பிரதமர் மோடி உடன் நேரில் பேசியும் ஒண்ணும் நடக்கல... டெஸ்லா அடிப்போடுவது மொத்தமும் இதுக்காக தான்!!
டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில்தான் டெஸ்லா நுழைந்தது. இந்தியாவில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையின் பந்த்ரா பகுதியில் டெஸ்லா நிறுவனம் நிறுவிய செய்தியை எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், இந்தியாவில் முழு மனதுடன் டெஸ்லா களமிறங்கவில்லை என்பது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்த்தாலே தெரிகிறது.
அப்படி என்ன மாதிரியான செயல்பாடுகளில் டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் சுருக்கமாக அலச போகிறோம். இந்தியாவில் டெஸ்லா இந்த 2025ஆம் ஆண்டில் நுழைந்தது என்பதுதான் காலத்திற்கும் நிற்க போகிறது என்றாலும், இந்திய மார்க்கெட்டில் நுழையும் யோசனையில் 2016ஆம் ஆண்டிலேயே டெஸ்லா இறங்கிவிட்டது.

2016இல் டெஸ்லா அதன் விலை குறைவான எலக்ட்ரிக் காரான மாடல் 3 (Model 3)-க்கான ப்ரீ-புக்கிங்கை (Pre-booking) இந்தியாவில் துவங்கியதை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதாவது, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாடல் 3 எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து இங்கு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்வதுதான் டெஸ்லாவின் முதற்கட்ட திட்டமாக இருந்தது.
அந்த திட்டத்தை தான் தற்போது 2025ஆம் ஆண்டிலும் டெஸ்லா செயல்படுத்தி உள்ளது என்றாலும், இதற்கு இடைப்பட்ட 9 வருட காலத்தில் மத்திய அரசின் சலுகை உடன் இந்திய மார்க்கெட்டில் நுழைய டெஸ்லா எவ்வளவோ முயற்சிகளை செய்தது. மத்திய அரசும், உலகின் நம்பர் எலக்ட்ரிக் கார் நிறுவனமாக விளங்கும் டெஸ்லா இந்தியாவிற்கு வர விரும்புவதை சந்தோஷமான செய்தியாகவே பார்த்தது.

ஆனால், அதற்காக டெஸ்லாவிற்கென பிரத்யேகமாக எந்த சலுகையையும் வழங்க மத்திய அரசு விரும்பவில்லை. எந்த விஷயத்தில் மத்திய அரசிடம் இருந்து டெஸ்லா சலுகையை இப்போதும் எதிர்பார்க்கிறது என்றால், இந்தியாவில் பொதுவாகவே வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பெரிய அளவிலான வரி விதிக்கப்படுகிறது. வாகனங்களை பாகங்களாக கொண்டுவந்து இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்யும் பட்சத்தில் அதற்கேற்ப சற்று குறைவான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
வாகனங்களை முழுவதுமாக இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இந்த வரி விதிப்புக்கு காரணம் ஆகும். ஆனால், இது டெஸ்லா நிறுவனத்துக்கு பிடிக்கவில்லை. இந்தியாவில் இறக்குமதி வரி மிகவும் அதிகமாக விதிக்கப்படுவதாக 2017ஆம் ஆண்டிலேயே டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (Elon Musk) டுவிட்டரில் ஆதங்கத்துடன் தெரிவித்து இருந்தார்.

அதன்பின்பும், இந்திய வருகை குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் இந்த காரணத்தையே அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, எலான் மஸ்க்கிற்கும், பிரதமர் மோடிக்கும் இடையே இருமுறை நேரில் கலந்துரையாடல் கூட நடந்தது. இன்னும் சொல்லப்போனால், ஒருமுறை மோடி அவர்கள் நேரடியாகவே அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் தொழிற்சாலையை கூட நேரில் சென்று பார்வையிட்டு, எலான் மஸ்க் உடன் கலந்துரையாடினார்.
ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை என்பது தற்போது சுமார் ரூ.60 லட்சத்தில் மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதில் இருந்து தெரிகிறது. ஏனெனில், அமெரிக்காவில் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் இதில் பாதி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரியை அப்படியே இந்திய மக்களிடம் இருந்து காருக்கான விலையாக பெற்று சரிச்செய்துக் கொள்ளும் முயற்சியில் டெஸ்லா இறங்கி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லாவின் இந்த முடிவை அதன் நிரந்தர முடிவாக நாம் முடிவு செய்துவிட முடியாது. ஏனெனில், இந்திய சந்தையை ஆழம் பார்ப்பதற்காக கூட தற்போதைக்கு இந்த முடிவில் டெஸ்லா இறங்கி இருக்கலாம். இந்தியாவில் தொழிற்சாலையை டெஸ்லா அமைத்துவிட்டாலே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். ஆனால், தொழிற்சாலையை அமைக்கும் அளவிற்கு பெரிய முதலீட்டை இந்தியாவில் கொட்ட வேண்டுமா என்பதுதான் டெஸ்லாவின் தயக்கமாக உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications









