இதுக்கு பெங்களூரு- ஓசூர் மெட்ரோ இரயில் சேவை கிடையாதுனு ஓப்பனாவே சொல்லிடலாம்! இதுதான் உண்மையான காரணமா?
கர்நாடகாவின் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டின் ஓசூர் வரையில் நீட்டிக்க போதிய சாத்திய கூறுகள் இல்லை எனவும், இதனால் பெங்களூரு- ஓசூர் மெட்ரோ சேவைக்கு வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதும் தான் தற்போதைக்கு டிரெண்டிங்காக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இதுகுறித்த கொஞ்சம் விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
1970, 80 காலக் கட்டங்களில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியினால் சென்னை, மும்பை போன்ற துறைமுக நகரங்கள் எந்த அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் கண்டதோ, அதுபோன்று தற்போதைய மென்தொழிற்நுட்ப வளர்ச்சியினால், நாட்டின் மென்பொருள் தலைநகராக விளங்கும் பெங்களூரு கடந்த சில தசாப்தங்களில் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதேநேரம், தொழில்துறை நிறுவனங்களும் ஓசூருக்கு அருகே தொழிற்சாலை அமைத்து, பெங்களூருவில் தலைமையகத்தை நிறுவி செயல்பட்டு வருகின்றன. இதனாலேயே பெங்களூரு- ஓசூர் வழித்தடம் ஆனது இந்திய அளவில் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் அமைந்திருந்தாலும், பெங்களூரு மற்றும் ஓசூரு இடையேயான தொலைவு குறைவு என்பதால், இந்த இரு நகரங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து கூட உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், பொம்மசந்திரா வரையுள்ள பெங்களூரு மெட்ரோ இரயில் வழிதடத்தை ஓசூர் வரையில் நீட்டிக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் திட்டமிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும், சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகமும் தான் தீவிர முனைப்பு காட்டின.

ஆனால், பெங்களூருவுக்கும் ஓசூருக்கும் இடையே தென் இந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்கும் தமிழ்நாட்டின் முயற்சி, "தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது" என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) கூறியதையடுத்து, தற்போது இதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நான்கு வழித்தட நீட்டிப்புகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரித்து, மேலும் மூன்று வழித்தட நீட்டிப்புகள் மற்றும் ஒரு புதிய வழித்தடத்தை ஆய்வு செய்து, ஒரு விரிவான விரிவாக்கத் திட்டத்தை வகுத்துள்ளது. பெங்களூரு மெட்ரோ நெட்வொர்க்கை 470கிமீ-க்கு விரிவுபடுத்துவதற்கான ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்குமாறு மத்திய அரசு BMRCL-ஐ கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, ஓசூர் வரையில் பெங்களூரு மெட்ரோ இரயில் சேவையை விரிவிப்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், 23 கிலோமீட்டர் தொலைவிலான ஓசூர்- பொம்மசந்திரா வழித்தடத்தில் வெவ்வேறு மின்சக்தி அமைப்புகள் பயன்படுத்தப்படுவதால், அதை நம்ம மெட்ரோவுடன் ஒருங்கிணைக்க முடியாது என்று கர்நாடக அரசுக்கு BMRCL தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நடத்திய சாத்தியக்கூறு ஆய்வில், ஓசூரை பொம்மசந்திராவுடன் 25 ஆயிரம் வோல்டோஜ் AC ஓவர்ஹெட் டிராக்ஷனை பயன்படுத்தி இணைக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், BMRCL தனது சொந்த ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, பொம்மசந்திராவில் இருந்து கர்நாடகாவின் கடைசி புறநகர் பகுதியான தமிழக எல்லையில் உள்ள அட்டிபெலே வரை மெட்ரோவை நீட்டிக்க ஆய்வு செய்தது.

இந்த 11 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடம், நம்ம பெங்களூரு மெட்ரோ நெட்வொர்க்கின் மற்ற பகுதிகளைப் போலவே, 750 வோல்டேஜ் DC டிராக்ஷனை பயன்படுத்தி செயல்படுத்த முடியும் என்றும், ஏசி & டிசி என இந்த இரண்டு முறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக ஒருங்கிணைப்பது கடினம் என்றும் பெங்களூரு மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, BMRCL-ன் மூத்த அதிகாரி ஒருவர், "பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் வரை தொடர்ச்சியான வழித்தடத்தை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை. ஓசூர் வழித்தடத்தை எங்கள் அமைப்புடன் ஒருங்கிணைக்கவே முடியாது. நாங்கள் எங்கள் கருத்தை மாநில அரசுடன் பகிர்ந்துள்ளோம், இறுதி முடிவை அவர்கள்தான் எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கர்நாடக எல்லை வரை (ஓசூரிலிருந்து சுமார் 12 கி.மீ) மெட்ரோவை தொடர்வதாக இருந்தால், அட்டிபெலேயில் சுமார் 300 மீட்டர் இடைவெளியில் இரண்டு நிலையங்கள் அமையலாம். அந்த இரு நிலையங்களை ஒரு நடை மேம்பாலம் மூலம் இணைக்கலாம். அதுவே மிகவும் சாத்தியமான வழி என்று இதுதொடர்பான அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓசூர்- பொம்மசந்திரா மெட்ரோ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளித்துள்ளது. ஏனெனில், இது தொழில் நகரமான ஓசூரை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாகும். இருப்பினும், பெங்களூரு மற்றும் ஓசூருக்கு இடையே நேரடி மெட்ரோ இணைப்பு திட்டம் கர்நாடகாவில் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
இது பெங்களூருவை விட ஓசூருக்கு அதிக பலன் அளிக்கும் என்றும், பெங்களூரு நகருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறான அரசியல் பிரச்சனைகளை தாண்டி, தொழிற்நுட்ப ரீதியாகவும் இதில் சில சவால்கள் உள்ளதால், எதிர்காலத்தில் பெங்களூரு- ஓசூர் மெட்ரோ இரயில் வழித்தட சேவை சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









