டீசல் கார்களில் அதிக புகை வருவது ஏன்?
பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களில் அதிக புகை வருவது ஏன் என்பது குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களில் புகை அதிகம் வெளியேறுவதை பார்த்திருப்பீர்கள். எதனால், டீசல் கார்களில் அதிக கரும்புகை வெளியேறுகிறது? அனைத்து டீசல் கார்களிலும் கரும்புகை வெளியேறுமா என்பது உள்ளிட்ட விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லா டீசல் கார்களுமே அதிக கரும்புகையை வெளியேற்றும் என்ற கூற்று தவறானது. சரியான பராமரிப்பில் இல்லாத டீசல் கார் மட்டுமே கரும்புகையை அதிகம் வெளியேற்றும் என்பது முதல் விஷயம்.

டீசல் கார் எஞ்சின்களின் சிலிண்டரில் பிஸ்டன்கள் மூலமாக தரப்படும் அழுத்தம் காரணமாக உண்டாகும் வெப்பத்தை பயன்படுத்தி எரிபொருள் எரிக்கப்படுகிறது. சமயத்தில் எரிபொருள் சிலிண்டருக்குள் பீய்ச்சப்பட்ட உடனே, சரியான இடைவெளியில் பிஸ்டன் இயங்க வேண்டும்.

சில சமயம் பிஸ்டன் இயக்கம் சரியான இடைவெளியில் இல்லாதபோது, கழிவு வாயு வெளியேற்றுவதற்கான வால்வு திறந்துவிடும். அப்போது, டீசல் முழுமையான அளவு எரிக்கப்படாத நிலை ஏற்படும். இவ்வாறு, முழுமையாக எரிக்கப்படாத டீசல் அழுத்தத்தில் கரும்புகையாக மாறி வெளியேறுகிறது.

இதன் காரணமாகவே, டீசல் கார் எஞ்சின்கள் முறையான பராமரிப்பில் இருப்பது அவசியம். எஞ்சினில் சிறிய பிரச்னை இருந்தால் கூட உடனுக்குடன் சரிபார்த்துவிடுவது அவசியம்.

பெட்ரோல் எஞ்சினைவிட டீசல் எஞ்சின் அதிக புகையை வெளியேற்றுவதற்கு, எஞ்சினுக்குள் செலுத்தப்படும் காற்றின் அளவும், டீசல் அளவும் சரியான விகிதத்தில் இல்லாது இருந்தாலும் அதிக புகை வெளியேறும். காற்று விகிதம் அதிகமாகவும் அல்லது டீசல் விகிதம் அதிகமாக இருப்பதும் அதிக புகை வெளியேறுவதற்கு காரணமாக அமைகிறது.

பெட்ரோலைவிட டீசலின் அடர்த்தி அதிகம் என்பது தெரிந்த விஷயம். டீசல் எஞ்சின்களில் ஃப்யூவல் இன்ஜெக்டர் எனப்படும் அமைப்பு சிலிண்டருக்குள் டீசலை செலுத்துகிறது. நாளடைவில் ஃப்யூவல் இன்ஜெக்டர் அமைப்பில் படிமானம் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டால் சரியான விகிதத்தில் டீசல் எஞ்சினுக்குள் செலுத்தப்படாத நிலை ஏற்படுகிறது.

இப்போது காற்றின் அளவு அதிகமாகவும், டீசல் அளவு குறைவாகவும் இருப்பதால் சரியான அளவு எரிபொருள் எரிக்கப்படாமல் புகையாக வெளியேறத் துவங்கிவிடும்.

எரிபொருளை போன்றே, காற்றை உட்செலுத்தும் ஏர் ஃபில்டர் அல்லது ஏர் இன்டேக் பகுதிகளில் தூசி தும்பட்டிகளால் அடைப்பு ஏற்பட்டாலும் சரியான விகிதத்தில் காற்று உட்செலுத்தப்படாத நிலை ஏற்படும். இப்போது டீசல் அளவு அதிகமாக இருக்கும். எனவே, இப்போதும் சரியான விகிதம் இல்லாததால், எரிபொருள் முழுமையாக எரிக்கப்படாமல் புகையாக வெளியேற்றப்படும்.

டீசல் எரிபொருளின் தரமும் புகை வெளியேற்றத்திற்கு அடுத்து ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. கலப்பட டீசல் காரணமாக, அதிலிருக்கும் அழுக்குகள் டீசல் டேங்க்கில் தங்க தொடங்கி, நாளடைவில் எரிபொருளின் தரம் பாதிக்கப்படும். இதனால், எஞ்சினுக்கு செல்லும் டீசலின் தரத்தில் மாற்றம் ஏற்படுவதால், தரமற்ற எரிபொருள் முழுமையாக எரிக்கப்படாத நிலையில், புகையாக வெளியேறும்.

ஃப்யூவல் பம்பில் அடைப்பு இருந்தாலும் அதிக புகை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கும். நீண்ட கால பயன்பாட்டின்போது ஃப்யூவல் பம்ப் உட்புற சுவரில் படிமானம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், சரியான அளவு எரிபொருள் செல்ல இயலாத நிலை ஏற்படும். கலப்பட டீசலை தொடர்ந்து நிரப்பும்போது இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதிக பவரை வெளிப்படுத்துவதற்காக டீசல் எஞ்சினின் இயங்கு முறைமையில் மாற்றம் செய்யும்போதும் பிரச்னை ஏற்படும். அதிக சக்தியை வெளிப்படுத்துவதற்காக எஞ்சினை ரீமேப் செய்வதால், அதிக டீசல் எஞ்சினுக்குள் செலுத்தப்படும். இதனால், சிலிண்டருக்குள் அதிக டீசல் செலுத்தப்படும்போது, அதிக புகை வெளியேற வழிவகுக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து
அதிக டார்க் திறனை வழங்குவதிலும், நீண்ட கால பயன்பாட்டிற்கும் டீசல் எஞ்சின் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கின்றன. அதேநேரத்தில், மிக நுண்ணிய தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும் டீசல் எஞ்சின்களை முறையாக பராமரிப்பு செய்தால் மட்டுமே நீண்ட கால பயன்பாட்டிற்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.

பொதுவாக எல்லோரும் நினைப்பது போல டீசல் எஞ்சின் அதிக கரும்புகையை வெளியேற்றும் என்பது தவறான கூற்றாகவே பார்க்க முடியும். முறையான பராமரிப்பில் இருந்தால் புகை பிரச்னையை தவிர்க்க முடியும் என்பது நிதர்சனம்!


Click it and Unblock the Notifications








