொந்தமாக ஒரு காரை வாங்கும்போது பல்வேறு விஷயங்களை பற்றி நாம் சிந்திப்போம். இதில், பெட்ரோல் விலைக்குதான் நாம் அதிக முன்னுரிமை கொடுப்போம். பட்ஜெட் கார்களை வாங்குவதிலேயே பெட்ரோல் விலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அதிக மைலேஜ் கொடுக்காத விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாமல் இருப்பது ஏன்? என நீங்கள் யோசிக்கலாம்.

உண்மையில் துபாய் மக்களுக்கு இது ஒரு பிரச்னையே கிடையாது. ஏனெனில் அங்கு பெட்ரோல் மலிவானது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஐக்கிய அரபு எமீரகத்தில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே துபாய் மக்கள் புதிய கார்களை வாங்கும்போது, பெட்ரோல் விலை எவ்வித தாக்கத்தையும் உண்டாக்குவதில்லை.

வேற லெவல் சாலைகள்!
ஒரு சில நாடுகளில் சூப்பர் கார்களை ஓட்டுவது கடினம். இதற்கு இந்தியா ஒரு உதாரணம். உண்மையிலேயே இந்திய சாலைகள் சூப்பர் கார்களுக்கு ஏற்றவை அல்ல. உங்களிடம் சூப்பர் காரை வாங்குவதற்கு பணம் இருந்தாலும் கூட, அதனை வாங்கி இந்திய சாலைகளில் ஓட்ட முடியாது. அந்த அளவிற்கு சாலைகள் மோசமாகவும், குண்டும், குழியுமாகவும் இருக்கும்.

மேலும் இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்து அபாயமும் மிக அதிகம். ஆனால் ஐக்கிய அரபு எமீரகம் அப்படிப்பட்டது கிடையாது. அந்த நாடு பாதுகாப்பான சாலைகளை கொண்டுள்ளது. அங்கு சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. இதனால் சாலை குண்டும், குழியுமாக இருக்காது. எனவே டிரைவ் செய்வதற்கு மிக சிறப்பான இடமாக அது இருக்கிறது.

யூஸ்டு கார்!
செல்வ செழிப்பில் திளைக்கும் துபாய்வாசிகள் புத்தம் புதிய கார்களை வாங்கினாலும், அங்கும் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குபவர்கள் இருக்கவே செய்கின்றனர். ஒரு லக்ஸரி காரையோ அல்லது ஒரு ஸ்போர்ட்ஸ் காரையோ மிகவும் குறைவான விலையில் செகண்ட் ஹேண்டாக அவர்கள் வாங்கி கொள்கின்றனர்.

மேலும் ஐக்கிய அரபு எமீரகத்தில் கார் லோன்கள் மிகவும் எளிதாக கிடைக்கும். அத்துடன் அதற்கான வட்டியும் கூட குறைவாகதான் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து அம்சங்களும் சாதகமாக இருக்கும்போது, ஒரு காரை வாங்கி கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவதில் துபாய் மக்களுக்கு பெரிதாக என்ன பிரச்னை இருந்து விட போகிறது?


Click it and Unblock the Notifications








