ரயில்களின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு தொங்கும்... இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா?
ரயில்களின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் ஏன் LV என்ற போர்டு உள்ளது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ரயில்வே இயக்கி வரும் ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பேருந்துகள், விமானங்கள் மற்றும் கப்பல்கள் என போக்குவரத்திற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் கூட, நாம் அனைவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் ரயில்களில் பயணம் செய்திருப்போம்.

ரயில்களில் பயணம் செய்யும்போது, நாம் தெரிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மில் பலரும் அவற்றை கவனிக்க தவறி விடுகிறோம். அப்படி பலரும் கவனிக்க தவறும் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைதான் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம். இந்த தகவல் நிச்சயமாக உங்களின் பொது அறிவு திறனை வளர்க்கும்.

ரயில்களின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் சிறிய போர்டு ஒன்று தொங்க விடப்பட்டிருக்கும். இதில், 'LV' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். Last Vehicle என்பதன் சுருக்கம்தான் LV. இது ரயிலின் கடைசி பெட்டி என்பதை குறிக்கிறது. LV என எழுதப்பட்ட போர்டு, ரயிலின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் தொங்கி கொண்டிருப்பதை சிலர் கவனித்திருக்கலாம். சிலர் கவனிக்காமல் போயிருக்கலாம்.

எனினும் எதற்காக இந்த போர்டு தொங்க விடப்பட்டுள்ளது? என்பது பலருக்கும் தெரியாது. இந்த போர்டுக்கு பின்னால் முக்கியமான பாதுகாப்பு காரணம் ஒன்று உள்ளது. இந்த LV போர்டு மூலம், இது ரயிலின் கடைசி பெட்டி என்பதை ரயில்வே ஊழியர்கள் தெரிந்து கொள்வார்கள். மேலும் ரயில் முழுமையாக கடந்து சென்று விட்டது என்பதையும் இது ரயில்வே ஊழியர்களுக்கு உணர்த்தும்.

ஒருவேளை இந்த LV போர்டு இல்லை என்றால், அது அவசர சூழ்நிலையாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது ரயிலில் இருந்து கடைசி பெட்டி தனியாக கழன்று சென்றிருக்கலாம். அல்லது கடைசி ஒரு சில பெட்டிகள் கூட ரயிலில் இருந்து தனியாக பிரிந்து சென்றிருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இவ்வாறான சூழல் மிகவும் ஆபத்தானது.

ஏனெனில் தனியாக பிரிந்து சென்ற பெட்டிகள் தண்டவாளத்தில் இருக்கும் நிலையில், அந்த வழியாக வரும் வேறு ரயில், அவற்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுபோன்ற அபாயங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, ரயில்களின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் LV போர்டு தொங்க விடப்படுகிறது.

ஏதாவது ஒரு ரயில்வே துறை அதிகாரியோ அல்லது ரயில்வே ஊழியர்களோ, ரயிலின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் LV போர்டை பார்க்கவில்லை என்றால், உடனடியாக அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதன் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, விபத்துக்களை தவிர்ப்பார்கள்.

LV போர்டு ஏன் இல்லை? ரயிலில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்து சென்று விட்டனவா? என்று உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே ரயில் பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் இந்த LV போர்டு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ரயில்களின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் ஏன் இந்த LV போர்டு இருக்கிறது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இதுதவிர ரயிலின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் ஒளிரக்கூடிய சிகப்பு கலர் லைட் ஒன்று இருக்கும். இரவு நேரங்களில் இந்த லைட் பயன்படுத்தப்படும். இரவு நேரங்களில் LV போர்டு தெளிவாக தெரியாது. எனவே இரவு நேரங்களில் இந்த சிகப்பு கலர் லைட் மூலமாக, இதுதான் ரயிலின் கடைசி பெட்டி என்பதை ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அறிந்து கொள்கின்றனர்.

இரவு நேரங்களில் மட்டுமல்லாது, வானிலை மிகவும் மோசமாக இருக்கும் சூழ்நிலைகளிலும், பனி மூட்டம் மிக அதிகமாக இருக்கும் சமயங்களிலும் ரயிலை தெளிவாக பார்ப்பது கடினமானது. அத்தகைய சூழல்களிலும், ரயிலின் கடைசி பெட்டி எது? என்பதை தெரிந்து கொள்வதற்கு, இந்த சிகப்பு கலர் லைட் உதவி செய்கிறது. இந்த சிகப்பு கலர் லைட் மற்றொரு விஷயத்திற்கும் பயன்படுகிறது.

பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலுக்கு, முன்னால் மற்றொரு ரயில் இருக்கிறது என்பதையும் இந்த சிகப்பு கலர் லைட் உணர்த்துகிறது. எனவே ரயில்களின் லோகோ பைலட்கள், அதாவது ரயில்களின் டிரைவர்கள் பாதுகாப்பாக செயல்பட முடியும். ரயில்களை பொறுத்தவரை, இப்படி ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் மறைந்துள்ளன.


Click it and Unblock the Notifications








