விமானங்களின் அதிகபட்ச வேகமும், அதைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களும்
விமானத்தின் பறக்கும் வேகம் பல தசாப்தங்களாக ஒரே அளவிலேயே இருக்கின்றன. இதற்கான காரணங்களை பார்க்கலாம்.
பொதுவாக வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் அதிகபட்சமாக மேக் 0.85 என்ற வேகத்தில் பறக்கின்றன. இதுபற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை பெற்று வந்தாலும், அதன் வேகம் மட்டும் கடந்த நான்கு தசாப்தங்களாக மாறவில்லை. தொழில்நுட்ப புரட்சி யுகமாக கருதப்படும் இவ்வேளையில், விமானத்தின் வேகம் மட்டும் அதிகரிக்கப்படாமல் இருப்பது பலருக்கும் ஏமாற்றம் தரும் விஷயம்தான். ஆனால், அதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன.

விமான வகை, வானிலை, பூகோள ரீதியில் நில அமைப்பை பொறுத்து விமானத்தின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு விமானம் புறப்படுவதற்கு முன்னரே, அதன் வேகம் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அதேநேரத்தில், வானிலை மாற்றத்தை பொறுத்து விமானத்தின் வேகத்தில் மாற்றம் செய்யப்படும்.

பெரும்பாலான விமானங்கள் மேக் 0.8 முதல் மேக் 0.85 என்ற வேகத்திற்குள் சராசரி வேகமாக கொண்டு பறக்கின்றன. அதாவது, ஒலியின் வேகத்திற்குள்ளாகவே பயணிக்கின்றன. போர் விமானங்கள் மட்டுமே ஒலியின் வேகத்தை தாண்டி பறக்க அனுமதிக்கப்படுகிறது.

கன்கார்டு விமானம் மணிக்கு 2,499 கிமீ வேகத்தில் பறந்து சாதனை புரிந்தது. ஆனால், அதனை இயக்குவதற்கான செலவீனம், விபத்து அபாயம் உள்ளிட்டவை அதன் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

மேலும், விமானம் பறக்கும் உயரத்தின் திறனை கொண்டும் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 10,000 அடி உயரம் வரையில் பறக்கும் வான் பகுதியை க்ளாஸ் பி என்று குறிப்பிடுகின்றனர். இந்த பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 463 கிமீ வேகம் வரை மட்டுமே பறக்க அனுமதி உண்டு. இதேபோன்று, உயரம் மற்றும் குடியிருப்பு, கடல் உள்ளிட்டவற்றை பொறுத்து வான்பகுதி வகைப்படுத்தப்பட்டு, வேகம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், பெரிய வகையிலான பயணிகள் விமானங்கள் 38,000 அடி அல்லது அதற்கு மேலும் பறக்கின்றன. இவற்றிற்கு வேக வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், மேக் 0.85 என்ற வேகத்திற்குள்தான் இவை பறக்கின்றன.

ஒலியின் வேகத்தை பயணிகள் விமானம் தாண்டும்போது அதன் எரிபொருள் சிக்கனம் வெகுவாக குறையும். இதனால், கட்டணம் இருமடங்காக நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். கன்கார்டு விமானம் சேவையிலிருந்து விலக்கப்பட்டதற்கு, அபரிமிதமான எரிபொருள் செலவும் முக்கிய காரணம்.

அடுத்து, விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் பறக்கும் விமானங்களுக்கு வேக வரம்பு உண்டு. மணிக்கு 1,235 கிமீ வேகத்தை விமானம் தாண்டும்போது 'சோனிக் பூம்' எனப்படும் அலாதி ஒலியை எழுப்பும். விமான நிலையங்கள் உள்ள பகுதிகளில் பல விமானங்கள் வந்து, செல்லும் பகுதியில் அதிகபட்சமாக 463 கிமீ வேகம் வரையில் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படும்.

விமானங்களின் வேகத்தை அதிகரிக்கும்போது அதிக அதிர்வுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், பயணிகள் சவுகரியமான பயண அனுபவத்தை பெற முடியாத நிலை இருக்கிறது. எந்தவொரு நவீன ரக விமானமும் திறன் வாய்ந்ததாக மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், அதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 950 கிமீ வேகம் என்ற அளவில்தான் இருக்கின்றன.

விமானத்தின் வேகத்தை அதிகரிக்க தொழில்நுட்பத்தில் பல்வேறு சிக்கல்களை கடந்தாக வேண்டும். அப்படி கடந்து ஒரு சில மணிநேரத்தை மிச்சப்படுத்தினாலும், கட்டணம் என்பது மிக மிக அதிகமாக இருக்கும். இது நிச்சயம் விமான போக்குவரத்து சேவை துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எனவேதான், பல தசாப்தங்களை கடந்தாலும் வேகத்தை அதிகரிக்க வல்லுனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், சூப்பர்சானிக் பயணிகள் விமானங்களை தயாரிக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை பயன்பாட்டுக்கு வரும்போது எந்தளவு நடைமுறையில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








