விமான போக்குவரத்தைவிட புல்லட் ரயில்தான் சிறந்தது... ஏன்?
பரந்து விரிந்த நம் நாட்டு பொருளாதார வளர்ச்சியில் விரைவான போக்குவரத்து வசதி இன்றியமையாத விஷயமாக இருக்கிறது. விமான பயணங்கள் விரைவு போக்குவரத்து வசதியை வழங்கினாலும், அதில் பல நடைமுறை சிக்கல்களும், கட்டண
பரந்து விரிந்த நம் நாட்டு பொருளாதார வளர்ச்சியில் விரைவான போக்குவரத்து வசதி இன்றியமையாத விஷயமாக இருக்கிறது. விமான பயணங்கள் விரைவு போக்குவரத்து வசதியை வழங்கினாலும், அதில் பல நடைமுறை சிக்கல்களும், கட்டணமும் பலரையும் சலிப்படைய வைத்துள்ளது.

இந்த நிலையில், புல்லட் ரயில் பாதை கட்டமைப்பு நம் நாட்டில் விரிவுப்படுத்தப்பட்டால் நிச்சயம் அது பெரும்பான்மையான மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மிக அதிக முதலீடு காரணமாக சொல்லப்படுகிறது.

எனினும், சரியான வழித்தடங்களை தேர்வு செய்து புல்லட் ரயில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதுடன், சரியான கட்டணம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் புல்லட் ரயில் பாதை கட்டமைப்பு போதிய வருவாய் ஈட்டவில்லை என்ற விஷயம் முன் வைக்கப்பட்டாலும், பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ஜப்பானில் பல தசாப்தங்களாக வெற்றிகரமாக இயக்கப்படும் சின்கன்சென் புல்லட் ரயில்கள்தான் இந்தியாவிலும் இயக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில்கள் மிகவும் துல்லியமான நேரத்தில் இயக்கப்படுகின்றன. தற்போது இந்தியாவில் சராசரியாக 130 கிமீ வேகம் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், புல்லட் ரயில்கள் 320 கிமீ வேகம் வரை இயக்கப்படும். மும்மடங்கு அதிகம்.

ஒரு வினாடி கூட கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்தும் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இவை பிரத்யேக தடங்களில் மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பு வசதிகளுடன் இயக்கப்படும். எனவே, விபத்து அச்சம் மிக குறைவு. இதனால், விமானத்தைவிட குறித்த நேரத்தில் சென்றடைந்துவிடலாம்.

சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்வதற்கு இரண்டே முக்கால் மணி நேரம் பிடிக்கிறது. வீட்டிலிருந்து விமான நிலையம் செல்வதற்கான நேரம், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சோதனைகள், விமான பயண நேரம் மற்றும் சென்றடையும் இடத்திலிருந்து வெளியேறி, குறிப்பிட்ட இடத்திற்கான நேரம் என எல்லாம் சேர்த்து 5 முதல் 6 மணிநேரம் பிடிக்கிறது.

இதுவே சென்னையிலிருந்து டெல்லிக்கு புல்லட் ரயில் இயக்கப்பட்டால், 9 மணிநேரத்தில் செல்லும். இரவு சென்னையில் ஏறினால், காலையில் டெல்லி சென்றுவிடலாம். இதனால், கால விரயம் வெகுவாக மிச்சப்படும். விமானத்தில் பகல் அல்லது இரவு வேளை பயணத்தால் ஏற்படும் நேர விரயம் தவிர்க்க முடியும்.

நள்ளிரவு நேரத்தில் செல்லும்போது விமானங்களில் இருந்து இறங்கி வாடகை கார் பிடித்து தூக்கத்தை தொலைத்து நிற்பதைவிட புல்லட் ரயில் பயணம் மிக பாதுகாப்பானதாகவும், இனிமையானதாகவும் அமையும்.

சென்னை- டெல்லி இடையே ரூ.3,000 முதல் 12,000 வரை விமானக் கட்டணம் நேரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், புல்லட் ரயிலில் இவ்வாறு கட்டண மாறுபாடு இருக்காது. அதிகபட்சமாக ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையில் நிர்ணயிக்கப்படலாம். ராஜ்தானி ரயிலைவிட சற்று கூடுதல் கட்டணமாக இருக்கும். எனினும், மிக குறைவான நேரத்தில் டெல்லியை பிடித்துவிடலாம்.

இதேபோன்று, சென்னை- பெங்களூர் உள்ளிட்ட அருகாமை நகரங்களை சில மணிநேரங்களில் அடைந்துவிடலாம். கட்டணம் ரூ.1,200 வரை நிர்ணயிக்கப்படலாம். விமானத்தைவிட இது பாதியளவு குறைவானதாக இருக்கும். எனவே, முதலீடு அதிகம் இருந்தாலும், எதிர்காலத்தில் மிகச் சரியான போக்குவரத்து தீர்வாக அமையும்.

கார், பஸ், விமானங்களிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைக்கிறது. புல்லட் ரயில்கள் மின்சாரத்தில் இயங்குவதால், காற்று மாசுபடுதல் வெகுவாக தவிர்க்கப்படும். கார் பயன்பாட்டை குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

புல்லட் ரயில்களுக்கான தண்டவாளங்கள் மிக உயரிய தொழில்நுட்பத்தில் மிக வலுவானதாக தயாரிக்கப்படுகின்றன. மேலும், பெட்டிகளும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. சாதாரண ரயில்கள் போன்று அதிர்வுகள் மற்றும் குலுங்கல்கள் இருக்காது.

விமான இருக்கைகளை போன்று நெருக்கடியாக இல்லாமல், புல்லட் ரயில் இருக்கைகள் மிகவும் சவுகரியமாக இருக்கும். மிக மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினருக்கும் மிக பாதுகாப்பான போக்குவரத்தாக அமையும்.

விமானங்களில் அவசர சமயத்தில் கட்டணம் மும்மடங்கு அதிகம் என்பதுடன், அடித்து பிடித்து விமான நிலையத்திற்கு ஓடி சோதனைகளை முடித்து விமானத்தில் ஏற வேண்டும்.மும்பை- ஆமதாபாத் இடையே காலை, மாலை வேளைகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு புல்லட் ரயில் இயக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, அவசரத்தில் செல்வோருக்கு கூட ஒரு ரயிலைவிட்டாலும், அடுத்த ரயிலில் சுலபமாக செல்ல முடியும். டென்ஷன் குறையும். குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

விமான நிலையங்கள் பல்வேறு காரணங்களால் நகரங்களுக்கு 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளன. புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், புல்லட் ரயில் நிலையங்கள் நகரங்களுக்கு உள்ளாக அமைக்கப்படுவதால் நிச்சயம் விரைவாக செல்வதற்கான வாய்ப்பை பயணிகள் பெற முடியும்.

புல்லட் ரயில் கட்டமைப்பு பெரிய அளவில் அமையும்போது இதர போக்குவரத்து சாதனங்களைவிட மிகச் சிறந்த போக்குவரத்து தீர்வை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. சில நாடுகளில் புல்லட் ரயில் சேவைக்கு வந்த பிறகு குறிப்பிட்ட தடங்களில் விமான சர்வீஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டு பொருளாதாரத்தில் புல்லட் ரயில்கள் மிக முக்கிய பங்களிப்பையும், சிறந்த போக்குவரத்து தீர்வையும் வழங்கும் என்று நம்பலாம். ஆனால், அதற்கான முயற்சிகளில் அரசியல் புகுந்து விளையாடுவதே முக்கிய பிரச்னையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications